மோடி மட்டுமல்ல.. என்னாலயும் முடியும்! அதிமுகவில் ஸ்டாலின் செய்த சம்பவம்.. சத்தமே இன்றி சவுக்கடி?
சென்னை: அதிமுகவில் பொதுக்குழு மற்றும் ஒற்றை தலைமை விவகாரங்கள் காரணமாக கடுமையான உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடப்பாடி - ஓபிஎஸ் இடையிலான மோதல் ராயப்பேட்டை அதிமுக அலுவலக கதவுகளை தாண்டி அவ்வை சண்முகம் சாலைக்கு வந்துவிட்டது.
Recommended Video
ஜூலை 11ம் தேதி எப்படியாவது அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பெற்றுவிட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார். இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வமோ.. பொதுக்குழுவை தடுக்க தீவிரமாக சட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.
அதிமுகவில் நிலவும் இந்த மோதல் காரணமாக தமிழ்நாட்டில் ஜூலை 9ம் தேதி நடக்க உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட அதிமுக போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாத காரணத்தால் அதிமுக வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஒற்றைத்தலைமை குஸ்தி.. மீண்டும் கூடும் பொதுக்குழு யாருக்கு சாதகம்?..எண் கணித நிபுணர் கணிப்பு
சுயேச்சை தேர்தல்
தமிழ்நாடு உள்ளாட்சியில் காலியாக உள்ள 510 இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 34 இடங்களில் அரசியல் கட்சிகள் தங்களின் சின்னத்தில் போட்டியிடக்கூடிய முக்கிய பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் அதிமுக இரட்டை இலையில் போட்டியிட முடியவில்லை. சின்னத்தை ஒதுக்கும் பி பார்மில் கையெழுத்திடும் வகையில் அந்த விண்ணப்பங்களை தனக்கு அனுப்பி வைக்க வேண்டும் என எடப்பாடிக்கு ஓபிஎஸ் எழுதிய கடிதத்துக்கு.. அதெல்லாம் அனுப்ப முடியாது, நீங்கள் ஒருங்கிணைப்பாளர் கிடையாது என்று மறுத்து விட்டார் எடப்பாடி.
பல காரணங்கள்
இந்த மோதலுக்கு பின் பல காரணங்கள் சொல்லப்பட்டது. இது குறித்து நம்மிடம் பேசிய அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், ‘' அதிமுகவின் பொதுக்குழு 23-ந்தேதி கூடும் என அறிவிக்கப்பட்டதற்கு பிறகு, ஒற்றைத் தலைமை விவகாரம் எப்போது கிளறப்பட்டதோ அப்போதே ஓபிஎஸ்-இபிஎஸ் அதிகார மோதல் வெடித்தது. இந்த மோதல் அதிகரித்ததால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படலாம் என்கிற சூழல் உருவானது. பொதுவாக, தேர்தல் சமயத்தில் சின்னம் விவகாரம் வரும்.
சின்னம் பிரச்சனை
சின்னத்தை ஒதுக்கும் பி பார்மில் இருவருமே கையெழுத்திட வேண்டும். இப்போதைக்கு தேர்தல்தான் எதுவும் இல்லையே; தேர்தல் என்றால் இனி 2024 லோக்சபா தேர்தல் தானே என அசால்ட்டாக இருந்தனர் எங்கள் தலைவர்கள். ஆனால், இந்த அதிகார மோதல் உச்சத்தில் இருந்ததால், இந்த பிரச்சனை ஓயாது என தெரிந்த முதல்வர் ஸ்டாலின், இரட்டை இலையை நாம் முடக்கலாம் என திட்டமிட்டு, மாநில தேர்தல் ஆணையம் மூலம் உள்ளாட்சியில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தலை அறிவிக்க வைத்தார் என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.
போட்டி
நம்மிடம் மேலும் பேசிய ரத்தத்தின் ரத்தங்கள், அந்த தேர்தல் அறிவிப்பின் மூலம் மனு தாக்கல் 20 ந்தேதி தொடங்கி 27-ல் முடிவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், 23-ந்தேதி பொதுக்குழு பயங்கர பிளவுகளுக்கு வழி வகுத்தது. இதனால் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதையே அதிமுக தலைவர்கள் மறந்து விட்டனர். ஒருவேளை தேர்தலை அதிமுக எதிர்கொள்ள நினைத்தாலும், இவர்கள் இரண்டு பேரும் அடித்துக் கொள்வதில் இரட்டை இலை சின்னத்தை யார் வழங்குவது என்கிற போட்டியும் நடக்கும்.
அதிகார மோதல்
இரண்டு பேருமே தங்களின் அதிகாரத்தை விட்டுத்தர மாட்டார்கள். இந்த சண்டையில் இரட்டை இலை சின்னம் அதிமுகவினருக்கு கிடைக்காமல் போகும் என்று கணக்கிட்டுத்தான் தேர்தலை திடீரென அறிவிக்கச் செய்தார் ஸ்டாலின், என்கிறார்கள் நம்மிடம் பேசிய அதிமுக நிர்வாகிகள். மேலும், அதிமுகவில் எழுந்த அதிகாரப் போட்டியால் தேர்தலில் போட்டியிடுவதையே மறந்து விட்டனர். மனுத்தாக்கல் முடிந்த பிறகுதான் இவர்களுக்கு நினைவே வருகிறது.
மனுதாக்கல் முடிந்தது
இதில் ஒரு கேம் ஆடலாம் என நினைத்துதான் 30-ந்தேதி சின்னம் தொடர்பான பி ஃபார்ம் கேட்டு எடப்பாடிக்கு ஓபிஎஸ் கடிதம் அனுப்பி வைக்கிறார். அப்படியே அந்த ஃபார்மை எடப்பாடி அனுப்பி வைத்தாலும் அந்த விண்ணப்பத்தை யாருக்கு வழங்குவார் ? வழங்கினாலும் செல்லுமா? அதாவது, அதிமுகவே போட்டியிடாத போது (மனுதாக்கல் தேதி முடிந்துவிட்டது) யாருக்கு அந்த விண்ணப்பத்தை வழங்குவார் ஓபிஎஸ்? யாருக்கு கொடுக்க முடியாது. இருந்தாலும், அதிமுக தொண்டர்களுக்கு எதிராக எடப்பாடி இருக்கிறார் என்பதைக் காட்டவே இப்படி செய்தார் ஓபிஎஸ்!
2 மாதம் அவகாசம்
உள்ளாட்சி தேர்தல் நடத்த இன்னும் சில மாதங்கள் அவகாசம் இருக்கிறது. ஸ்டாலின் நினைத்திருந்தால் தேர்தலை இன்னும் 2 மாதம் கழித்து நடத்தியிருக்க முடியும். ஆனால், மோடி நினைத்தால் தான் இரட்டை இலையை முடக்க முடியுமா? நான் நினைத்தாலும் முடக்க முடியும் என திட்டமிட்டே உள்ளாட்சி தேர்தலை அறிவிக்க வைத்தார் ஸ்டாலின். அதிமுக தலைவர்களின் மோதல் நிற்கவில்லை என்றால், 2024-ல் இரட்டை இலை சின்னம் முடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாக இலையை முடக்கி காட்டிவிட்டார் ஸ்டாலின் ‘' என்று விவரிக்கிறார்கள் அதிமுக ர.ர.க்கள்.