கருணாநிதியின் மகன் பாஜகவில் சேருவாரா.. அழகிரியை விரட்டும் தலைவர்கள்.. அடுத்து என்ன நடக்கும்?
முக அழகிரிக்கு எல் முருகன் அழைப்பு விடுத்துள்ளார்
சென்னை: முக அழகிரிக்கு எல்.முருகன் விடுத்துள்ள அழைப்புதான் இன்றைய தமிழக அரசியல் உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது!
Recommended Video
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, முக அழகிரி அரசியல் கட்சியைத் தொடங்கி பாஜகவுக்கு போகிறார், ரஜினி கட்சிக்குப் போகிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.. ஆனால் நான் கருணாநிதியின் மகன், பாஜகவுக்கு எல்லாம் செல்ல முடியாது என அழகிரி திட்டவட்டமாக கூறியதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், அழகிரி ஒரு தனிக்கட்சி தொடங்க போவதாக தகவல் கசிந்து வருகிறது.. அதேசமயம், அமித்ஷாவின் தமிழகம் வருகையின்போது, அழகிரியை அவர் சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.. இந்த இரண்டு செய்திகளுமே ஒரே நேரத்தில் வெளியாகி தமிழகத்தை மிகுந்த பரபரப்பில் வைத்து வருகின்றன.
எல்.முருகன்
இந்த பரபரப்புக்கு இடையேதான், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், செய்தியாளர்களிடம் பேசும்போது, "முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி, அமித்ஷாவை சந்திப்பாரா என்பது குறித்து எனக்கு தெரியாது... அதே போல் அவர் பாஜகவில் இணைவது குறித்தும் என்னுடன் யாரும் பேசவில்லை.. ஒருவேளை அழகிரி பாஜகவில் இணைந்தால் வரவேற்போம்" என்று கூறியுள்ளார்.
குஷ்பு
குஷ்பு வந்தால் வரவேற்போம் என்று இப்படித்தான் எல்.முருகன் அன்று சொன்னார்.. கடைசியில் குஷ்பு அந்த கட்சியில் சேர்ந்தே விட்டார்.. இப்போது முருகன், அழகிரிக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளதும் அப்படித்தான் வருங்காலத்தில் நிகழுமோ என்ற சந்தேகத்தையும் கிளப்பபி வருகிறது.. இந்நிலையில், முருகன் சொன்ன ரகருத்து குறித்து ஒருசில நடுநிலைவாதிகளிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது:
பாஜக
"ஒரு கட்சியை சேர்ந்தோர், இன்னொரு கட்சியில் அதிருப்தியாளர்களை தங்கள் கட்சிக்கு அழைப்பது என்பது பொதுவான விஷயம்தான்.. இதில் எந்த தவறும் இல்லை.. அந்த வகையில் முருகன் அழைப்பு விடுத்திருக்கலாம்.. அதேசமயம், அழகிரியை பாஜக பக்கம் இழுப்பதால் மட்டும், தாமரை மலர்ந்துவிட போவதில்லை.. அழகிரி பாஜகவில் இணைந்தாலோ, அல்லது வெளியில் இருந்து ஆதரவு தந்தாலோ, திமுகவின் ஓட்டுக்களை வேண்டுமானால் சிதறடிக்க முடியுமே தவிர, பாஜகவின் ஓட்டு வங்கி ஏறாது.
இந்தி திணிப்பு
அப்படி பாஜகவின் ஓட்டு வங்கி ஏற வேண்டுமானால், அதற்கு இப்படி விஐபிக்களை இழுப்பதால் மட்டும் கிடைத்துவிடாது.. மாறாக தமிழக மக்களுக்கு இப்போதைய தேவை, தங்கள் பொருளாதார வாழ்க்கை முன்னேற்றம்தான்.. அந்த வகையில், பாஜகவின் திட்டங்கள் மாநில வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு உதவ போகின்றன என்பதை வைத்துதான், அக்கட்சியின் மதிப்பீடு இருக்கும்.. எதற்காக நோட்டாவை பெற்றோம் என்று ஆராய்ந்தாலே போதும்.. மத்தபடி, இந்து மத வாக்குகளை குறி வைத்து யாத்திரையோ, அல்லது இந்தி, சமஸ்கிருத திணிப்போ எந்த வகையிலும் அக்கட்சிக்கு உதவாது.
தேசிய கட்சி
உயர்சாதியில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக இருப்பவர்களை மக்கள் ஏற்பது சந்தேகம்.. அதனால்,தமிழக மக்களுக்கு எது தேவையோ, அதை முன்னெடுத்து செல்வதுதான் ஒரு தேசிய கட்சியின் அழகு.. ஒரு கட்சியில் இவர் சேர்கிறார், அவர் சேர்கிறார் என்று சொல்வதெல்லாம், அந்த கட்சியின் பலத்தை கூட்டாது..
அழகிரி முடிவு
முதலில் அழகிரி பாஜக பக்கம் வருவது சந்தேகம்தான்..வருவதானால் அவர் எப்போதோ வந்திருப்பார்.. பாஜக குறித்த மக்களின் அதிருப்தி அவருக்கு தெரியாமல் இல்லை.. அப்படியே வந்தாலும், அவரது ஆதரவாளர்கள் அழகிரியை நம்பி வருவது சந்தேகம்.. எந்த காரணத்தை கொண்டு, தன் ஆதரவாளர்களை அழகிரி விட்டுத்தரவே மாட்டார்.. அதனால், முருகன் அவரை அழைத்தது ஒரு அரசியல் நாகரீக வெளிப்பாடாக இருக்கலாம்.. அது அவர் இஷ்டம்.. மத்தபடி எல்லாமே அழகிரி முடிவுதான்!" என்றனர்.