செம சிக்கலில் ஜெயக்குமார்.. திமுககாரரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி
திமுக பிரமுகரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: திமுக பிரமுகரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் 49வது வார்டுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் தி.மு.க-வினர் கள்ள ஓட்டு போட முயல்வதாக தகவல் வெளியானது.
அப்போது அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தலைமையிலான அ.தி.மு.கவினர் அங்கிருந்த தி.மு.க பிரமுகர் ஒருவரைப் பிடித்து தாக்கி, அவரை அரை நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

10 பிரிவுகளின் கீழ் வழக்கு
அப்போது அங்கிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் இந்த சம்பவத்தை தனது முகநூல் பக்கத்தில் லைவாக காட்டிய நிலையில் அந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் பாதிக்கப்பட்ட நரேஷ் என்ற தி.மு.க பிரமுகர் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உட்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை போலீசார் 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

ஜெயக்குமார் கைது
அதேபோல அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உட்பட 113 அ.தி.மு.கவினர் மீது ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்த வழக்கில் நீதிமன்ற காவலில் வரும் மார்ச் 7 ஆம் தேதி வரை பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைத்தனர். அதேபோல அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கிலும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை மீண்டும் ராயபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜார்ஜ் டவுன் நீதிமன்றம்
இந்நிலையில் இரண்டாவது வழக்கில் போலீசார் ஜார்ஜ் டவுன் 16-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் 15வது மாஜிஸ்திரேட் நீதிபதி முரளி கிருஷ்ணா ஆனந்த் விடுமுறை என்பதால் 16-வது மாஜிஸ்திரேட் நீதிபதி தயாளன் தன்னால் விசாரணைக்கு எடுத்து கொண்டு விசாரித்தார்.

மார்ச் 9 வரை நீதிமன்ற காவல்
முன்னதாக சென்னை ராயபுரத்தில் அரசு உத்தரவை மீறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாலை மறியலில் ஈடுபட்டு ராயபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கில் மார்ச் 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஜாமீன் வழக்கு வாதம்
ஜெயக்குமார் தரப்பில் ஆஜரானஅரசு முன்னாள் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி, ஜெயக்குமார் மீது அனைத்து பிரிவுகளும் ஜாமீனில் வெளிவரக்கூடிய வகையில் வழக்கு பதியபட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றார். மேலும், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்ப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமரா பதிவை பார்த்தால் உண்மை தெரியும் என வாதிட்டார்.

கொலை மிரட்டல்
பாதிக்கப்பட்ட நரேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன், ஒரு முன்னாள் அமைச்சர், சட்டம் படித்தவர் இதுபோன்று வெளிப்படையாக மிரட்டியுள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கினால் புகார் கொடுத்தவரின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்க கூடாது என வாதிட்டார்.

தகவல் தொழில் நுட்ப பிரிவு வழக்கு
காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் பாதிக்கப்பட்டவரை 100 பேர் முன்பு மிரட்டியுள்ளார் என்றும் "சாவடிங்கடா" என்று கொலை மிரட்டல் விடுத்தார். இது கொலை முயற்சி என்பதால் அவர் மீது 307 பதியபட்டுள்ளதாகவும் மேலும் தகவல் தொழில் நுட்ப பிரிவு வழக்கும் ஜெயக்குமார் மீது சேர்க்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

ஜாமீன் மனு தள்ளுபடி
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர் 307 பிரிவுக்கான குற்றமே நடக்கவில்லை எனவும், அதற்கான முகாந்திரம்மும் முதல் தகவல் அறிக்கையில் இல்லை என்றார். வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications