41 நாள்.. ‘மொத்தமா முடிஞ்ச்’- எடப்பாடிக்கு எந்தக் காலமும் இல்லை’ குண்டை தூக்கிப் போடும் ஓபிஎஸ் டீம்!
சென்னை : எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு இனி பெரிய சிக்கல் காத்திருக்கிறது என்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.
ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், அடுத்த நான்கு மாதங்களுக்குள் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த முடிப்பதாக தீர்மானம் நிறைவேற்றியது எடப்பாடி தரப்பு.
அந்த நான்கு மாத அவகாசம் நவம்பர் 11ஆம் தேதியோடு முடிவடையும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கின் அடுத்த விசாரணை 21ஆம் தேதி தான் நடைபெற இருக்கிறது.
வழக்கு ஒருவேளை அவர்களுக்கு சாதகமாகத் திரும்பினாலும் கூட, 'துக்குழுவில் நிறைவேற்றிய அந்த ஒரு 'தீர்மானம்' காரணமாக, அவர்கள் தேர்தலை அதற்குப் பிறகு நடத்த முடியாது எனக் கூறுகிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர்.

ஓபிஎஸ் டீம் வாதம்
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கை தசரா விடுமுறைக்குப் பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர். அப்போது ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் அதற்குள் அதிமுக நிர்வாகிகள் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தயாராகி வருகின்றனர். எனவே, வழக்கு விசாரணைக்கு வரும் வரை தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் அல்லது, தற்போதைய நிலையே தொடர உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

தேர்தலை நடத்த முடியாது
இதையடுத்து நீதிபதிகள், எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் தற்போது நீங்கள்தானே பொறுப்பில் இருக்கிறீர்கள், பிறகு தேர்தலை நடத்துவதற்கு என்ன அவசரம்? என்று கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து ஈபிஎஸ் தரப்பில், பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தமாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தனர். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கு முடியும் வரை அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

ஈபிஎஸ் டீம் சோகம்
அடுத்து இந்த வழக்கு விசாரணை தசரா விடுமுறைக்குப் பிறகு நவம்பர் 21ஆம் தேதிதான் விசாரணைக்கு வரும். அதன் பிறகு எத்தனை நாட்களுக்கு விசாரணை நடக்கும், எப்போது இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதும் தெரியாது. அதுவரை எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தி, எடப்பாடி பழனிசாமியை நிரந்தர பொதுச் செயலாளராக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஓபிஎஸ் டீம் வீசும் வெடி
இதற்கிடையே, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இன்னொரு குண்டைத் தூக்கிப் போடுகிறார்கள். அதாவது ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றியபோது, அன்றைய தேதியில் இருந்து 4 மாதங்களுக்குள் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றினர். அதன்படி பார்த்தால், வரும் நவம்பர் 11ஆம் தேதி 4 மாதங்கள் முடிவடைகின்றன. ஆனால், வழக்கு அதன்பிறகே மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

பிளான் தவிடுபொடி
இதனால், எடப்பாடி டீம் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி 4 மாதங்களுக்குள் தேர்தலை நடத்த முடியாமல் போகும். எனவே, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் அதோடு செல்லாமல் போகும். வழக்கு தீர்ப்பு வருவதற்கு முன்பே எங்களுக்கு வெற்றி தான். இன்றைய உத்தரவால் எடப்பாடி பழனிசாமியின் பிளான் எல்லாம் தவிடுபொடியாகிவிட்டது, இடைக்காலமும் இல்லை, எதிர்காலமும் இல்லை என உற்சாகமாகக் கூறுகிறார்கள்.

இன்னும் 41 நாள் தான்
அதாவது இன்னும் 41 நாட்களில் எடப்பாடி பழனிசாமி தரப்பு நிறைவேற்றிய அந்த '4 மாதங்களுக்குள் தேர்தல்' தீர்மான கால அவகாசம் முடிவடைகிறது. அதன்பிறகு, அவர் இடைக்கால பொதுச் செயலாளராகவே இருக்க மாட்டார். ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டும் தான் இருக்கும். அதற்காத்தான் ஈபிஎஸ் வேகமாக வேலை செய்து வந்தார், அதற்கும் இன்று ஆப்பு வைத்துவிட்டோம் என்கிறார்கள். இதற்கிடையே, இன்றைய உத்தரவு பற்றி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications