திருச்சி - துபாய்: 145 பயணிகளுடன் சென்ற விமானம் திருப்பி விடப்பட்டது! இஸ்ரேல் ஈரான் போரால் ரிட்டர்ன்
சென்னை: திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்டு சென்ற விமானம் மீண்டும் திருச்சிக்கே திருப்பி விடப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து இன்று 12.45 மணியளவில் 145 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற விமானம் இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக ஐக்கிய அரபு அமீகரத்தில் வான் வழி மூடப்பட்டதால் இந்த விமானம் மீண்டும் திருச்சிக்கே திருப்பி விடப்பட்டது.
ஈரான் மீது இன்று இஸ்ரேல் திடீரென தாக்குதலை தொடங்கியுள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானை குறிவைத்தும், தெற்கு ஈரான் பகுதிகளிலும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டாக தாக்குதல் நடத்தின. குறிப்பாக அமேனி இல்லம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

எனினும் கமேனி அதற்கு முன்பாகவே வேறு இடத்திற்கு பத்திரமாக அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியானது. தெற்கு ஈரானில் ஒரு பள்ளி மீது தாக்குதல் நடத்தியதில் பள்ளி மாணவிகள் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஈரானும் பதில் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரானும் 5க்கும் மேற்பட்ட நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி பல்வேறு நாடுகளில் வான் பரப்புகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தான் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று துபாய்க்கு திருச்சியில் இருந்து இன்று மதியம் புறப்பட்டு சென்றது.
மதியம் 12.45 மணியளவில் சுமார் 145 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது. தொடர்ந்து வான் பரப்புகள் மூடப்பட்டதால் உடனடியாக இந்த விமானம் மீண்டும் திருச்சிக்கே திருப்பி விடப்பட்டது. துபாய் வான் பரப்பை நெருங்கிய நிலையில் இந்த விமான திருப்பி விடப்பட்டது. இஸ்ரேல் ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
யுஏஇ, சவுதி, கத்தார், ஓமன் மற்றும் இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக் ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோன்று துருக்கி ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்வேஸ், ஏர் பிரான்ஸ், நார்வே, லுஃப்தான்ஸா, ஜப்பான் ஏர்லைன் நிறுவனங்களும் விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.












Click it and Unblock the Notifications