எஸ்பி வேலுமணி வீட்டில் ரெய்டு.. கசிந்த தகவல்.. யார் அந்த கருப்பு ஆடு.. துறை ரீதியான விசாரணை?
சென்னை : கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி . இவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்த திட்டமிட்ட தகவல் முன்கூட்டியே வேலுமணி தரப்புக்கு தெரிந்துவிட்டதாக புகார் எழுந்தது. எப்படி அவருக்கு தெரிந்தது என்பது குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தப்படுவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
Recommended Video
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோவை சுகுணாபுரம் வீடு உள்பட தமிழகம் முழுவதும் 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த செவ்வாய்கிழமை சோதனை நடத்தினார்கள். அப்போது வேலுமணி சென்னையில் இருந்தார்.
அதேநேரம் கோவையில் வேலுமணி வீட்டில் சோதனை தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே அவரது ஆதரவாளர்கள் அதிக அளவில் வீட்டு முன்பு குவிந்தார்கள். அத்துடன் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அதிமுக எம்எல்ஏக்கள் 10 பேர் அங்கு வந்தனர்.

குவிந்த பெண்கள்
இதேபோல் போராட்டம் நடத்துவது போல் ஏராளமான பெண்களும் அங்கு குவிந்தனர். அவர்களுக்கு காலை, மதியம் என இரண்டு வேளை உணவு வழங்கப்பட்டது. அவ்வப்போது ரோஸ் மில்க், டீ உள்ளிட்டவையும் கூடியிருந்த மக்களுக்கு அதிமுகவினர் வழங்கினர்.

முன்கூட்டியே திட்டம்
இதையெல்லாம் பார்க்கும் போது, கிட்டத்தட்ட வேலுமணி வீட்டில் சோதனை நடக்கப்போகிறது என்பதை முன்பே உறுதி செய்து ஆட்களை ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வருவது போல் அழைத்து வந்து அவர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்க ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டதா என போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

போலீசாருக்கு சந்தேகம்
வேலுமணியை பொறுத்தவரை சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனது சகோதரரின் வீட்டில் தான் எப்போதும் தங்கியிருப்பார் எனறு சொல்லப்படுகிறது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை இரவே அங்கிருந்து புறப்பட்டு சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதியில் வந்து தங்கியதையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள்,

வேலுமணி அதிரடி
லஞ்ச ஒழிப்பு துறையின்சோதனையை முன்கூட்டியே அறிந்து தகுந்த முன்னேற்பாட்டுடன் எஸ்.பி.வேலுமணி தரப்பு பக்காவாக ஏற்பாடு செய்துவிட்டதாகவே கருதுகிறார்கள். சோதனைக்கு முன்பே பணம் மற்றும் ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கக் கூடும். இதனால்தான் 60இடங்களில் சோதனை நடத்தியும் முக்கிய ஆவணங்கள் கிடைக்கவில்லை எதுவும் கிடைக்கவில்லை என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சந்தேகிக்கின்றனர்.

துறை ரீதியான விசாரணை
இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்த உள்ள தகவல் திங்கள் அல்லது ஞாயிறு அன்று கசிந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. வெள்ளை அறிக்கை வெளியான அன்று இதுபற்றி யாரோ வேலுமணி தரப்பினருக்கு கசியவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி துறை ரீதியான விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications