காரில் ஆண் நண்பருடன் போதையில் வந்த பெண்.. அபராதம் விதித்த போலீசார் மீது தாக்குதல்.. சென்னையில் பரபர
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் அருகே மதுபோதையில் வாகனம் ஓட்டியது மட்டுமின்றி அபராதம் விதித்த போக்குவரத்து போலீசாரையும் இருவர் தாக்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழகம் முழுவதும் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் படி போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகை பல மடங்கு உயர்த்தபப்ட்டுள்ளது.
ஹெல்மெட் அணியாமல் வந்த ஆயிரம் ரூபாய் அபரதம் விதிக்கப்படுகிறது. உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டினால் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
ஆர்டிஓ ஆபிஸுக்கே போகாம.. வீட்டில் இருந்தபடியே டிரைவிங் லைசன்ஸை புதுப்பிப்பது எப்படி?
புதிய வாகன சட்டத்தின்படியே
புதிய வாகன சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பாக 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்தால் 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஓட்டுநர் குடித்து இருந்தால் உடன் பயணிப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்றும் புதிய வாகன சட்டம் சொல்கிறது. இந்த புதிய வாகன சட்டம் கடந்த அக்டோபர் மாத இறுதியில் அமல்படுத்தப்பட்டது. தற்போது புதிய வாகன சட்டத்தின்படியே போலீசார் விதிமீறல்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
போலீசாருடன் வாக்கு வாதம்
விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும் அடிக்கடி நடப்பதை காண முடிகிறது. குறிப்பாக சென்னையில் அடிக்கடி வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலான வாகன ஓட்டிகள் தவறை உணர்ந்து அபராதம் கட்ட தயராக இருந்தாலும் சிலர் போலீசாரிடம் வீண் வம்பு செய்யும் வகையில் நடந்து கொள்வதாக போலீசார் சிலரே சொல்கிறார்கள்.
தகாத வார்த்தைகளில் பேசுவது
அபராத தொகை அதிகரிக்கப்பட்டதால், ஒரு சில போலீசார் வாகன ஓட்டிகளில் லஞ்சமாக பணத்தை கறப்பதாகவும் புகார்கள் இல்லாமல் இல்லை. இது ஒருபுறம் இருக்க மதுபோதையில் வாகனம் ஓட்டி வரும் சில வாகன ஓட்டிகள் போலீசார் நிறுத்தி அபராதம் விதிக்க முயற்சிக்கும் போது அவர்களிடம் தகாத வார்த்தைகளில் பேசுவது, தாக்குதலில் ஈடுபடுவது என வம்பு செய்கின்றனர். இதனால், போக்குவரத்து போலீசாருக்கும் தேவையற்ற மன உளைச்சல் ஏற்படவும் செய்கின்றனர்.
காரை நிறுத்தி போலீசார் சோதனை
இந்த நிலையில், எப்போதும் பரபரப்பாக காணப்படும் நுங்கம்பாக்கம் - கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் மதுபோதையில் காரை ஓட்டி வந்த பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் போக்குவரத்து உதவி ஆய்வாளரை தாக்கியது பெரும் பரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நுங்கம்பாக்கம் - கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக அந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.
ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
இதில் காரை ஓட்டி வந்த ஷெரின் பானு என்ற பெண் மற்றும் அவரது நண்பர் விக்னேஷ் ஆகிய இருவரும் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அபராதம் விதித்தனர். இதனால், கோபம் அடைந்த இருவரும் போக்குவரத்து போலீசாருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அதோடு நிறுத்தாமல், போக்குவரத்து உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை தாக்கியிருக்கின்றனர். இதையடுத்து, இருவர் மீதும் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்தனர்.