துரோகத்துக்கு அர்த்தம் என்ன? முட்டி போட்டு முதல்வரான எடப்பாடி! டிடிவி முன்னாள் கொதித்த சிஆர் சரஸ்வதி
சென்னை : அமமுக பொதுக்குழுவில் பேசிய முன்னாள் அதிமுக நிர்வாகியும் நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி, துரோகம் என்ற சொல் உலகில் இருக்கும்வரை, முட்டிபோட்டு முதலமைச்சரான எடப்பாடியை மறக்க முடியாது என எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அமமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு, வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
யாருக்காகவோ எதற்காகவோ வானகரத்தில் பொதுக்குழு கூட்டப்படவில்ல; அமமுக பொதுக்குழுவுக்கு டிடிவி அழைப்பு
அமமுக
சாலையின் இரு மருங்கிலும் அமமுக கொடியுடன் திரண்ட தொண்டர்கள் வாழ்த்து முழக்கமிட்டனர். பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தந்த திரு. டிடிவி தினகரன், கூட்ட அரங்கின் முன்பாக தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அங்கு குழுமியிருந்த கட்சி தொண்டர்களுக்கு அவர் இனிப்புகளை வழங்கினார்.
14 தீர்மானங்கள்
இதனைத்தொடர்ந்து பொதுக்குழு மேடைக்கு வந்த திரு. டிடிவி தினகரனை தொண்டர்கள் வாழ்த்து முழக்கமிட்டு வரவேற்றனர். மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜிஆர், அம்மா ஆகியோரது திருவுருவப்படங்களுக்கு டிடிவி தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சி.ஆர்.சரஸ்வதி
ஏழைகளுக்காக ஜெயலலிதா தொடங்கிய அம்மா உணவகங்கள் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களை முடக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து அமமுக பொதுக்குழுவில் பேசிய முன்னாள் அதிமுக நிர்வாகியும் நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
துரோகம்
பொதுக் குழுக்கூட்டத்தில் பேசிய அவர்,"துரோகம் என்ற சொல் உலகில் இருக்கும்வரை, முட்டிபோட்டு முதலமைச்சரான எடப்பாடியை மறக்க முடியாது. துரோகம் செய்தவர்களுக்கு என்றும் மன்னிப்பே கிடையாது நிச்சயம் அதிமுக முழுமையாக கைப்பற்றப்படும் அப்போது துரோகம் செய்தவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும் என சிஆர் சரஸ்வதி" பேசினார்.