குஷ்புவுக்கு ஏன் இந்த அவசரம்.. அம்பேத்கர் படம்.. திமுகவை விமர்சித்து..கடைசியில் இப்படி ஆகிடுச்சு!
சென்னை: நீதிமன்றத்தில் அம்பேத்கர் படம் இருக்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டதற்காக சம்பந்தமே இல்லாமல் திமுக அரசை விமர்சித்த பதிவை நீக்கி இருக்கிறார் நடிகை குஷ்பு.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றகளில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் உருவப்படங்களை தவிர மற்ற எவரது படங்களையும் வைக்கக் கூடாது என அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

டாக்டர் அம்பேத்கர் மற்றும் சம்மந்தப்பட்ட வழக்கறிஞர் சங்கங்களின் மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோரின் உருவப்படங்களைத் திறக்க அனுமதி கோரி பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை நிராகரித்து, கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி நடத்தப்பட்ட உயர் நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எம்.ஜோதிராமன் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.
அதில் ஆலந்தூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் படத்தை அகற்ற ஆலந்தூர் நீதிமன்ற வழக்கறிஞர்களிடம் வலியுறுத்தும்படி காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட நீதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் பல்வேறு இடங்களில் மோதல் மற்றும் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் வகையில் தேசிய தலைவர்களின் படங்களும், சிலைகளும் வைக்கப்பட்ட சம்பவங்கள் சுட்டிக்கட்டி, மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் படங்களை தவிர மற்ற எவரது படங்களை வைக்க அனுமதிக்கக் கூடாது என 2008, 2010, 2011, 2013, 2019ஆம் ஆண்டுகளில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதை சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், அம்பேத்கரின் உருவப்படத்தை அகற்ற ஆலந்தூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தை வற்புறுத்துமாறு காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட நீதிபதிக்கு கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி முழு நீதிமன்றம் உத்தரவிட்டு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்களில் அவரது படத்தை வைக்கக் கோரிய கடலூர் வழக்கறிஞர் கோரிக்கையை நிராகரித்தது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்ட நீதித்துறை தலைவர்களும் அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், அதை மீறுவோர் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் தகுந்த புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் உயர்நீதிமன்ற பதிவாளரின் சுற்றறிக்கைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதேபோல் வழக்கறிஞர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.சட்டம் இயற்றிய அம்பேத்கர் படத்தை நீதிமன்றங்களில் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு, சம்பந்தேமே இல்லாமல் திமுகவை விமர்சித்து இருந்தார். இந்த பதிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு திமுகவை விமர்சிப்பது தவறு என்று சுட்டிக்காட்டினர்.இதையடுத்து குஷ்பு உடனடியாக தனது பதிவினை டெலிட் செய்தார். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications