அதிமுகவில் ஒற்றைத் தலைமை.. திடீர்ன்னு மூக்கை நுழைத்த காங்.. என்ன திருநாவுக்கரசர் இப்படி சொல்றாரு?
சென்னை: அதிமுக ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்படுவது ஜனநாயக ரீதியாக நாட்டிற்கும், கட்சிக்கும் நல்லது என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அதிமுக பொதுக்குழு கடந்த 23ம் தேதி வரலாறு காணாத குழப்பங்களுடன் முடிவடைந்தது. 50 ஆண்டுகால அதிமுக வரலாற்றில், தொடங்கிய 30 நிமிடத்தில் முடிந்த முதல் பொதுக்குழு என்ற பெயரும் பெற்றுள்ளது. அத்துடன் கட்சியின் தீர்மானக் குழு உருவாக்கிய தீர்மானங்களையே பொதுக்குழு ஒட்டுமொத்தமாக நிராகரித்த வினோதமும் முதல்முறையாக நிகழ்ந்தது. பொதுக்குழு கூட்டம் முடிவடைந்த பிறகும், அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் பரபரப்பிலேயே உள்ளது.

ஓபிஎஸ் - இபிஎஸ்
ஒருபக்கம் குரியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்முவின் வேட்பு மனுத்தாக்கலை காரணமாக கூறி ஓபிஎஸ் டெல்லி சென்றுள்ளார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பிரச்னைகள் குறித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி, ஆதரவாளர்களான சிவி சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரை வைத்து ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாக அறிவிக்க வைத்துள்ளார். இதனால் அதிமுக தொண்டர்களே என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

என்ன நடக்கும்?
இதனிடையே வரும் ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் கூடும் என்று இபிஎஸ் தரப்பில் அறிவித்துள்ள நிலையில், பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோருக்கு மட்டுமே உள்ளது என்று ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இதனால் பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து மீண்டும் நீதிமன்றம் படியேற ஓபிஎஸ் செல்வார் என்று கூறப்படுகிறது.

திருநாவுக்கரசர் கருத்து
இந்தநிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர், ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சி எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவுக்கு பிரதான எதிர்க்கட்சி வலுவாக இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லது. அதிமுகவில் யார் இருக்க வேண்டும் என்பதைக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம். ஆனால் ஒரு கட்சி வலுவாக செயல்படுவதற்கு ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்படுவது தான் நல்லது என்று தெரிவித்தார்.
Recommended Video

இரட்டைத் தலைமையே இல்லை
தொடர்ந்து இந்தியாவில் தேசிய அளவிலும் சரி, மாநில அளவிலும் சரி, எந்த கட்சியாக இருந்தாலும் ஒருவர் தான் தலைவராக இருப்பார். இரட்டைத் தலைமை எந்த கட்சியிலும் நடைமுறை கிடையாது. அதிமுக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் ஆட்சியிலிருந்த கட்சி. தற்போது பிரதான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் ஒருவரின் தலைமையில் கட்சி இயங்குவது ஜனநாயக ரீதியாக அந்த கட்சிக்கும் நாட்டிற்கும் நல்லது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications