இரவில் உணவு டெலிவரி வேலை.. ரூ 3500 கொடுத்து துணிவு டிக்கெட்.. இறந்த ரசிகர் பரத்குமாரின் மறுபக்கம்
சென்னை: சென்னை கோயம்பேடு அருகே உள்ள ரோகிணி தியேட்டர் அருகே லாரியில் நடனமாடிய அஜித் ரசிகர் பரத்குமார் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து அவருடைய உறவினர்கள் "கையெடுத்து கும்பிடுகிறோம். உங்கள் ரசிகர்களை ஒழுங்குப்படுத்துங்கள்" என நடிகர்கள் அஜித், விஜய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தங்களுக்கு பிடித்த நடிகரின் படம் என்றால் அது எத்தனை ஆயிரம் டிக்கெட் என்றாலும் டிக்கெட் எடுத்து பார்க்கும் நிலை தற்போதைய இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இத்தனை ரசிகர்கள் ஒன்று சேர்ந்து சினிமா பார்க்கும் போது அவர்களின் கூச்சல், விசில் சப்தத்தாலும் கைதட்டல்களாலும் சினிமாவை ஒழுங்காக கூட பார்க்க முடியாது.
அப்படியிருந்தும் கஷ்டப்பட்டு தாய், தந்தையரோ இல்லை அவர்களாகவோ வியர்வை சிந்தி உழைத்து சேர்த்த பணத்தை இப்படி வாரி இரைத்து படம் பார்க்க வருகிறார்கள். சரி ஏதோ ஆசைக்கு வருகிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் சாலையில் பொது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்துவது, அட்டகாசம் செய்வது, கும்மாளம் அடிப்பது, உயரமான கட் அவுட் மீது ஏறுவது, ரசிகரின் புகைப்படத்தை கட்டுவது உள்ளிட்ட செயல்களால் அவர்களுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் இன்னல்கள் ஏற்படுகின்றன.
3 மேஜர் பாயிண்ட்..நடிகர் சுதீப்பை காங்கிரஸ் குறி வைப்பது ஏன்? கர்நாடகா தேர்தலில் ‛கை’ பிளான் இதுதான்
அஜித் நடித்த துணிவு
இப்படித்தான் நேற்றைய தினம் அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு படங்கள் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாகின. நடிகர்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்தாலும் ரசிகர்கள் எப்போதும் எலியும் பூனையுமாகத்தான் இருப்பார்கள். பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தை தங்கள் தளபதியும் தலயும் பெற வேண்டும் என போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட் வாங்கி சினிமா தியேட்டருக்கு வந்தனர்.
கோயம்பேடு தியேட்டர்
அப்படி கோயம்பேடு அருகே உள்ள ரோகிணி தியேட்டருக்கு வந்தவர்தான் சிந்தாதிரிபேட்டை ரிச் தெருவை சேர்ந்தவர் பரத்குமார். அஜித் ரசிகரான இவர் தனது நண்பர்களுடன் லாரி மீது ஏறி நடனமாடினார். அப்போது லாரியில் இருந்து குதிக்க முயன்ற போது நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து அவருடன் வந்தவர்கள் அவரை அழைத்து கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.
முதுகுதண்டுவடம்
அங்கு அவருக்கு முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பரத்குமார் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கோயம்பேடு போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பரத்குமாரின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை, தாய் கூலி வேலை செய்து வருகிறார். தனது தாய்க்கு உதவி செய்ய பரத்குமாரும் கிடைத்த வேலைகளை செய்து வந்தார். இதன் மூலம் தனது இளைய சகோதரி, சகோதரனுக்கு கல்லூரி கட்டணத்தையும் செலுத்தினாராம்.
இரவு நேரத்தில்
இரவு நேரத்திலும் உணவு டெலிவரி செய்து சிறுக சிறுக பணத்தை சேர்த்து குடும்பத்திற்கு கொடுத்தது போக மீதமுள்ள ரூ 3500 பணத்தை துணிவு படத்தை பார்க்க டிக்கெட் எடுத்துள்ளார். ஆனால் படம் பார்ப்பதற்குள் அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார். இன்று பரத்குமார் இல்லாமல் அவருடைய குடும்பம் தவித்து வருகிறது. இதுகுறித்து அவருடைய உறவினர் ஒருவர் கூறுகையில் எந்த சினிமா ஸ்டாராக இருந்தாலும் நான் கேட்பது எல்லாம் ஒன்றுதான்! தயவு செய்து உங்கள் ரசிகர்களை ஒழுங்குப்படுத்துங்கள். போன உயிர் திரும்பி வராது, அந்த உயிரின் மதிப்பும் உங்களுக்கு தெரியும் என கையெடுத்து கும்பிட்டு கேட்டுள்ளார்.