டெல்டா பெல்ட்டில் களம்காணும் பாஜக, பாமக.. சவால் அளிப்பார்களா? சறுக்குவார்களா? - ஓர் அலசல்
சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக மற்றும் பாமக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் டெல்டா பகுதியில் இவ்விரு கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
தமிழகத்தில் கோடை தொடங்கியதற்கான அறிகுறியாக வெப்பம் அனல் கக்குவதை நாம் உணரும் இந்த சூழலில், தமிழக சட்டமன்ற தேர்தலின் வெப்பமும் தனது டெம்பரேச்சரை கூட்டியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, பாமக ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ள தொகுதிகள் பட்டியலை அதிமுக வெளியிட்டிருக்கும் நிலையில், டெல்டா பகுதியில் இவ்விரு கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்தும், அவர்களின் வெற்றி வாய்ப்பு குறித்தும் இங்கே பார்க்கலாம்.
திமுக, அதிமுக கோட்டை
பாஜகவை பொறுத்தவரை டெல்டா பகுதியில் திருவையாறு தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. திருவையாறு சந்தேகமே இல்லாமல் திமுக, அதிமுக என இரு கட்சிகளின் கோட்டையாக விளங்குகிறது. இவ்விரு கட்சிகளும் மாறி மாறி இங்கு வெற்றி, தோல்வியை சந்தித்து வருகின்றன. 1971 முதல் எடுத்துக் கொண்டால், 6 முறை திமுகவும், 6 முறை அதிமுகவும் வென்றுள்ளன. கள்ளர்கள் இன்று சற்று அதிகமாக உள்ளனர். அதேசமயம், முத்தரையர், மூப்பனார், தலித், வன்னியர், பிராமணர், உடையார், பார்கவகுலத்தினரும் இங்கு உள்ளனர். பிராமணர்களும் இங்கு பரவலாக இருப்பதால் தான் பாஜக இங்கு களம் காண்பதில் முனைப்போடு இருந்தது.
தோற்ற நடிகர் திலகம்
கடைசியாக 2016ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவின் துரை சந்திரசேகரன் இங்கு போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். 1989, 1996, 2006, 2016 என்று நான்கு முறை இங்கு எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார் இவர். அதுமட்டுமின்றி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தோற்கடித்த வேட்பாளர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. ஆம்! 1989ம் ஆண்டு 'தமிழக முன்னேற்ற கழகம்' என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து இத்தொகுதியில் சிவாஜி கணேசன் களம் கண்ட போது, அதிகம் பரிச்சயம் இல்லாத இளைஞராக திமுக சார்பில் போட்டியிட்டு வென்று, சிவாஜிக்கே ஷாக் ரியாக்ஷன் கொடுத்தவர் துரை.சந்திரசேகர். இப்போது இவர் தான் சிட்டிங் எம்.எல்.ஏ.
பூண்டி வெங்கடேசன்
இந்த தேர்தலிலும், சீனியரான சந்திரசேகருக்கே மீண்டும் சீட் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை கிடைக்காவிட்டாலும் கூட, அதிமுகவுக்கு என்று தனி செல்வாக்கு இருக்கும் இத்தொகுதி பாஜகவுக்கு கிடைத்துள்ளது. ஆனால், திமுக வேட்பாளரை எதிர்த்து, பாஜகவால் இங்கு வெற்றிப் பெற முடியுமா என்பது கேள்விக்குறியே. பாஜக, இங்கு பூண்டி வெங்கடேசனை களமிறக்கும் திட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வன்னியர்கள் கோட்டை
அதேபோல், பாமகவை பொறுத்தவரை ஜெயங்கொண்டம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா பகுதிகளில் போட்டியிடுகின்றன. வன்னியர்களும் தலித்துகளும் சமஅளவில் உள்ள தொகுதி ஜெயங்கொண்டம். தவிர, முதலியார் சமூகத்தினரும் கணிசமாக உள்ளனர். வன்னிய மக்களின் கோட்டை என்று கூட கூறலாம். இதனால் வன்னியப் பின்புலம் பலமாக உள்ள கட்சிகளுக்கே தேர்தல்களில் சீட் ஒதுக்கப்படும். பா.ம.கவுக்கும் அ.தி.மு.கவுக்கு குறிப்பிடத்தகுந்த அளவில் இங்கு ஓட்டு வங்கி உள்ளது. ஆகையால், இம்முறை பாமகவுக்கு இங்கு சீட் ஒதுக்கியத்தில் எந்த ஆச்சர்யமும் இல்லை. கடந்த 2011ம் தேர்தலில் ,பாமகவின் மறைந்த காடுவெட்டி குரு இங்கு போட்டியிட்டு வென்றார். ஆனால், 2016 தேர்தலில் அதே பாமக வேட்பாளர் குருவை அ.தி.மு.க. வேட்பாளர் ராம ஜெயலிங்கம் தோற்கடித்தார். எனினும், ஜெயங்கொண்டம் தொகுதியில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது வன்னியர்கள் தான்.
முதன் முறை வெல்லுமா?
அதேபோல், மயிலாடுதுறை தொகுதியிலும் பாமக களம் காண்கிறது. இது உண்மையில் சற்று வித்தியாசமான தொகுதி தான். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், தேமுதிக என்று பரவலாக அனைத்து கட்சிகளும் இன்று வெற்றிப் பெற்றிருக்கின்றன. 2011ல் தேமுதிக இங்கு வென்றது. தற்போது சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இங்கு இருப்பது அதிமுகவின் ராதாகிருஷ்ணன். இந்த தொகுதியில் வன்னியர்கள், ஆதி திராவிடர்கள், பிள்ளைமார், நாயுடு, செட்டியார், முஸ்லிம்கள் என பல்வேறு இனத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். அதனால், அனைத்து கட்சிகளும் அப்படி இப்படி என பரவலாக வென்றுள்ளன. ஆயினும், பாமக இங்கு ஒருமுறை கூட வென்றதில்லை. எனினும், வன்னியர்கள் பரவலாக இருப்பதால் பாமக இம்முறை சவால் அளிக்க வாய்ப்புள்ளது.