தர்மயுத்த காலம் முதல் விசுவாசி ராமநாதபுரம் தர்மர்.. எடப்பாடியுடன் மல்லுக்கட்டி சாதித்த ஓபிஎஸ்!
சென்னை: அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்களாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலாளரும் தற்போதைய முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளருமான தர்மர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமது ஆதரவாளர் ஒருவருகு எப்படியும் ராஜ்யசபா சீட் பெற்றுத் தந்தே ஆக வேண்டும் என்பதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போராடி வென்றுள்ளார் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் (ஓபிஎஸ்) இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் (ஈபிஎஸ்) இருந்து வருகின்றனர். ஆனாலும் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கைதான் ஓங்கி இருக்கிறது என்பது வெளிப்படையான ஒன்று.
ஜெ. பாணி... சி.வி.சண்முகத்துக்கு டிக்கெட்! மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்களை அறிவித்த அதிமுக
அதிமுக மோதல்
சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் தொடங்கி, சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் எதிர்க்கட்சி வேட்பாளர் யார் என்பது வரையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையேயான அக்கப்போர் நாடறிந்த ஒன்றுதான். அதிமுக வேட்பாளர் பட்டியலில் கூட ஈபிஎஸ் கைதான் ஓங்கி இருந்தது. அப்போது சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என ஓபிஎஸ் கோஷ்டி பிடிவாதம் பிடித்தது. இதனால் இரு அணி தலைவர்களும் தனி ஆவர்த்தனமாகவே பிரசாரம் செய்தனர்.
மீண்டும் மல்லுக்கட்டு
சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக அதிமுக தலைமை அலுவலக கூட்டங்களில் களேபரங்களே நடந்தன. அதிமுக மீண்டும் உடையும் என்றெல்லாம் ஆரூடங்கள் பறந்தன. ஒருவழியாக எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவரானார். அப்போதும் கூட எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஓபிஎஸ் ஏற்க மறுத்து வந்தார். ஒருவழியாக இருவரும் பின்னர் சமாதானமாகினர்.
ராஜ்யசபா தேர்தல்
பின்னர் அதிமுக உட்கட்சி தேர்தல்களிலும் இருதரப்பும் சரிக்கு சமமாக மல்லுக் கட்டியது. இந்த நிலையில் ராஜ்யசபா தேர்தல் ஜூன் 10-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதிமுகவில் ஜெயலலிதா காலத்தில் இப்படியான தேர்தல்களில் யாருமே எதிர்பார்க்காத வகையில் முன்கூட்டியே வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை எல்லோரும் அதிமுகவின் வேட்பாளர்கள் யார் என்பதற்காக காத்திருந்தனர்.
சாதித்த ஓபிஎஸ்
அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவருமே தங்களது ஆதரவாளர்களுக்காக சீட் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். ஈபிஎஸ் தரப்பு அதிமுகவுக்கான 2 இடங்களையும் தமக்கே என போர்க்கொடி தூக்கியது ஆனால் இந்த இடத்தில் ஓபிஎஸ் விட்டுக் கொடுக்க இம்மியளவும் தயாராக இல்லை. இதனால் அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்களை அறிவிப்பதில் நீண்ட இழுபறி நிலவியது. இப்போது அதிமுகவின் ராஜ்யசபா வேட்பாளர்களாக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலாளர் தர்மர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். சி.வி.சண்முகம், ஈபிஎஸ் ஆதரவாளர்; தர்மர், ஓபிஎஸ் ஆதரவாளர்கள். அதிமுகவில் ஓபிஎஸ், தர்மயுத்தம் தொடங்கிய காலம் முதலே உடன் நிற்பவர். அதனால் தர்மருக்கு போராடி வாய்ப்பை பெற்றுத் தந்திருக்கிறார் ஓபிஎஸ்.