ரேஷனில் பொருள் வாங்க அதிரடி கட்டுப்பாடு.. செப்.30க்குள் பயோமெட்ரிக் முறை.. தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இனி பொருள் வாங்க முடியும் என்ற நிலை உருவாகப்போகிறது.
Recommended Video
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இப்போது ஸ்மார்ட் கார்டு மூலம் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. எனினும் ஸ்மார்ட் கார்டை யார் கொண்டு போனாலும் அவர்களுக்கு பொருளை கொடுக்க முடியும்.
இந்த நடைமுறையில் சில முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் வந்தது. இதையடுத்து பயோமெட்ரிக் முறையை ரேஷன் கடைகளில் அறிமுகப்படுத்த அரசு பரிசீலித்து வந்தது. இந்த நடைமுறை அமலுக்கு வந்தால், பெயர் உள்ளவர்கள் மட்டுமே ரேஷன் கடைக்கு சென்று பொருள் வாங்க முடியும். மற்றவர்கள் வாங்க இயலாது. இத்திட்டத்தை அமல்படுத்தினால் அரசுக்கு பல கோடி பணம் மிச்சமாகும் என்று கூறப்படுகிறது.
செப்.1ம் தேதி முதல் தமிழகத்தில் 21 சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிரடியாக உயருகிறது... விவரம்
விரைவில் அறிமுகம்
முதல்கட்டமாக திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பயோமெட்ரிக் முறை கடந்த ஜூலை மாதம் சோதனை முயற்சியாக அறிமுகம் செய்யப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் 300 கடைகளில் பயோமெட்ரிக் கருவி வாங்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டது. இதே நடைமுறையை அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
பயோமெட்ரிக் கருவி
இதுகுறித்து தமிழ்நாடு உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் சஜன்சிங் சவான் அனைத்து மாவட்ட மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் சுற்றறிக்கையில் அனுப்பி உள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: அனைத்து ரேஷன் கடைகளிலும் தற்போது பயன்பாட்டில் உள்ள பயோமெட்ரிக் கைரேகை பதிவு மிஷினின் தரத்தை மேம்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே ரேஷன் கடைகளில் பயன்பாட்டில் உள்ள பாயிண்ட் ஆப் மிஷினை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இந்த பணி முடிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், கரூர் மாவட்டங்களிலும் முடியும் தருவாயில் உள்ளது.
மற்ற மாவட்டங்களிலும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் அனைத்து நியாய விலை கடைகளில் பயோமெட்ரிக் பொருத்தும் பணி முடிவடைந்துவிடும்.
பயோமெட்ரிக் முறை
எனவே, புதிய பயோமெட்ரிக் மேம்பாட்டு கருவியை நியாயவிலை கடைகளில் பொருத்துவது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அது தொடர்பான விவரங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்" இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பக்கத்து வீட்டினர் வாங்க முடியாது
அரசின் இந்த அறிவிப்பு காரணமாக ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள், தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் கைரேகையை பதிவு செய்தால் மட்டுமே இனி ரேஷன் பொருட்கள் வாங்க முடியும். இதனால், வேலைக்கு செல்பவர்கள், பக்கத்து வீட்டில் கொடுத்து ரேஷன் பொருட்களை இனி வாங்க முடியாது. இதேபோல் சொந்தக்காரர்களிடம் கொடுத்தும் இனி பொருட்கள் வாங்கி வைக்க சொல்ல இயலாது.
பொருட்கள் வாங்க முடியாது
வயதானவர்கள் மட்டுமே உள்ள வீடுகளில் அவர்களில் யாராவது ஒருவர் சென்றால் மட்டுமே இனி ரேஷனில் பொருட்கள் வாங்க இயலும் என்ற நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக இனி வரும் காலத்தில் பொருட்கள் வாங்காதவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனிடையே கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ள காரணத்தால், இப்போதைக்கு ரேஷன் கடைகளுக்கு பயோமெட்ரிக் முறையை கொண்டுவர வேண்டாம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.