ட்விஸ்ட்டு.. அடேங்கப்பா! தேமுதிக ரூட்டே வேற.. சிக்னல் காட்டும் பிரேமலதா..! பாஜக பிளான் என்னாகும்?
சென்னை : தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க பாஜக முனைப்பு காட்டி வரும் நிலையில், பிரேமலதாவின் பேச்சு வேறு பக்கம் திரும்பியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பாஜக தலைமை, 2024 தேர்தலுக்கு வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. இதற்காக சில கட்சிகளின் தலைவர்களை பாஜகவின் முக்கிய தலைவர்கள் சந்தித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, அதிமுகவோடு, அமமுக, தேமுதிகவும் தங்கள் கூட்டணியில் இணைய வேண்டும் என்று பாஜக தலைமை விரும்புகிறது. அதை நோக்கிய நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்தின் பேச்சுகள் அதிமுக - பாஜக கூட்டணிக்கு கல்தா கொடுப்பது போல அமைந்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பாஜக கூட்டணி
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை கருத்தில் கொண்டு ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோரை கொண்ட ஒருங்கிணைந்த அதிமுகவோடு இணைந்து தேர்தலைச் சந்திப்பதற்கான திட்டங்களை தீட்டி வருகிறது பாஜக மேலிடம். அதிமுக கட்சிக் குழப்பத்திற்கு மத்தியில், இப்போதே சீட் கணக்குகளையும் பாஜக தலைமை போடத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. டிடிவி தினகரனின் அமமுக, விஜயகாந்த்தின் தேமுதிக மற்றும் சிலபல சிறிய கட்சிகளை இணைத்து வலுவான கூட்டணியை அமைக்க திட்டமிட்டு வருகிறது பாஜக.

மெகா கூட்டணி
பாஜக தரப்பு, தேர்தல் வேலைகளை தீவிரமாக தொடங்கிய நிலையில் தான் சமீபத்தில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்றார். அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்தக் கூட்டணியில் எந்தெந்தக் கட்சிகள் இணையப்போகின்றன என்பது பெரும் கேள்வியாக இருக்கிறது. பாமக இந்தக் கூட்டணியில் இருக்குமா என்ற விவாதங்கள் தொடங்கியுள்ளன.

தேமுதிக
இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த், பாஜக, அதிமுக என இரு கட்சிகளையும் விமர்சித்துப் பேசிவருவதும், திமுகவை பாராட்டி வருவதும் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில், சென்னை கனமழை தொடர்பாக திமுக அரசின் நடவடிக்கைகளை தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் பாராட்டியிருந்தார். அதேபோல, பிரேமலதா விஜயகாந்த்தும், மழையால் சென்னை பாதிக்கும் என நினைத்தேன். ஆனால், அந்தளவுக்கு பாதிப்பு இல்லை, ஒரு சில இடங்களில் தேங்கிய நீரையும், துரித நடவடிக்கை மேற்கொண்டு அரசு வெளியேற்றியது பாராட்டத்தக்கது என்றார்.

ஊழல் கட்சி பாஜக
அதோடு, குமரி மாவட்டத்திற்குச் சென்ற பிரேமலதா விஜயகாந்த், அங்கு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அங்கு பேசும்போதும், பாஜக, அதிமுகவை விமர்சித்துள்ளார். குமரி மாவட்டத்தில் வலுமிக்க கட்சிகளாக விளங்கும் காங்கிரஸ், பாஜக கட்சிகள் குமரி மாவட்டத்தை சீரழித்து வருகிறது. பல்வேறு ஊழல்களால் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விட்டது. தற்போது இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் கட்சியாக பாஜக உள்ளது எனப் பேசி இருக்கிறார் பிரேமலதா. கூட்டணி அமைக்க பாஜக நெருங்கி வரும் சூழலில், பாஜகவை ஊழல் கட்சி என பிரேமலதா கடுமையாக தாக்கியிருப்பது கவனிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா பற்றி விமர்சனம்
மேலும் ஜெயலலிதாவையும் பிரேமலதா சாடியுள்ளார். சட்டசபையில் ஜெயலலிதா, கேப்டன் பற்றி என்னவெல்லாம் பேசினார். நான் எதையும் மறக்கவில்லை. ஜெயலலிதாவை விஜயகாந்த் அப்படி என்ன கேட்டுவிட்டார்? ஏன் பால் விலை, பஸ் கட்டணத்தை உயர்த்தினீர்கள் என்றுதான் கேட்டார். மக்கள் பிரச்சனைகளைத் தானே கேட்டார். அதில் என்ன தவறு? ஆனால் ஜெயலலிதா, இனிமேல் உங்களுக்கு இறங்குமுகம்தான் என்று சொன்னார். விஜயகாந்த்திற்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அவர் இன்றும் நம்முடன் சிங்கம் போல இருக்கிறார். விஜயகாந்த்தினைப் பார்த்து சாபம் விட்டவரை கடவுள் கொண்டு சென்றுவிட்டார் எனப் பேசினார்.

திமுகவுக்கு ஆதரவு
பிரேமலதா இதோடு விடவில்லை. திமுக பக்கம் ஒதுங்கும் வகையிலும் அவரது பேச்சுகள் அமைந்துள்ளன. திமுக இந்தி திணிப்பை எதிர்ப்பதை வரவேற்கிறோம். அவர்களின் நிலைப்பாடுதான் எங்களுடைய நிலைப்பாடும். எந்த மொழியையும் நாங்கள் எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பை தடுப்பதே எங்கள் நிலைப்பாடு. இன்றைக்கு எல்லா மொழியையும் யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் திணிக்கமுடியாது. தமிழ்நாட்டில் இந்தியை கட்டாயம் படித்துதான் ஆக வேண்டும் என்று திணிக்க முடியாது என திமுக கூறுகிறது. அதேதான் தேமுதிகவின் நிலை" எனத் தெரிவித்துள்ளார். இதுவும் பாஜகவை சீண்டும் பேச்சாகவே பார்க்கப்படுகிறது.

பாஜகவை சீண்டிய பிரேமலதா
மேலும், மது ஒழிப்பு என்பது இவர்கள் ஆட்சிக்கு வரும்போது அவர்களையும் அவர்கள் ஆட்சிக்கு வரும்போது இவர்களையும் மாறி மாறி குறைகூறி கொண்டே இருக்கிறார்கள். ஆட்சிக்கு வராத பிற கட்சியினர் இத்தனை கோடி ரூபாய் விற்பனை என்பதே வெட்கக்கேடாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். அவரவர் கட்சியை சேர்ந்தவர்களை குடிப்பதை நிறுத்தச் சொன்னாலே நிச்சயமாக படிப்படியாக மது விற்பனை குறையும் எனப் பேசியுள்ளார் பிரேமலதா. இதன் மூலம் பாஜகவின் அண்ணாமலையை சாடுவதாக கருத வேண்டியுள்ளது.

ரூட் மாறுதே
நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்கவே தேமுதிக விரும்புகிறது என்றும், அதன் காரணமாகவே பிரேமலதா விஜயகாந்த்தும், அதிமுக, பாஜகவை கடுமையாக விமர்சிப்பதோடு, திமுகவை மென்மையாகவே விமர்சிக்கிறார் என்றும் பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. கடந்த தேர்தலிலேயே தேமுதிகவுடன் திமுக கூட்டணி அமைக்க விரும்பியும், பிரேமலதா தான் அதற்கு முட்டுக்கட்டை போட்டதாகவும் அப்போது பேச்சு எழுந்தது. இப்போது அவரே கூட்டணிக்கு பச்சைக்கொடி காட்டும் விதமாக பேசி வருவதை அரசியல் நோக்கர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications