அலைய விட்டாங்கல்ல.. பேசாமலேயே இருப்போம்ணே! ஓடி வந்த ஓபிஎஸ்! அமைதி காக்கும் எடப்பாடி! கடுப்பான பாஜக?
சென்னை : மெகா கூட்டணி, ஆளுநர் ரவி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளில் எடப்பாடி பழனிச்சாமி பாஜக தரப்புக்கு ஆதரவு அளிக்காமல் ஒதுங்கியே இருக்கும் நிலையில் அவர் மீது பாஜக தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதே நேரத்தில் ஆளுநருக்கு ஓ பன்னீர்செல்வம் முதல் ஆளாக வந்து ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பால் விலை உயர்வு, கோவை குண்டுவெடிப்பு, நீட் தேர்வு விவகாரம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் தமிழகத்தில் இருந்தாலும் ஆளுங்கட்சியான திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் ஆளுநர் ரவி தொடர்பான விவகாரங்களை தூங்கவிடாமல் செய்கிறது.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதிலிருந்து திமுகவுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் ஏழாம் பொருத்தம் தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆளுநர் மதிக்காமல் செயல்படுவதாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன.

ஆளுநர் ஆர்.என்.ரவி
நீட்டு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தியது, இன்னும் பல மசோதாக்களை ஆளுநர் மாளிகையில் தூங்க வைத்தது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை திமுக முன்வைத்து வருகிறது, மேலும் பல்கலைக்கழக வேந்தர் என்ற அடிப்படையில் பல்கலைக்கழக நிகழ்வுகள், பட்டமளிப்பு விழாக்கள், புத்தக வெளியீட்டு விழா என எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் சனாதனம் இந்து மதம் குறித்து பேசுவது என அதிரடி காட்டி வருகிறார் ஆளுநர். இதனால் ஆளும் திமுக தரப்பு மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்வினை ஆட்சி வருகின்றன.

அமைதி காக்கும் இபிஎஸ்
ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்படும் நிலையில் இது தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்தித்தும் பேச இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனை திமுக எம்பியுமான கனிமொழியும் உறுதிப்படுத்தி இருக்கிறார். அதே நேரத்தில் தமிழகத்தை பொறுத்தவரை பாஜக ஆளுநருக்கு தீவிர ஆதரவளித்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாக ஆதரவு அளிக்கும் கட்சியாக அதிமுக இருக்கும் என பாஜக தலைவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இதுவரை அதிமுகவை தற்போது தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

ஆதரவளித்த ஓபிஎஸ்
ஒருபுறம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான் எனக் கூறிவரும் ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாக தனது ஆதரவினை ஆளுநருக்கு தெரிவித்தார். குறிப்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆளுநரை திரும்ப பெற கூறும் அதிகாரம் யாருக்கும் இல்லை என வெளிப்படையாகவே பேசினார். இதனால் பாஜக தரப்பு பன்னீர்செல்வத்தின் மீதான பார்வையை மாற்றிக் கொண்டுள்ளது. கடந்த காலங்களில் ஓபிஎஸ்-க்கு ஆதரவளித்தாலும் முழு ஆதரவை பாஜக வழங்கவில்லை. இனி அது பற்றி பரிசீலிக்கலாம் என கருதுகிறது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசாமல் இருப்பது பாஜக தலைவர்களை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது.

பாஜக அதிருப்தி
எடப்பாடி பழனிச்சாமி திமுகவுக்கு எதிராக பேசுவதும் ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சிப்பதிலுமே அரசியல் செய்து வருகிறார். அதே நேரத்தில் ஆளுநர் தொடர்பாக எந்த விவகாரத்திலும் அவர் தலையிடுவதில்லை. டெல்லி சென்றபோது பிரதமர் சந்திக்க மறுத்தது, தேர்தல் ஆணையத்தில் இன்னும் ஓ பன்னீர் செல்வமே ஒருங்கிணைப்பாளராக தொடர்வது என பல விவகாரங்களில் பாஜக தனக்கு ஆதரவளிக்கவில்லை என்ற அதிருப்தியின் காரணமாக அவர் ஆளுநர் குறித்த விவகாரங்களில் அமைதி காப்பதாக கூறுகின்றனர் சேலம் தரப்பு நிர்வாகிகள்.

நெருக்கடி?
இதேபோல் மெகா கூட்டணியில் அதிமுக தான் தலைமை வகிக்கும் என கூறினார், இதை அண்ணாமலை ஏற்றுக் கொண்டாலும் பாஜக நிர்வாகிகள் சற்றே மன வருத்தத்தில் தான் இருக்கின்றனர். இந்தியா முழுவதும் மிகப் பெரிய கட்சியாக இருக்கும் பாஜக தமிழகத்தில் அதிமுகவை நம்பி இருக்க வேண்டிய நிலையில் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கும்போதே எடப்பாடி ஆணவமாக பேசியதாக சமூக வலைதளங்களில் பாஜகவினர் கொந்தளித்து வருகின்றனர். இதனால் வரும் காலங்களில் எடப்பாடிக்கு நெருக்கடி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications