சென்னை ஐ.ஐ.டி.யில் மீண்டும் ஒரு சந்தேக மரணம்:.. ஜவாஹிருல்லா பரபரப்பு கோரிக்கை
சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் மீண்டும் ஒரு சந்தேக மரணம் நிகழ்ந்துள்ளதால், இதுபற்றி சிறப்பு விசாரணைக்குழு விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கோரிக்கை வைத்துள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :

சென்னை ஐ.ஐ.டி. உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனம் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் முதன்மையான நிறுவனங்களில் ஒன்றாகும்.
சென்னை ஐ.ஐ.டி. கல்வி வளாகத்தில் உன்னிகிருஷ்ணன் எனும் ஆராய்ச்சி மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் கொள்ளச் செய்திருக்கிறது. 'ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் இந்த நிறுவனத்தில் சாதிய பாகுபாடு தொடர்ந்து தலைவிரித்தாடுகிறது.
எனவே, தான் பணியில் இருந்து வெளியேறுவதாக' அங்கு பணிபுரிந்த உதவிப் பேராசிரியர் விபின் கடிதம் கொடுத்து இருக்கிறார் என்பதனையும் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அதன் தொடர்ச்சியாக மாணவர் ஒருவரின் மரணம் நிகழ்ந்திருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கெனவே கடந்த 2019ல் பாத்திமா லத்தீப் என்ற மாணவி சென்னை ஐஐடியில் நிலவும் பாரபட்சப் போக்கை சுட்டிக்காட்டிய நிலையில் மர்மமாக மரணித்தார். இதுகுறித்த சிபிஐ விசாரணையும் மர்மமாகவே உள்ளது.
நல்ல கல்வி என்பது மனிதர்களிடையே இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை கலைந்து சம உரிமை குறித்த புரிதலை உருவாக்குவது ஆகும். ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கல்வி நிறுவனத்தில் இதுபோன்ற சமூகக் கேடுகளை இனிமேலும் அனுமதிக்கக்கூடாது. சமூக ரீதியான பாகுபாடுகளுக்கு காரணமாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு சிறப்பு விசாரணைக்குழு அமைத்து உடனடியாக நீதியை நிலைநாட்ட வேண்டும்" எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications