மதுரை உட்பட.. நாடு முழுக்க 23 எய்ம்ஸ் மருத்துவமனைகள் பெயர் மாற்றம்- மத்திய அரசு பிளான்
சென்னை: மதுரையில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை உட்பட நாடு முழுவதும் உள்ள 23 எய்ம்ஸ் மருத்துவமனைகளின் பெயரை மாற்றுவதற்கு மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Recommended Video
மதுரை மாவட்டம் தோப்பூரில் கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார்.
தோப்பூரில் 224.24 ஏக்கர் பரப்பளவில் உயர் மருத்துவ வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனை 750 ஏக்கர் படுக்கைகளுடன் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணி எப்போது தொடங்கும்? மா.சுப்ரமணியன் சொன்னது இதுதான்!
முடங்கி கிடக்கும் பணி
இதன் கட்டுமானப் பணிகள் 45 மாதங்களில் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகள் கடந்த பிறகும் சுற்றுச்சுவரை தவிர்த்து வேறு எந்த பணிகளும் நடக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அதேநேரம் நடப்பாண்டிற்கான எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.
தற்போதைய நிலை
மருத்துவமனைக்கான வரைபடம் தயாரிக்கும் பணி நிறைவடைந்துவிட்டதாக அண்மையில் தெரிவித்த மத்திய அரசு, ரூ.1,977 கோடி மொத்த நிதியில் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டதாகவும் மீதம் உள்ள நிதி அக்டோபர் 26 ஆம் தேதிக்குள் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த மே மாதம் இதற்கான திட்ட அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டது.
2028ல் எய்ம்ஸ் மருத்துவமனை
அதில், "2023 ஆம் ஆண்டு வரை, எய்மஸ் மருத்துவமனை கட்டிடத்திற்கான வரைபடத்திற்கான அனுமதி மற்றும் சுற்றுச்சூழல் ஆணையத்தின் அனுமதி ஆகியவற்றை பெறும் பணிகள் நடைபெறும். 2026 ஆம் ஆண்டு வரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் நடைபெற்று 2028 ஆம் ஆண்டு முதல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையில் முழுமையாக மக்களின் பயன்பாட்டுக்கு வரும்." என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெயர் மாற்றம்
இந்த நிலையில் மதுரையில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை உட்பட நாடு முழுவதும் உள்ள 23 எய்ம்ஸ் மருத்துவமனைகளின் பெயரை மாற்றுவதற்கு மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உள்ளூர் சுதந்திர போராட்ட வீரர்கள், மறைக்கப்பட்ட தியாகிகள், வரலாற்று நினைவு சின்னங்களின் பெயரை மருத்துவமனைகளுக்கு வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
புதிய மருத்துவமனைகள்
இதில் ஒவ்வொரு பிரிவுகளிலும் 4 பெயர்களை பரிந்துரைக்கலாம் என்றும், மருத்துவமனைகளுக்கு இந்த பெயர்களை சூட்டுவதற்காக காரணம் குறித்து விளக்கம் தர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே செயல்பட்டில் இருக்கும் மருத்துவமனைகள் மட்டுமின்றி புதிதாக அமைக்கப்படும் மதுரை, போபால், புவனேஷ்வர், ஜோத்பூர், நாக்பூரில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கும் இந்த பெயர் மாற்றம் பொருந்துமாம்.