பாஜக வளர்ச்சியை பார்த்து பயமா இருக்கா? உங்க உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சமாட்டோம்.. சீறிய பாஜக!
சென்னை : முன்னாள் எம்.பியும், பாஜக மாநில துணைத் தலைவருமான சசிகலா வீடு, கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "திமுகவினர் சசிகலா புஷ்பா வீட்டில் வன்முறை வெறியாட்டம் நடத்தியிருப்பது, பாஜகவின் வளர்ச்சியை கண்டு அஞ்சும் திமுகவின் படபடப்பை வெளிப்படுத்துகிறது. இந்த உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் பாஜக அஞ்சாது" எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பேசிய தமிழக அமைச்சர் கீதா ஜீவன், "அண்ணாமலை மேடையில் ஏறும் போது நாங்களும் ஏற வேண்டியிருக்கும்" என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் பேசிய சசிகலா புஷ்பா, அமைச்சரை மிரட்டும் வகையில் பேசி இருந்தார்.
சசிகலா புஷ்பாவின் பேச்சைத் தொடர்ந்து, அவரது வீட்டில் தாக்குதல் நடந்துள்ளது. அவரது வீடு, கார் கண்ணாடி உடைக்கப்பட்டு வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளன. இதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேடையில் ஏறுவோம்
திமுக அமைச்சர்களை தொடர்ச்சியாக கடுமையாக விமர்சித்து வருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதனால் திமுக அமைச்சர்கள் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்தவகையில், அமைச்சர் கீதாஜீவன், இனி அண்ணாமலை எங்களைப் பற்றி பேசினால் அதே மேடையில் நாங்கள் ஏற வேண்டியது இருக்கும் என்று எச்சரித்து இருந்தார். இதற்கு பாஜகவினர் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

காலை வெட்டுவோம்
கடந்த 21ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.யும், பாஜக மாநில துணைத்தலைவருமான சசிகலா புஷ்பா பேசிய போது, உங்களைப்போல் சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி அண்ணாமலை கோர்ட் வாசலில் நிற்கவில்லை. குற்றவாளிகளை கொண்டு போய் நிறுத்தித்தான் பழக்கம், குற்றவாளியாய் நின்று அவருக்கு பழக்கம் இல்லை. அவரைப் பற்றி தரக்குறைவாக பேசினால் கீதா ஜீவன் நாக்கை விட்டுவோம் வீட்டை விட்டு வெளியே வர முடியாத படி கால்களை விட்டுவோம் என்று கடுமையாகப் பேசி இருந்தார்.

சசிகலா புஷ்பா வீட்டில் தாக்குதல்
அமைச்சர் கீதா ஜீவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த சசிகலா புஷ்பாவை கைது செய்யக்கோரி திமுகவினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் இருக்கும் சசிகலா புஷ்பாவின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். மேலும் வீட்டின் ஜன்னல்களையும் உடைத்துள்ளனர். இதனால், பாஜக ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தின்போது சசிகலா புஷ்பா கன்னியாகுமரியில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.

பாஜக நாராயணன்
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள பதிவில், "பாஜகவின் மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா அவர்களின் இல்லம் மற்றும் வாகனத்தின் மீது கொடும் தாக்குதலை திமுகவினர் நடத்தியிருப்பது தமிழகத்தில் காட்டாட்சி நடப்பதை உறுதி செய்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம்
மேலும், "தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை மீதான தமிழக அமைச்சர்களின் தரக்குறைவான விமர்சனங்களையடுத்து தற்போது தூத்துக்குடியில் திமுக கோழைகள் வன்முறை வெறியாட்டம் நடத்தியிருப்பது, பாஜகவின் வளர்ச்சியை கண்டு அஞ்சும் திமுகவின் படபடப்பை வெளிப்படுத்துகிறது. இந்த உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் பாஜக அஞ்சாது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு தொடர்ந்து சீர்கெட்டு வருகிறது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த தாக்குதல். சட்டம் ஒழுங்கை பேணிக் காக்க முடியாத அரசு இருந்தும் என்ன பயன்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக நாராயணன்.












Click it and Unblock the Notifications