சென்னையில் 'வள்ளல் ஏடிஎம்'.. பணத்தை வாரி இறைத்த எந்திரம்.. இன்ப அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள்
சென்னை அம்பத்தூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம்மில் கேட்ட தொகையை விட கூடுதலாக ரூ.12 ஆயிரம் ரூபாய் பணம் வந்துள்ளது.
சென்னை: சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு ஏடிஎம்மில் ரூ 8 ஆயிரம் பணம் எடுத்த வாடிக்கையாளருக்கு ரூ.20 ஆயிரம் ரூபாயை ஏடிஎம் இயந்திரம் அள்ளிக்கொடுத்தது. இதனால், வங்கி வாடிக்கையாளர்கள் ஒரு நிமிடம் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க இப்போது பெரும்பாலும் வங்கிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
பெரிய அளவிலான தொகையை அதாவது 50 ஆயிரத்திற்கு மேல் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால்தான் வங்கிக்கே நேரடியாக செல்கின்றனர். அதேபோல பணம் டெபாசிட் செய்யவும் வங்கிக்குக் போய் செலான் நிரப்பி கால் கடுக்க நிற்க வேண்டிய அவசியம் இல்லை.
சாலை முழுக்க பணம்.. எல்லாமே புதிய ரூ.500 நோட்டுகள்.. மிரண்ட போலீஸ்.. நள்ளிரவில் நடந்தது என்ன
ஏடிஎம் எந்திரங்கள்
பெரிய அளவிலான தொகையை டெபாசிட் செய்ய மட்டுமே வங்கிக்கு நேரடியாக செல்கின்றனர். 50 ஆயிரத்திற்கு கீழ் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்றால் ஏடிஎம் அறைகளில் உள்ள டெபாசிட் இயந்திரங்கள் மூலமாகவே தங்கள் கணக்கில் செலுத்தி விட முடியும். அதுபோக வேறு யாருடைய கணக்கிற்கு செலுத்த வேண்டும் என்றாலும் செலுத்திக்கொள்ளலாம். பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடைமுறை இந்தியாவில் தொடங்கி விட்டது.
வேலைப்பளு குறைவு
பெரு நகரங்கள் முதல் குக்கிராமம் வரை தற்போது ஏ.டி.எம் இயந்திரங்கள் மூலமாக வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்து வருகின்றனர். ஏடிஎம் இயந்திரங்கள் மூலமாக 24 மணி நேரமும் அனைத்து நாட்களிலும் பணம் எடுக்க முடியும் என்பதால் வாடிக்கையாளர்கள் எந்த சிரமும் இன்றி தற்போது தங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுக்கவும் செலுத்தவும் முடிகிறது. ஏடிஎம் இயந்திரங்கள் வருகையால் வங்கிகளுக்கும் வேலைப்பளு குறைந்ததோடு வாடிக்கையாளர்களுக்கும் சிரமங்கள் குறைந்து விட்டன.
கேட்ட தொகையை விட அதிக பணத்தை
ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் எத்தனையே வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு இருந்தாலும் சில குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. இப்படி பணம் எடுக்கும் போது சில நேரங்களில் பணம் வராமல் அக்கவுண்டில் இருந்து டெபிட் செய்யப்படும். பெரும்பாலும் உடனடியாக வங்கிக் கணக்கிற்கு மீண்டும் இந்தப் பணம் திரும்பி வந்துவிடும் என்றாலும் சில நேரம் வங்கிக்கு போய் முறையிட வேண்டும். இது போன்ற சிக்கலும் இருக்கிறது என்றால் அரிதாக சில நேரங்களில் கேட்ட தொகையை விட அதிக பணத்தை அள்ளி வீசி வள்ளல்களாகவும் சில ஏடிஎம்கள் மாறி விடுவதுண்டு. அவ்வப்போது இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
12 ஆயிரம் ரூபாய் கூடுதலாக
அந்த வகையில் சென்னை அம்பத்தூரில் உள்ள ஏடிஎம்மில் 8 ஆயிரம் ரூபாய் எடுக்க வந்தவருக்கு 20 ஆயிரத்தை ஏடிஎம் இயந்திரம் அள்ளிக்கொடுத்தது. இதனால், ஒரு நிமிடம் வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த விவரம் வருமாறு:- சென்னை அம்பத்தூர் பழைய சிடிஎச் சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியை ஒட்டி அந்த வங்கியின் ஏடிஎம் இயந்திரமும் உள்ளது. இந்த ஏடிஎம்மில் இன்று காலை பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் கேட்ட தொகையை விட 12 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வந்துள்ளது. 8 ஆயிரம் பணம் எடுக்க முயற்சித்த வாடிக்கையாளர் ஒருவருக்கு 20 ஆயிரம் பணத்தை வாரி இறைத்து உள்ளது ஏடிஎம்.
200 ரூபாய் ட்ரேயில் 500 ரூபாய்
இதனால் ஒரு நிமிடம் திகைத்த வாடிக்கையாளர்கள் உடனடியாக வங்கிக்கு சென்று நிகழ்ந்தவற்றை கூறி கூடுதல் பணத்தை ஒப்படைத்துள்ளனர். இந்த தவறு எதனால் ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்த வங்கி ஊழியர்கள் 200 ரூபாய் வைக்க வேண்டிய டிரேவில் ரூ.500 ரூபாய் வைத்ததே குளறுபடிகளுக்கு காரணம் என்று கூறியதாக தெரிகிறது. உடனடியாக விரைந்து வந்த தொழில்நுட்ப பிரிவினர் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பிரச்சினையை சரி செய்தனர். ஏடிஎம் இயந்திரத்தில் கூடுதல் பணம் வந்தது குறித்த தகவல் குறித்து அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசிக்கொண்டனர்.