இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்!'.. ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை ரத்து
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் பொருட்களிலும் பயோமெட்ரிக் (கைரேகை) முறையில் பொருட்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டு பழைய நடைமுறையான பாயின்ட் ஆப் சேல் மிஷினில் ஸ்கேன் செய்து ரேஷன் பொருட்கள் வழங்கும் நடைமுறை நேற்று முதல் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. குளறுபடி காரணமாக பயோமெட்ரிக் முறை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம் தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1ம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி இந்தியாவில் எங்கு ரேஷன் கார்டு இருந்தாலும் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ளும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன்படி அறிமுகம் செய்யப்பட்ட பயோமெட்ரிக் முறை மூலம் மட்டுமே தமிழகத்தில் 2 கோடியே 9 லட்சத்து 44 ஆயிரத்து 864 ரேஷன் கார்டுதாரர்களுக்கு 34 ஆயிரத்து 773 ரேஷன் கடைகள் மூலம் உணவு பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
விரல் ரேகை பதிவு
இந்த திட்டத்தை அமல்படுத்த வசதியாக அனைத்து ரேஷன் கடைகளிலும் பாயின்ட் ஆப் சேல் இயந்திரத்துக்கு மாற்றாக, பயோ மெட்ரிக் எனப்படும் விரல் ரேகை பதிவு இயந்திரம் அளிக்கப்பட்டது. இந்த இயந்திரத்தை செயல்படுத்துவது குறித்து ரேஷன் கடை ஊழியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. அதன் பின்னரே தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் வாங்க வந்தவர்கள், கைரேகை வைத்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சர்வர் வேலை செய்யவில்லை
இதன்படியே கைரேகை வைத்தவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால், பல இடங்களில் கைரேகை பதிவு மிஷின் சர்வர் கோளாறு காரணமாக சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் கவலை அடைந்தனர். இது தொடர்பாக புகார்கள் எழவே,. அனைத்து கூட்டுறவு, மண்டல இணை பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன் புதிய உத்தரவு பிறப்பித்தார்.
பொதுமக்கள் அவதி
இதன்படி "கைவிரல் ரேகையை அங்கீகரிக்க முடியவில்லை என்ற காரணத்துக்காக யாருக்கும் பொருட்கள் வழங்காமல் இருந்துவிடக் கூடாது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த வழிமுறைகளை பின்பற்றி பொருட்கள் வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார். ஆனாலும் பயோமெட்ரிக் முறை தொடர்ந்து இருந்தது. இதனால் ரேஷன் பொருட்கள் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
தமிழக அரசு அதிரடி
ரேஷன் கடை ஊழியர்கள், கைரேகை முறையை நடைமுறைப்படுத்தும் போது பலருக்கும் அது வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் சில இடங்களில் வாக்குவாதங்களும் ஏற்பட்டது. பொதுமக்களும் பொருட்கள் வாங்க ரேஷன் கடைகளில் நீண்ட நேரம் காத்திருந்து பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலையும் ஆங்காங்கே இருந்தது.. இதுபற்றிய புகார் தொடர்ந்து தமிழக அரசு அதிரடியாக புதிய உத்தரவிட்டது.
வாய்மொழி உத்தரவு
இதன்படி பயோமெட்ரிக் முறை (கைரேகை பதிவு செய்தால்) மட்டுமே ரேஷன் பொருட்கள் வாங்க முடியும் என்ற திட்டம் நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பழைய நடைமுறையின்படியே, அதாவது ரேஷன் அட்டையை (ஸ்மார்ட் கார்டு) பாயின்ட் ஆப் சேல் மிஷினில் ஸ்கேன் செய்து ரேஷன் பொருட்கள் நேற்று முதல் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.