அபத்தம்..மரியாதையே போச்சே..டிடிவி தினகரன் விளாசல்..ஜெயலலிதா அறையில் ரத்தம் வந்தது எப்படி தெரியுமா?
சென்னை: ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை அரசியல்வாதி எழுதியது போல அபத்தமானதாக உள்ளது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஜெயலலிதாவிற்கு இதயமுடக்கம் ஏற்பட்டதையே மரணம் என்று எப்படி எடுத்துக்கொள்வது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஒருவரின் மரணத்தை பற்றி 48 மணி நேரம் கழித்து கூட மருத்துவர்கள் அறிவிப்பார்கள். அம்மாவின் மரணத்தை 24 மணி நேரம் கழித்து அறிவித்திருக்கிறார்கள். அதுதான் இயற்கையாக நடந்தது.
இதய முடக்கம் ஏற்பட்டதையே மரணம் என்று எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. உடனே எப்படி மரணத்தை அறிவிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார் டிடிவி தினகரன்.

அபத்தமான அறிக்கை
நீதியரசர் ஆறுமுகசாமியை தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியும். தனிப்பட்ட முறையில் எனக்கு அவர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை அரசியல்வாதி எழுதியது போல அபத்தமானதாக உள்ளது.

ஓபிஎஸ் இபிஎஸ் அக்ரிமெண்ட்
ஒரு அரசியல் தலைவரின் மரணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். அதில் சந்தேசம் இருப்பதாக திமுகவினர் பொய்யான பிரச்சாரத்தை செய்தனர். அதை அண்ணன் பன்னீர் செல்வம் கையில் எடுத்தார். பன்னீர் செல்வமும் பழனிச்சாமியும் அக்ரிமெண்ட் போட்டு ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தனர். அன்று முதலே நான் இதனைத்தான் கூறுகிறேன். அம்மாவின் மரணம் என்பது இயற்கையானது. இதுக்கு எத்தனை அறிக்கை கொடுத்தாலும் உண்மை அதுதான்.

மருத்துவர்களை அவமதிக்கலாமா?
இதில் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு சென்றால் நிச்சயம் ஆணையத்தின் அறிக்கை கண்டனத்திற்கு உள்ளாகும். மருத்துவர்களின் சிகிச்சையை யாரும் குற்றம் குறை சொல்ல முடியாது.. நீதிமன்றத்தில் நீதிபதியின் தீர்ப்பை எப்படி குறை சொல்ல முடியாதோ அதுபோலத்தான் மருத்துவர்களின் சிகிச்சையும். ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ செய்யாமல் வைத்திருக்க காரணம் அவர்களின் உடல்நிலை காரணமாக இருக்கலாம். மருத்துவர்களை எல்லாம் அவமதிப்பது போல இருக்கிறது.

ரத்தம் வந்தது எப்படி?
ஜெயலலிதா அறையில் ரத்த வெள்ளத்தில் இருந்ததாக முன்னாள் தலைமைச் செயலர் ராம்மோகன் ராவ் கூறியதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிடிவி தினகரன். அறையில் என்ன நடந்தது என்று தெரியாது நான் பார்க்கவில்லை. அம்மாவிற்கு கார்டியாக் அரஸ்ட் நிகழ்ந்த போது மருத்துவர்கள் எக்மோ சிகிச்சை அளித்தனர் அப்போது ரத்தம் வந்திருக்கலாம் நான் பார்க்கவில்லை என்றும் டிடிவி தினகரன் கூறினார்.

எக்மோ சிகிச்சை
ஜெயலலிதாவிற்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி எல்லாம் செய்யவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாக சொல்கின்றனர். அப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லை. இதயமுடக்கம் ஏற்பட்ட போது எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. அது டாக்டர்களுக்கு தெரிந்திருக்கும் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.

ஜெயலலிதாவிற்கு உடல்நல பாதிப்பு
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காய்ச்சல் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருந்த அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா இறுதியில் சடலமாகவே அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டார்.

ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையில் சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஞ்சியோ சிகிச்சை
ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை. அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார்; ஆனால் அது நடக்கவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை அபத்தமாக இருப்பதாக கூறியள்ளார் டிடிவி தினகரன்.












Click it and Unblock the Notifications