ஒ.செ பதவிக்கு 1 லட்சம்..நகரம்னா 10 லட்சம்! பதவி ஆசை காட்டி கல்லா கட்டும் மா.செ.கள்! தவிப்பில் தவெக.!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் 95 சதவீத மாவட்ட செயலாளர் பதவிகள் நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அடுத்ததாக மாநகர், நகர், ஒன்றிய அளவிலான பதவிகள் நிரப்பப்பட இருக்கிறது. இந்த நிலையில் பல மாவட்டங்களில் நகரச் செயலாளர் பதவிக்கு 10 லட்சம், ஒன்றிய செயலாளர் பதவிக்கு ஒரு லட்சம் என பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதுகுறித்து சில நிர்வாகிகளிடம் பேசிய போது மாவட்ட செயலாளர் பதவிக்கு விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் புதிய நபர்களை சேர்க்க பணம் வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பல ஆண்டுகள் ரசிகர் மன்றத்தில் இருந்து உழைத்தவர்கள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்திருக்கிறது.
சினிமாவில் இருந்து அரசியலில் குதித்திருக்கும் விஜய் முழு நேர அரசியல்வாதியாக தயாராகி வருகிறார். தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து வரும் நிலையில் இன்னும் 25 நாட்களில் அவர் முழு நேர அரசியலுக்கு திரும்புவார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

இது ஒரு புறம் இருக்க மாநில நிர்வாகிகள் நியமனம், மாவட்ட செயலாளர்கள் நியமனம், தமிழக வெற்றி கழகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஐந்து கட்டங்களாக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகி இருக்கும் நிலையில் தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களை தவிர்த்து அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.
தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு மண்டல வாரியாக ஆய்வு செய்வது, முக்கிய பிரச்சனைகள் இருக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களை சந்திப்பது என கள அரசியலை தீவிர படுத்த விஜய் உத்தரவிட்டிருக்கிறார். இது ஒரு புறம் இருக்க மாவட்ட செயலாளர்கள் பட்டியலில் இதுவரை தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் நியமனம் நடைபெறாமல் இருப்பது கட்சி நிர்வாகிகளை குழப்பமடைய செய்திருக்கிறது.
ஏற்கனவே பல ஆண்டுகளாக ரசிகர் மன்றத்தில் இருந்தவர்கள் பதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் சில மீடியாக்களையும் சமூக வலைதளங்களையும் கையில் போட்டுக்கொண்டு விளம்பர வெளிச்சம் கொடுத்தவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்க இருப்பதாகவும் அதற்கு ரசிகர் மன்றத்திலிருந்து விஜய் உடன் பயணித்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே சில மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை.
இது ஒருபுறம் இருக்க மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், மகளிர் அணி, தொண்டர் அணி, இளைஞரணி, மருத்துவர் அணி, இலக்கிய அணி, குழந்தைகள் நல அணி, திருநர் அணி என 28 அணிகளுக்கும், அதற்கு தலைவர், செயலாளர், அமைப்பாளர் பொறுப்புகள் வழங்கப்பட இருக்கிறது. இதனால் எப்படியாவது தங்களுக்கு ஒரு பதவியாவது கிடைத்துவிடும் என உற்சாகத்தில் இருக்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர். இதற்கிடையே பூத் கமிட்டி அமைப்பது மாநகர், நகர், ஒன்றியம், கிளைக் கழகம் வரை நிர்வாகிகள் நியமத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் மாநகரச் செயலாளர் பதவி என்றால் 15 லட்சமும், நகர் கழக செயலாளர் என்றால் 10 லட்சமும், ஒன்றிய செயலாளர் பதவி என்றால் ஒரு லட்சமும் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. குறிப்பாக விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பண வசூல் நடப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இது குறித்து சில நிர்வாகிகளிடம் நாம் நேரடியாகவே பேசினோம்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் ரசிகர் மன்றத்திலிருந்து, அதற்கு பிறகு விஜய் மக்கள் இயக்கத்தில் இணைந்து, தற்போது கட்சியிலும் உறுப்பினர் அட்டை பெற்று வைத்திருக்கின்றனர். மேலும் மாவட்ட தலைவர்களுடன் அவர்கள் தொடர்பிலும் இருந்திருக்கிறார்கள். இது தொடர்பாக கடந்த ஆண்டுகளில் அவர்கள் அடித்த போஸ்டர்கள், புகைப்படங்கள், திருமண அழைப்பிதழ்கள் ஆகியவற்றையும் வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் நாம் பேசிய போது," விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னால், அவர் அரசியலுக்கு வருவார் என்பது தெரிவதற்கு முன்னால் அவர் காதலுக்கு மரியாதை படத்தில் நடித்ததில் இருந்தே தீவிர ரசிகர்களாக நாங்கள் இருக்கிறோம்.
ஒவ்வொரு முறை விஜய் படம் வெளியாகும் போது போஸ்டர் அடிப்பதில் தொடங்கி அன்னதானம் வழங்குவது வரை நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டு வந்தோம். ஆனால் எங்கள் மாவட்டத்தில் (திண்டுக்கல்) மாவட்ட செயலாளர் ஆக ரசிகர் மன்றத்தில் இருந்து வந்த தர்மா நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது எங்களுகு சந்தோஷம் தான். ஆனால் பிற பகுதிகள் மாவட்டச் செயலாளர்கள் யார் என்று எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் பார்த்ததும் இல்லை.
நேற்று வந்த சின்னப் பையன்கள் எல்லாம் 10 பேரை கூட்டிக் கொண்டு ஊர் ஊராகச் சென்று கொடியேற்றுகிறார்கள். ஆனால் 30 ஆண்டுகளாக விஜய்க்காக சண்டை போட்டு, சில சமயங்களில் ஜெயிலுக்கும் சென்ற நாங்கள் வாட்ஸ் அப்பில் அவர்கள் ஸ்டேட்டசை பார்த்து புலம்புவதை தவிர வேறு வழியில்லை. விஜய் எப்படி இந்த நிர்வாகிகள் நியமனம் செய்தார் என எங்களுக்கும் தெரியவில்லை. பதவி கேட்டு போனால் எங்களை விட வயதிலும், தகுதியிலும் குறைந்தவர்கள் தான் முதல் வரிசையில் இருக்கிறார்கள். வெளியில் விசாரித்த போது தான் அவர்கள் பணம் தருவதாக கூறி பதவி பெறுவதாக கூறுகின்றனர் என்கின்றனர். மேலும் இப்படியே போனால் நிச்சயம் நாங்கள் தக்க ஆதாரங்களுடன் தலைமைக்கும் மீடியாக்களிடமும் உண்மை நிலவரத்தை தெரிவிப்போம்" என்கின்றனர் சற்று கோபமாகவே..












Click it and Unblock the Notifications