உங்க மேலதான் சந்தேகம்.. ஆளுநரை ‘23ஆம் புலிகேசி’னு நினைச்சீங்களா? அண்ணாமலையை வறுத்தெடுக்கும் திமுக!
சென்னை : பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, மாநில அரசின் பாதுகாப்பில் குளறுபடி இருந்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில், அதை 4 மாதம் கழித்து வந்து சொல்லும் உங்கள் மீதுதான் சந்தேகம் வருகிறது என விளாசியுள்ளார் திமுக தலைமைக் கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டான்.
செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுக்காக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் மோடி சென்னை வந்திருந்தபோது, மெட்டல் டிடெக்டர்கள் செயல்படவில்லை என்பதற்கான ஆதாரம் இருப்பதாக குற்றம்சாட்டினார் அண்ணாமலை.
பிரதமர் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருக்கும் எஸ்பிஜியை குற்றம்சாட்டாமல், மாநில காவல்துறையை அண்ணாமலை குற்றம்சாட்டுவதாக திமுகவினர் விமர்சித்தனர். இந்நிலையில், 23ஆம் புலிகேசியாக ஆளுநரை நினைத்துக்கொண்டு புகார் கூறியிருக்கிறார் அண்ணாமலை என விமர்சித்துள்ளார் சூர்யா வெற்றிகொண்டான்.
ரெடியாக இருங்க.. கூட்டம் முடிந்ததும் சட்டம் குஜராத் பற்றி பேசிய ஸ்டாலின்.. ஆஹா..
பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி?
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடிக்கு மாநில அரசு பாதுகாப்பு அளிக்கத் தவறியதை ஆதாரத்துடன் ஆளுநருக்கு வழங்கி இருப்பதாக கூறினார். மெட்டல் டிடெக்டர்கள் செயல்படவில்லை என்பது புலனாய்வு அமைப்பின் ரிப்போர்ட் மூலம் தெரியவந்துள்ளது. பிரதமருக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத திமுக அரசு, நம்மைப் போல சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்கும் எனக் கேள்வி எழுப்பினார்.
அமித்ஷா - அண்ணாமலை
இதற்கு திமுக கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகிறது. திமுக செய்தி தொடர்பு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், பிரதமர் வருகையின் போது பாதுகாப்பு குறைபாடு என்றால் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் குற்றச்சாட்டை வைத்திருக்க வேண்டும். அமித்ஷாவிற்கும் அண்ணாமலைக்கும் சண்டையா என தெரியவில்லை, அதனால் தான் இப்படி ஒரு பழி போடுகிறார், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் மாநில காவல்துறையின் அதிகாரத்தை வாங்கிக்கொள்வார்கள். சாதாரண ஐபிஎஸ் தேவையில்லை. சாதாரண மனிதருக்குக் கூட அது தெரியும் என விளாசினார்.
சூர்யா வெற்றிகொண்டான்
இந்நிலையில் திமுக தலைமைக் கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டான், அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 4 மாதங்களுக்குப் பிறகு அண்ணாமலை இப்போது வந்து பிரதமர் பாதுகாப்பில் குறை சொல்கிறார், சதி இருக்கிறது என்று சொல்கிறார் என்றால், அவர் மீதுதான் சந்தேகம் வருகிறது. ஒரு நாட்டின் பிரதமர் பாதுகாப்பு விவகாரத்தில் குறைபாடு இருந்தால் 4 மாதங்கள் கழித்தா வந்து சொல்வார்கள், பிரதமர் மோடியை இவர்களிடம் இருந்துதான் பாதுகாக்க வேண்டும் என்று சூர்யா வெற்றிகொண்டான் தெரிவித்துள்ளார்.
23ஆம் புலிகேசி
அவர் பேசுகையில், அண்ணாமலையை எந்தக் கணக்கில் சேர்ப்பதென்றே தெரியவில்லை. அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் ஆயிற்றே என நினைத்தோம். ஆனால், அண்ணாமலை 23ஆம் புலிகேசி போல ஆளுநர் ரவியை நினைத்தாரா அல்லது மோடியை நினைத்தாரா என்று தெரியவில்லை. ஒற்றனாகச் சென்றுவிட்டு 4 மாதங்களுக்கு பிறகு வந்து பழைய சேதியைச் சொல்லி, எங்கடா போன எனக் கேட்டால் பெரியம்மா வீட்டுக்கு போய் நிகழ்ச்சியை முடிச்சிட்டு வர லேட் ஆகிடுச்சு மன்னா எனச் சொன்ன கதையாக இருக்கிறது அண்ணாமலை சொல்வது.
அமித்ஷா தான் பொறுப்பு
பிரதமர் மோடி சென்னை வந்து சென்று 4 மாதங்கள் கழித்து அண்ணாமலை இப்போது வந்து மெட்டல் டிடெக்டரில் 4 செயல்படவில்லை, இது ஏதோ சதி எனச் சொல்லி இருக்கிறார். நான் சொல்கிறேன், அண்ணாமலை சொல்வதில் தான் சதி இருக்கிறது. பிரதமர் மோடிக்கு எந்த ஆபத்து என்றாலும் அதற்கு அமித்ஷா தான் பொறுப்பு, ஏனென்றால் அவர்தானே உள்துறை அமைச்சர். அவர்தானே மோடியை அனுப்பி வைத்தார். பிரதமர் மோடி வந்துவிட்டு பாதுகாப்பாகச் சென்றுவிட்டார். பிரதமருக்கான பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை என டிஜிபி சைலேந்திரபாபு சொல்லியிருக்கிறார்.
அண்ணாமலை மீது சந்தேகம்
எஸ்.பி.ஜியும் முன்கூட்டியே வந்து ஆய்வு செய்திருக்கிறது. மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட உபகரணங்களை மற்ற நாடுகளே கேட்கும் அளவுக்கு தரமாக இருக்கிறது என டிஜிபி சொல்கிறார். ஆனால், அண்ணாமலை, அமித்ஷா மீது தான் எங்களுக்கு சந்தேகம் வருகிறது. பிரதமருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாத நிலையில், அவர் வந்து சென்ற 4 மாதங்களுக்குப் பிறகு, சதி என குற்றம்சாட்டுகிறார் என்றால், அது மோடியை காப்பாற்றுவது மாதிரி தெரியவில்லை, பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுப்பது போலத்தான் இருக்கிறது.
எட்டி நின்னா உதைக்குது
இதனால், நாங்கள் தான் பிரதமர் மோடிக்கு முழு எச்சரிக்கையோடு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். மோடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பிரதமர் பத்திரமாக வந்து சென்றுவிட்டார். ஆனால், மதக் கலவரங்களை உருவாக்கும் நோக்கத்தோடு பைத்தியக்காரர்கள் போல பேசி வருபவர்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும்? கிட்ட போனா கடிக்கிறான், எட்டி நின்னா உதைக்கிறான் என்ற கதையாகத்தான் இருக்கிறது. மாத்திரை, ஊசி போட்டு மயக்க நிலையில் தான் வைத்திருக்க வேண்டும்.
உங்கள் திட்டமா?
பிரதமர் மோடி வருகிறார் என்றால் அதற்கு முன்பே எஸ்பிஜி, அந்த மாநிலத்தில், பிரதமருக்கான பாதுகாப்பு அனைத்தையும் கையில் எடுத்துவிடும். மெட்டல் டிடெக்டர், வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் கருவி, அது செயல்படவில்லை என்பதை முன்கூட்டியே கண்டுபிடிக்கவில்லை என்றால் எல்லாமே உங்கள் திட்டமாக இருக்குமா என்ற சந்தேகம் தான் எழுகிறது. 4 மாதங்களுக்கு பிறகு இந்த குற்றச்சாட்டை சொல்கிறார் என்றால் அது பொய் தான், சும்மா இவராகவே கிளப்பி விடுகிறார், இது பாஜகவின் கேம், தமிழக மக்கள் புரிதலோடு இருக்கிறார்கள், அவர்களின் வேலை இங்கு நடக்காது எனத் தெரிவித்துள்ளார்.