அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி மீண்டும் மாற்றம்.. ஜனவரி 19, 20ல் பரீட்சை.. வெளியான புதுஅறிவிப்பு
சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக அண்ணா பல்கலைழக்கத்தில் டிசம்பர் 9, 10ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த தேர்வுகளுக்கு மாற்று தேதி வெளியானது. தற்போது மீண்டும் தேர்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் படிப்புக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 9 மற்றும் 10 தேதிகளில் தேர்வுகள் நடைபெற இருந்தது.

இந்த வேளையில் வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவாகி கரையை கடந்தது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டன.
இதன் காரணமாக டிசம்பர் 9 மற்றும் டிசம்பர் 10ம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து டிசம்பர் 9ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 24ம் தேதியும், டிசம்பர் 10ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 31ம் தேதியும் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் மாற்று தேதி அறிவித்தது.
இந்நிலையில் தான் தற்போதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் மாதம் 24ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட தேர்வுகள் 2023 ஜனவரி மாதம் 19ம் தேதியும், டிசம்பர் 31ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட தேர்வுகள் 2023 ஜனவரி மாதம் 20ம் தேதியும் நடைபெறும் என இன்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications