தமிழ்நாட்டுல ஒரு பிராஞ்ச் இருந்துட்டு போகட்டுமேனு கட்சி நடத்தல.. பாஜக கருத்தரங்கில் அண்ணாமலை பரபர!
சென்னை : சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜகவை போல் கடுமையாக உழைக்கும் கட்சி தமிழகத்தில் எதுவும் இல்லை எனப் பேசியுள்ளார்.
எப்போதும் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பாஜகவினர் ஓடிக்கொண்டே இருக்கின்றனர். மக்கள் மத்தியில் உணர்வுப் பூர்வமாக இருக்கும் கட்சிதான் வெற்றி பெறும் என்றும் அண்ணாமலை பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜகவை வலுவாக காலூன்ற வைக்க பல்வேறு வியூகங்களை அமைத்து செயல்படுத்தி வரும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அவ்வப்போது கருத்தரங்குகள், கலந்துரையாடல்களை நடத்தி வருகிறார்.
அந்தவகையில், நேற்று நடந்த கருத்தரங்கில், பாஜகவினர் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தியுள்ளார்.

பாஜக கருத்தரங்கு
தமிழக பாஜக சிந்தனையாளர் பிரிவு சார்பில், 'தமிழ்நாடு உரையாடல்-2022' 'தமிழ்நாடு - கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்', 'திராவிட மாடலில் போலி பகுத்தறிவுவாத' ஆகிய தலைப்புகளில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்குக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். பாஜக இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா எம்.பி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

ஆட்சிக்கு வருவதே இலக்கு
அப்போது பேசிய அண்ணாமலை, ஆட்சிக்கு வரவேண்டும் என்றுதான் அரசியல் கட்சிகள் நடத்தப்படுகிறது. தேசியக் கட்சி என்பதற்காக, தமிழகத்திலும் பாஜகவின் கிளை இருந்துவிட்டு போகட்டும் என்பதற்காக பாஜக ஆரம்பிக்கப்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சியில் அமரவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். தமிழகத்தில் எதற்காக பாஜகவுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என கேள்விகளை அடுக்குகின்றனர். இந்த கேள்விகளுக்கான பதிலை மக்களுக்கு சரியாகப் புரிய வைத்தால், தமிழகத்தில் நிச்சயம் பாஜக ஆட்சிக்கு வந்துவிடும்.

பாஜகவை போல எந்தக் கட்சியும் இல்லை
பாஜகவை போல் கடுமையாக உழைக்கும் கட்சி தமிழகத்தில் எதுவும் இல்லை. எப்போதும் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பாஜகவினர் ஓடிக்கொண்டே இருக்கின்றனர். மக்கள் மத்தியில் உணர்வுப் பூர்வமாக இருக்கும் கட்சிதான் எப்போதும் வெற்றி பெறுகிறது. அந்த உணர்ச்சியை சரி செய்யாத வரை கடுமையாக உழைத்தாலும், எந்த கட்சியும் ஆட்சிக்கு வரமுடியாது.

தாய்மொழி காக்கும் மோடி
பிரதமர் மோடி தான் தாய் மொழியில் கட்டாயம் படிக்க வழி செய்துள்ளார். மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது பெயரில் தேசிய தாய்மொழி தினம் என்ற பெயரில் அனைத்து தாய் மொழிகளுக்கான தினத்தை மோடி தலைமையிலான அரசு அறிவிக்க இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி நமது தாய் மொழிக்கு பாதுகாவலனாக இருந்து கொண்டிருக்கிறார்.

மோடி வந்த பிறகு தான்
நீண்ட காலமாக இருக்கும் காவிரி நதிநீர், மொழி பிரச்சினையை வைத்து தமிழகத்தில் அரசியல் நடக்கிறது. இந்த பிரச்சினையை தீர்க்ககூடிய வல்லமை பாஜகவிடம் உள்ளது. பாஜக தேசிய கட்சியாக இருந்து, மாநிலங்களுக்கு இடையில் நிலவும் பிரச்சனையை முடித்து வைக்கிறது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின், காவிரி நீர் பிரச்னை முறைப்படுத்தப்பட்டது.

ஏமாற்று வேலை
திராவிட கட்சிகளாலும், திராவிட ஆட்சியாலும் தமிழகத்தில் சாதிகள் ஒழிந்து விடவில்லை. தமிழக மக்கள் மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை பார்த்தால் தான், திராவிட கட்சிகளின் ஏமாற்று வேலை தெரியவரும். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைத்தால், தமிழகத்துக்கு தேவையான அனைத்தையும் கொடுக்கும்.

தமிழக வளர்ச்சி குறைவு
கடந்த 2010 - 11ல் வரி வருவாயில், மஹாராஷ்டிரா முதலிடத்தில் இருந்தது. இரண்டாவது இடத்தில் தமிழகம் இருந்தது. தற்போது, 12 ஆண்டுகளுக்கு பின், முதலிடத்தில் மஹாராஷ்டிரா உள்ளது. இரண்டாவது இடத்தில், உத்தர பிரதேசம் உள்ளது. தமிழகம் மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. உ.பியின் வளர்ச்சி, 268 சதவீதம் அதிகரித்திருக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சி குறைந்து வருகிறது.

70 சதவீதம் - அரசியல்வாதிகள்
மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழும், அடிப்படை கணக்கு கூட தெரிவதில்லை. கல்வித்துறையை, கரையான் அரிக்கிறது. தமிழகத்தில் உள்ள, 70 சதவீத என்ஜினியரிங் கல்லுாரிகளை அரசியல்வாதிகள் தான் நடத்துகின்றனர். அதனால், மாணவர்களுக்கு தரமாக சொல்லி கொடுக்கவில்லை. என்ஜினியரிங் படித்தவர்கள் சிரமப்படுகின்றனர்." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications