இனி பைக் வச்சிருந்தாலே சம்பாதிக்கலாம்.. தமிழகத்தில் பைக் டாக்ஸி சேவைக்கு விரைவில் அனுமதி
சென்னை: தமிழகத்தில் பைக் டாக்சிகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளது. இதற்கான விதிமுறைகள் தமிழகத்தில் கொண்டுவரப்பட உள்ளது.
இன்றைக்கு சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இங்கு கார் டாக்ஸியை போல் பைக் டாக்ஸி சேவைகளுக்கும் மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
தற்போது தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்ளிட்ட சில நகரங்களில் பைக் டாக்ஸி சேவை உள்ளது. குறிப்பாக சென்னையில் இளைஞர்கள் பலர் பைக் டாக்ஸி சேவையை விரும்பி பயன்படுத்தி வருகிறார்கள்.

நீதிமன்றம் உத்தரவு
ஆனாலும் வணிக ரீதியாக பைக் டாக்ஸி சேவையை பயன்படுத்த தமிழகத்தில் அரசு எந்த ஒரு அதிகாரப்பூர்வ அனுமதியும் வழங்கவில்லை. நீதிமன்ற உத்தரவு காரணமாக பைக் டாக்ஸி சேவை தற்போதைய நிலையில் தொடர்கிறது. இதற்கு தமிழகத்தில் விதிமுறை வகுக்கும் வரை தடையில்லை என்றும் நீதிமன்றம் அறிவித்து இருந்தது. இதையடுத்து பைக் டாக்ஸிக்கு விதிமுறைகளை வகுக்க அரசு முடிவு செய்துள்ளது.

விதிமுறைகள் உருவாக்கம்
இது தொடர்பாக போக்குவரத்து துறை ஆணையர் சமயமூர்த்தி கூறுகையில், மோட்டார் வாகன சட்டப்படி சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்தக் கூடாது. புதிய மோட்டார் வாகன சட்டத்தில் பைக் டாக்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறும்.

விரைவில் நடைமுறை
பைக் டாக்சிகளை வணிக பயன்பாட்டுக்கென பதிவு செய்யும் நடைமுறையும் விரைவில் தமிழகத்தில் நடைமுறைக்கு வர உள்ளது . அதன்பின்னர் பைக் டாக்சிகளுக்கு முறைப்படி அனுமதி வழங்கப்படும்" என்றார்.

டெல்லி அரியானாவில் சேவை
தற்போதைய நிலையில் பைக் டாக்சிகளை ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்கிற விதிமுறை தமிழகத்தில் கடைபிடிக்கப்படுகிறது. புதிய போக்குவரத்து சட்டப்படி இந்த விதிமுறை கடைபிடிக்கப்படுகிறது. எனவே. பைக் டாக்சி நிறுவனமே பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களின் ஹெல்மட்டையும் ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை உருவாக்கப்படும் என தெரிகிறது. ஏற்கனவே பைக் டாக்ஸி சேவை டெல்லி மற்றும் அரியானாவில் உள்ளது.












Click it and Unblock the Notifications