5 மாதத்தில் 12 பலிகள்... ஆன்லைன் ரம்மிக்கு எண்டே கிடையாதா..? ட்விட்டரில் அன்புமணி கேள்வி
சென்னை:ஐந்து மாதங்களில் 12வது உயிர்ப்பலி நடந்துள்ள நிலையில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்வதில் இனியும் தாமதம் செய்யக்கூடாது என பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆன்லைன் ரம்மி காரணமாக சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளி ஆனார் சென்னை கோயம்பேட்டை சேர்ந்த தினேஷ் என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தமிழக அரசு ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய இனியும் தாமதிக்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளியான சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த தினேஷ் என்ற இளைஞர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
கோயம்பேடு தினேஷ் கடந்த 5 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகும் 12-ஆவது உயிர் எனவும், ஆன்லைன் சூதாட்டம் உடனடியாக தடை செய்யப்படாவிட்டால் தினமும் இத்தகைய தற்கொலைகள் நடப்பதும், பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதும் வாடிக்கையான ஒன்றாகி விடும் என பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதில் தமிழக அரசு இனியும் தாமதம் செய்யக்கூடாது எனவும், தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்றுவதற்காக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை அனைத்து காரணங்களுடன் உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
Recommended Video
ஆன்லைன் ரம்மி எனும் அரக்கன்.. கோரப்பசிக்கு மற்றொரு உயிர்ப்பலி.. கடனால் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்