உலக மந்த நிலை.. சட்டென நீக்கப்படும் ஊழியர்கள்.. நோட்டீஸ் பீரியட் ஏன் முக்கியம்? சமாளிப்பது எப்படி?
சென்னை: தற்போது உலகளாவிய மந்த நிலை ஏற்பட்டு வரும் நிலையில் பல நிறுவனங்களில் ஊழியர்கள் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வேளையில் நோட்டீஸ் பீரியட் ஏன் முக்கியம்? அதனை சமாளிப்பது எப்படி? என்பது பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாக உள்ளது.
உலகளாவிய நாடுகளில் Recession எனும் உலகளாவில் பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் உள்ளிட்டவற்றால் பெரிய பெரிய நிறுவனங்கள் கூடும் பொருளாதார இழப்பை சந்திக்க தொடங்கி உள்ளன.
வளர்ந்த நாடுகளாக அறியப்படும் பிரிட்டனில் பொருளாதார மந்த நிலை புதிய உச்சத்தில் உள்ளது. அமெரிக்காவிலும் நாள்தோறும் பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் உள்ளிட்டவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
வெந்து தணியாத காங்கிரஸ்.. ஆர்எஸ்எஸ் கைகூலி! கே.எஸ்.அழகிரி ராஜினாமா செய்யுங்க! கடலூரில் கலக போஸ்டர்
பொருளாதார மந்த நிலை
மேலும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையும் உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பல நாடுகளில் பொருளாதாரத்தின் நிலைத்தன்மை என்பது நிச்சயமற்ற நிலையில் தான் உள்ளது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. கொரோனா பரவலில் தொடங்கிய பொருளாதார மந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை தாண்டி தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் பல நிறுவனங்கள் தங்களின் செலவினங்களை குறைக்கவும், பொருளாதார இழப்பை சரிசெய்யவும் திட்டமிட்டு வருகின்றன.
ஆட்குறைப்பு நடவடிக்கை
அந்த வகையில் தான் தற்போது உலக பெரும் பணக்காரராக உள்ள எலான் மஸ்க் உள்பட பைஜூஸ் நிறுவனம் வரை ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ட்விட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க் எந்த வித முன்னறிவிப்பு இன்றியும் பணியாளர்களை அதிரடியாக நீக்கம் செய்து வரும் வேளையில் சில நிறுவனங்கள் பணியாளர்களுக்கு மதிப்பளித்து வேலை நீக்கம் தொடர்பான அறிவிப்பை முறையாக அறிவித்து ஷாக் கொடுத்து வருகிறது.
பணியாளர்கள் நீக்கம்
இவ்வாறு பணியாளர்கள் நிறுவனங்களில் இருந்து நீக்கம் செய்யப்பட்டாலும் கூட சில நிறுவனங்கள் நோட்டீஸ் பீரியட்டாக குறிப்பிட்ட காலம் பணியாளர்களை தொடர்ந்து பணி செய்ய வைக்கிறது. அந்த வகையில் தான் பைஜூஸ் நிறுவனம் தனது 2,500 பணியாளர்களை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது மொத்த பணியாளர்களில் 5 சதவீதமாகும். இருப்பினும் பணியில் இருந்து நீக்கம் செய்யப்படும் பணியாளர்களுக்கு 15 நாட்கள் நோட்டீஸ் பீரியட் காலமாக வழங்கப்படும் என அந்த நிறுவனம் அறிவிப்பு செய்து உள்ளது.
நோட்டீஸ் பீரியட்
இந்நிலையில் தான் நோட்டீஸ் பீரியட் என்றால் என்ன? ஒவ்வொரு நிறுவனங்களில் அது எதற்காக வைக்கப்பட்டுள்ளது. நோட்டீஸ் பீரியட் ஏன் முக்கியம்? என்பது பற்றி ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டியது முக்கியமாகும். அதாவது நோட்டீஸ் பீரியட் என்பது ஒருவர் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்த பிறகும் குறிப்பிட்ட காலம் தொடர்ந்து பணி செய்வதாகும். இது பல நிறுவனங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. மாறாக பொருளாதார நெருக்கடியில் சிக்கும் நிறுவனம் தொடர்ந்து இயங்க முடியாத பட்சத்தில் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும். இவ்வாறு பணி நீக்கம் செய்யும் ஊழியர்கள் மாற்று வேலையை தேட வசதியாக குறித்த காலத்து தொடர்ந்து பணி வழங்கும். இந்த கால அளவும் கூட நோட்டீஸ் பீரியட் என்றே அழைக்கப்படுகிறது. 2வதாக கூறிய அம்சம் மிக குறைந்த நிறுவனங்களில் மட்டுமே பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் நோட்டீஸ் பீரியட் என்பது ஒருவர் ராஜினாமா செய்த பிறகு குறிப்பிட்ட காலம் அந்த நிறுவனத்துக்காக பணி செய்வதை குறிப்பதாகவே அறியப்படுகிறது.
நோட்டீஸ் பீரியட் காலம் எவ்வளவு?
பொதுவாக நோட்டீஸ் பீரியட்டின் காலத்தை நிர்ணயம் செய்ய விதிகள் எதுவும் இல்லை. இந்த கால அளவு என்பது ஒவ்வொரு நிறுவனத்துக்கும் மாறுபடும். சில நிறுவனங்களில் 15 நாள், ஒரு மாதம், இரண்டு மாதம் என அதிகபட்சம் 3 மாதம் வரை நோட்டீஸ் பீரியட் காலஅளவு இருக்கும். சில நிறுவனங்களில் நோட்டீஸ் பீரியட் என்பது இல்லாமல் கூட இருக்கலாம். இருப்பினும் கூட தற்போதைய காலத்தில் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் நோட்டீஸ் பீரியட் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நோட்டீஸ் பீரியட் ஏன் முக்கியம்?
ஏனென்றால் ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்தாலும் கூட அவர் நோட்டீஸ் பீரியட் காலத்தில் தொடர்ந்து பணி செய்வார். அதற்குள் அந்த பொறுப்பில் இன்னொருவரை நிறுவனங்களால் பணியமர்த்த முடியும். இதனால் குறிப்பிட்ட நிறுவனத்தில் பணி என்பது தடைப்படாமல் தொடர்ந்து நடக்கும். ஒருவேளை நோட்டீஸ் பீரியட் காலத்தை பணியாளர் பின்பற்றாவிட்டால் அது அவரது பணப்பலன்களை பாதிக்கும். இதனால் தான் நோட்டீஸ் பீரியட் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பெரு நிறுவனங்களில் பார்க்கப்படுகிறது.
நோட்டீஸ் பீரியட் அறிவிப்பு
பொதுவாக நோட்டீஸ் பீரியட் என்பது தொடர்பான விபரங்கள் நிறுவனங்களில் ஒருவர் புதிதாக பணிக்கு சேரும்போதே முறையாக தெரிவிக்கப்படும். அதாவது நிறுவனங்களின் விதிமுறைகள் அடங்கிய படிவத்தில் நோட்டீஸ் பீரியட்டின் காலஅளவு உள்பட அனைத்து விபரங்களும் முறையாக வழங்கப்பட்டு இருக்கும். இதனை சிலர் படித்து தெரிந்து வைத்திருக்கும் நிலையில் பலர் அதனை கவனத்தில் கொள்வது இல்லை. இது மிகவும் தவறான ஒன்றாகும். ஏனெனில் அந்த படிவத்தில் தான் நோட்டீஸ் பீரியட்டின் நிபந்தனைகள் உள்பட அனைத்து விபரங்களும் இடம்பெற்றிருக்கும். ஒரு நிறுவனத்தில் பணியில் சேரும்போது நோட்டீஸ் காலம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு இருந்தால் அதனை நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஏனென்றால் பணியில் சேரும்போதே நீங்கள் அதனை பின்பற்ற சம்மதம் தெரிவித்து உள்ளீர்கள்.
நோட்டீஸ் பீரியட் பணி கட்டாயமல்ல
இருப்பினும் எந்த நிறுவனமும் கூட பணியாளரை நோட்டீஸ் பீரியட்டில் இருக்க கட்டாயப்படுத்த முடியாது. ஏனென்றால் அதுதொடர்பான விபரங்களும் கூட பணியில் சேரும்போது இருக்கும் விண்ணப்பத்தில் இடம்பெற்றிருக்கும். இது பணியாளர்களுக்கு சில மாற்று வழியை வழங்குகின்றன. அதன்படி விடுமுறை தினங்களில் வேலை பார்த்து ஈட்டிய விடுப்பு மற்றும் Sick Leave உள்ளிட்டவற்றை பணியாளர் நோட்டீஸ் பீரியட் காலமாக கழித்து கொள்ளலாம். அதோடு நோட்டீஸ் பீரியட் காலத்துக்கு பதிலாக பணியாளர்கள் நிறுவனத்துக்கு குறிப்பிட்ட தொகையை செலுத்தி உடனே பணியில் இருந்து நின்று கொள்ள முடியும். இந்த தொகை என்பது அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட வேண்டி இருக்கும். அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு வர வேண்டிய கடைசிமாத சம்பளம் மற்றும் இறுதி கொடுப்பனவு (எப்என்எப் பேமெண்ட்) உள்ளிட்டவற்றின் மூலம் ஈடு செய்யலாம். இருப்பினும் இது நிறுவனங்களை பொறுத்து மாறுபடும். இதனால் நோட்டீஸ் பீரியட் தொடர்பாக குழப்பம் ஏற்பட்டால் அதுபற்றி எச்ஆர் (HR) பிரிவில் உள்ளவர்களிடம் கேட்டு அறிந்து கொண்டு விதிமுறையை பின்பற்றுவது நல்லதாகும்.
பணியாளர்களுக்கு எப்படி உதவும்?
அதோடு நோட்டீஸ் பீரியட்டை முறையாக பின்பற்றி ஒரு பணியாளர் வேலையில் இருந்து விடுபட்டால் அது அவருக்கு பயனுள்ளதாக அமையும். பொதுவாக ஒரு நிறுவனத்தில் இருந்து ஒருவர் வெளியேற விரும்புபதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு இன்னொரு நிறுவனத்தில் கிடைக்கும் அதிகபட்ச சம்பளம் தான் பிரதான காரணமாக இருக்கும். இதனால் ஒருவேளை நோட்டீஸ் பீரியட் காலத்தில் தொடர்ந்து பணியாளர் பணியாற்றும்போது அந்த நிறுவனமே அவருக்கு சம்பள உயர்வு உள்பட பிற சலுகைகள் வழங்க வாய்ப்பு ஏற்படும். இல்லாவிட்டால் பணியாளர் முறைப்படி ராஜினாமா செய்து நிறுவனத்தின் விதிகளை பின்பற்றி வேலையை நோட்டீஸ் பீரியட் முடிந்து வெளியேறுவார். இது அந்த பணியாளர் மீது மரியாதையை ஏற்படுத்தலாம். அதோடு மட்டுமின்றி குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒருவேளை மீண்டும் அந்த நிறுவனத்தில் அவர் சேர்ந்து பணியாற்ற விரும்பினால் நோட்டீஸ் பீரியட் முறையில் வெளியேறியவர்களுக்கு திறமையின் அடிப்படையில் மீண்டும் கூட பழைய நிறுவனத்தில் வாய்ப்பு கிடைக்கலாம். இதனால் நோட்டீஸ் பீரியட் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.