உச்சநீதிமன்ற தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்.. "எல்லாம் நன்மைக்கே" ஓபிஎஸ் அளித்த பதில் இதுதான்!
எங்களை பொறுத்தவரை எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கிறோம் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை அதிமுக பொதுக்குழு மூலம் தேர்வு செய்யலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில், எங்களை பொறுத்தவரை எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கிறோம் என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்தன.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் கே எஸ் தென்னரசுவும் ஓபிஎஸ் தரப்பில் செந்தில் முருகன் என்பவரும் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்தை பெற ஆர்வம் காட்டியதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
“கூலா” இருங்க.. எனக்கு “எண்டே” கிடையாது! மேல இருக்கவங்க பாத்துப்பாங்க - ஆதரவாளர்களை தேற்றும் ஒபிஎஸ்
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்
இந்த சூழலில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்கக் கோரியும் தனது கையெழுத்திட்ட வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் , இது தொடர்பாக 3 நாட்களுக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தது.
கையொப்பம் இடத் தயார்
இந்த வழக்கில் இன்று தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு முடிவுகளை ஏற்கவில்லை என்றும் இரட்டை இலை சின்னம் வழங்குவது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவு செய்வார் என்று கூறியது. இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, இதில் ஓ பன்னீர்செல்வம் வைத்த வாதத்தில், இப்போதும் இருவரும் சேர்ந்து வேட்பாளரை அறிவித்தால் நான் கையொப்பம் இடத் தயார். பொது வேட்பாளரை நிறுத்தினால் அதை ஏற்றுக்கொள்ள தயார் என்று வாதத்தை முன்வைத்தார்.
பொதுக்குழு முடிவு செய்யலாம்
எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் பரபரப்பான வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை அதிமுக பொதுக்குழு முடிவு செய்யலாம் எனவும் பொதுக்குழு எடுக்கும் முடிவை அவைத்தலைவர் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்தது". உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, பொதுக்குழுவை கூட்டாமலேயே பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற்று வேட்பாளரை தேர்ந்தெடுக்க எடப்பாடி பழனிசாமி அணி தீவிரம் காட்டி வருகிறது.
பழனிசாமிக்கே சாதகம்?
அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சுற்றறிக்கை மூலம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. பொதுக்குழுவில் பெரும்பாலான உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவாக உள்ளதால் இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கே சாதகம் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. இதனால், எடப்பாடி பழனிசாமியின் தேர்வான கே.எஸ் தென்னரசு மீண்டும் பொதுக்குழு மூலமாக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
"எல்லாம் நன்மைக்கே"
இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்த ஓ பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ஓ பன்னீர் செல்வம், ''எங்களை பொறுத்தவரை எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கிறோம்" என ஒரு வரியில் பதில் அளித்து விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.