அடடே அவரா.. தேநீர் விருந்தில்.. யாருமே எதிர்பார்க்காத சப்ரைஸ் நபர்! ஆளுநரை பார்த்ததும் செம ஹேப்பி
ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ரவி இன்று கொடுத்த தேநீர் விருந்தில் பல அரசியல் கட்சிகள் கலந்து கொண்டனர். அப்போது அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் கலந்து கொண்ட மற்றொரு பிரபலத்தின் வீடியோ இப்போது வெளியாகியுள்ளது.
பாஜக ஆளாத பெரும்பாலான மாநிலங்களில் அங்குள்ள மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
கேரள, மேற்கு வங்கம், தெலங்கானா எனப் பல மாநிலங்களை இதற்கு சொல்லலாம். ஆளுநர்கள் தங்கள் அரசுகளுக்கு ஒத்துழைப்பை அளிப்பதில்லை என்று மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ளவர்கள் சொல்லி வருகிறார்கள்.
ஆளுநர் தேநீர் விருந்து.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கைகொடுத்த அண்ணாமலை.. ராஜ் பவனில் சுவாரஸ்யம்!
மோதல் போக்கு
தமிழ்நாட்டிலும் கூட இதே நிலை தான்.. தமிழ்நாட்டில் ஆளுநர் ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. தமிழ்நாடு ஆளுநர் பொதுவெளியில் சொல்லும் பல கருத்துகளுக்குக் கூட்டணிக் கட்சிகள் பதிலளித்து வருகின்றனர். மேலும், தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை உட்பட பல மசோதாக்களுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என்றும் திமுக உட்பட கூட்டணிக் கட்சிகள் கூறுகின்றன.
தமிழ்நாடு சட்டசபை
இந்தச் சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாநிலத்தின் முதல் சட்டசபைக் கூட்டம் தொடங்கிய நிலையில், அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்துக் கொடுத்த உரையை அப்படியே முழுமையாக வாசிக்கவில்லை. அவர் குறிப்பிட்ட சில வாக்கியங்களை நீக்கியிருந்தார். மேலும், தமிழ்நாடு, அண்ணா, பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட வார்த்தைகளையும் தவிர்த்திருந்தார். இதற்கு அப்போதே திமுக உட்பட கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், ஆளுநர் வாசித்த உரை அவைக் குறிப்பில் இடம் பெறாது என்று முதல்வர் தீர்மானத்தையும் கொண்டு வந்தார்.
தேநீர் விருந்து
இதனால் முதல்வர் பேசிக் கொண்டிருந்த போதே ஆளுநர் ரவி, சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தேநீர் விருந்து நடைபெற்றது. பொங்கல் விழாவுக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசு என்ற வார்த்தையும் மாநில அரசின் இலச்சினை இல்லாமல் இருந்த நிலையில், குடியரசு தின விழா அழைப்பிதழில் இரண்டுமே இருந்தது.
ஆளுநர் மாளிகை
இருப்பினும், ஆளுநரின் போக்கை எதிர்த்து தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் அறிவித்தன. இந்த்ச சூழலில் தான் இன்று மாலை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய தேநீர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைகொடுத்து பரஸ்பர வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
அதேபோல ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் ஆலோசனைக் கூட்டம் காரணமாக இந்தத் தேநீர் விருந்தில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் கந்து கொண்டார். இதனிடையே இந்த தேநீர் விருந்தில் அரசியல் தலைவர்களைத் தாண்டி சில முக்கிய நபர்களும் கலந்து கொண்டு இருந்தனர். அதன்படி இந்த தேநீர் விருந்தில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பங்கேற்றார். இது தொடர்பான படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
கலந்துரையாடினார்
தேநீர் விருந்தில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஆளுநர் ரவியுடன் சில நொடிகள் கலந்துரையாடினார். அதைத் தொடர்ந்து அருகே இருந்த அவரது மனைவியுடனும் பேசினார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவியை சந்தித்திருந்தார். அப்போது அரசியல் குறித்துப் பேசியதாக அவரே சொல்லி இருந்தது நினைவுகூரத்தக்கது.