என்ன திடீரென "டிராக்" மாறுது.. அதிமுக-பாஜக கூட்டணிக்கு என்னாச்சு? மாறி மாறி சூடாக "கமெண்ட்"
சென்னை: ரஜினிகாந்த் கட்சி துவங்குவதாக அறிவித்தாலும் அறிவித்தார்.. பாஜக மற்றும் அதிமுக தலைவர்களிடையே சமீபகாலமாக வார்த்தை யுத்தம் அதிகரித்துவிட்டதை பார்க்க முடிகிறது.
சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை தந்தபோது, அந்த விழா மேடையில் வைத்து அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியிட்டார்.
அதாவது, வரும் சட்டசபை தேர்தலிலும் பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்பதுதான் அந்த அறிவிப்பு.
ரஜினிகாந்த்... கமல்ஹாசனால்... திமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது... வாக்குகள் சிதறாது -கே.என்.நேரு
அரசு விழாவில் அறிவிப்பு
அரசு விழாவில் கூட்டணி அறிவிப்பை வெளியிடலாமா என்று ஒரு பக்கம் விமர்சனங்கள் வந்தாலும் கூட, முன்கூட்டியே கூட்டணியை உறுதி செய்வதில் அதிமுக அதிக ஆர்வம் காட்டியதுதான் இந்த அறிவிப்புக்கு காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறினார்கள்.
கட்சி துவங்குவதாக ரஜினி அறிவிப்பு
ஆனால் இது ரஜினிகாந்த் கட்சி துவங்குவாரா, இல்லையா என்ற ஒரு இழுபறி நிலை இருந்த காலகட்டத்தில் நடந்தேறிய விஷயம். உடல்நிலை பாதிப்பு காரணமாக ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்குவாரா என்ற கேள்விக்குறி அப்போது மிகப்பெரிதாக இருந்தது. ஆனால், இந்த கூட்டணி உறுதியான சில வாரங்களில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார்.
டிசம்பர் மாதம் கட்சி அறிவிப்பு
டிசம்பர் 31ம் தேதி கட்சி பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும், ஜனவரி மாதம் கட்சியை துவங்க உள்ளதாகவும் திட்டவட்டமாக அறிவித்தார் ரஜினிகாந்த். இந்த நிலையில் சமீபகாலமாக அதிமுக தலைவர்கள் செயல்பாடுகளை பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்வது அதிகரித்து விட்டது.
கொள்ளையடித்த பணம்
சமீபத்தில் பாஜகவில் இணைந்து முக்கிய பொறுப்புக்கு வந்த ஒரு இளம் தலைவர், பாஜக கூட்டத்தில், தமிழக மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் 2000 ரூபாயாக கொடுப்பதுதான் தமிழக அரசியல் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2500 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில் பாஜக தலைவரின் இந்த பேச்சு அதிமுகவை குறிப்பதாக இருப்பதாக செய்திகள் வேகமாக பரவின .
செம்மலை சீற்றம்
அதேநேரம் அவர் தரப்போ, ஓட்டுக்கு ரூ.2000 பணம் கொடுப்பதைத்தான் இப்படி பேசினார் என்று பிறகு விளக்கம் அளித்தது. ஆனால் அதிமுக சட்டசபை உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் செம்மலை, பாஜக இளம் தலைவரின் பேச்சைக் கண்டித்துள்ளார். ஏழைகள் பொங்கலை கொண்டாடுவதற்காக இந்த பணம் கொடுக்கப்படுகிறது. இதை ஓட்டுக்குக் கொடுத்ததாக அவர் கூறுவது அவரது அறியாமையை காட்டுகிறது என்று ஆவேசமாகி உள்ளார் செம்மலை.
ஜெருசலம் புனிதப் பயணத்திற்கு நிதியுதவி
இன்னொரு பக்கம் ஜெருசலம் செல்லக்கூடிய கிறிஸ்தவர்களுக்கான தமிழக அரசின் உதவித் தொகை 20 ஆயிரம் ரூபாயில் இருந்து 37 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பிற மதத்தினர் செல்லக்கூடிய புனிதப் பயணங்களுக்கு அரசு நிதியை வழங்க கூடாது என்பது பாஜக தலைவர்கள் பலரின் நிலைப்பாடாக இருக்கிறது. ஆனால் முதல்வர் இந்த விழாவில் பேசும்போது கூட்டணி வேறு, கொள்கை வேறு என்று குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணி வேறு
கூட்டணியில் பாஜக இருந்தாலும் சிறுபான்மையினருக்கான உதவிகளை அதிமுக தொடர்ந்து செய்யும் என்று மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் எடப்பாடியார். இதுவும் பாஜக தலைவர்கள் சிலர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் வேட்பாளர்
இன்னொரு பக்கம் பாஜக தலைவர் முருகன், பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை தங்கள் கட்சி தலைமை முடிவு செய்யும் என்கிறார். ஆனால் அதிமுக அமைச்சர் செல்லூரா ராஜுவோ, எடப்பாடியார்தான் முதல்வர் வேட்பாளர்.. பிடித்தவர்கள்தான் இந்த கூட்டணியில் இருக்க முடியும் என நறுக்கென்று சொல்லியுள்ளார்.
ரஜினிகாந்த் கூட்டணி
இது போன்ற சர்ச்சை பேச்சுகள் அனைத்தும் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்த பிறகு வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எனவே பாஜக மற்றும் ரஜினிகாந்த் கட்சி கூட்டணி அமைக்குமா என்ற கேள்விகளை பல அரசியல் பார்வையாளர்கள் எழுப்புகிறார்கள்.
பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மையினரின் ஓட்டு கிடைக்காது என்ற அச்சம் ரஜினிகாந்த்திற்கு இருக்கும் என்பதால் அதற்கு வாய்ப்பில்லை என்று சில அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். எது எப்படியோ வரும் நாட்களில் இதற்கு பதில் தெரியும்.