ஜெயலலிதாவை அப்பல்லோவில் சந்தித்தாரா ஓபிஎஸ்... 21ஆம் தேதி விளக்கம் தர ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர் வரும் 21ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர் வரும் 21ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் நடந்த சிகிச்சைகள் பற்றிய உண்மை அதன் பின் நடைபெறும் விசாரணையில் தெரியவரும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் அமைச்சர்கள், எம்பிக்கள், அப்போலோ டாக்டர் எனப் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ, மருத்துவக் குழுவை அமைக்குமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் 6 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு எய்ம்ஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவர்கள்
அப்பல்லோ மருத்துவர்கள் 11 பேர் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். அதன்படி, கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையில், அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அதில், 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்கும் நாளுக்கு முன்னதாக ஜெயலலிதாவுக்கு தலை சுற்றல், மயக்கம், துணையில்லாமல் நடக்க முடியாத சூழல் ஆகிய பிரச்னை இருந்தது என அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று நடந்த 2 ஆம் நாள் விசாரணையில், ஜெயலலிதா இறப்பதற்கு முந்தைய நாட்களில் அவருக்கு உயிரை காக்கும் அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டதா? என்பது தொடர்பாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் அப்பல்லோ மருத்துவரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது அப்பல்லோ மருத்துவர் மதன்குமார், ஜெயலலிதாவுக்கு 2016 டிசம்பர் 4ம் தேதி மாலை ஏற்பட்டது மாரடைப்பு தான் என்று பதிலளித்தார். மாரடைப்பு ஏற்பட்டபோது ஜெயலலிதாவுக்கு உயிரை காப்பதற்கான அனைத்து சிகிச்சை முறையும் தரப்பட்டது என்றும் அவர் கூறினார்.

ஓபிஎஸ் ஆஜராக சம்மன்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வரும் 21ஆம் தேதி ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் விரைவில் விசாரணை நடத்த உள்ளது. பலமுறை ஆணையம் சம்மன் அனுப்பியும் இதுவரை ஒருமுறை கூட ஓபிஎஸ் நேரில் ஆஜராகவில்லை. இந்த நிலை 21ஆம் தேதி விளக்கம் தர ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

நேரில் சந்தித்தாரா ஓபிஎஸ்
கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அப்போதய முதல்வர் ஜெயலலிதா. அவரை சசிகலா இளவரசி ஆகியோர்தான் கவனித்து வந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை நேரில் சந்தித்தாரா ஓபிஎஸ் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற உள்ளது. ஜெயலலிதா மரணத்தில் ஓபிஎஸ் எதற்காக சந்தேகத்தை கிளப்பினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக ஆறுமுகசாமி ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளவரசிக்கும் சம்மன்
ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து வீட்டில் உடன் இருந்தவர் இளவரசி. அவரும் 21ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சசிகலா அண்ணன் மனைவி இளவரசி, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் போது 75 நாட்கள் அவருடன்தான் மருத்துவமனையில் இருந்தார். எனவே, அவர் ஜெயலலிதாவை எத்தனை முறை சந்தித்தார். அவர், ஜெயலலிதாவிடம் பேசினாரா, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் தொடர்பாக தெரியுமா, அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications