பிரதமர் மோடி 'படிக்காத மேதை'.. திரும்ப கிளறி விட்டுட்டாரே அண்ணாமலை.. அந்த டிகிரி எல்லாம் பொய்யா!?
சென்னை : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக பொதுக்கூட்டத்தில் பேசும்போது பிரதமர் நரேந்திர மோடி படிக்காதவர் தான் எனப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியின் கல்வித்தகுதி குறித்து அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்து வந்திருக்கின்றன. நரேந்திர மோடி எம்.ஏ படித்திருப்பதாக 2014ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும்போது தனது வேட்புமனுவில் தெரிவித்திருந்தார்.
ஆனால், இதில் சந்தேகங்கள் கிளப்பப்பட்ட நிலையில், பாஜகவின் முக்கிய தலைவர்களே மோடியின் கல்விச் சான்றிதழ் ஒன்றை வெளியிட்டனர். ஆனாலும், இதுதொடர்பான சர்ச்சை இன்னும் நீடித்து வருகிறது.
மலைடா அண்ணாமலை! படத்துக்கு மட்டும் 30 வயசு இல்லைங்க! 'இந்த’ விஷயத்துக்கும் தான்! இத நோட் பண்ணலையே!
பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டபோது தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது கல்வித்தகுதி பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் குஜராத்தில் பள்ளி இறுதி வகுப்பு முடித்ததாகவும், டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏமுடித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். எம்.ஏ படிப்பை அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் படித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கெஜ்ரிவால் எழுப்பிய விவகாரம்
இந்நிலையில்,பிரதமர் நரந்திர மோடி பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு எதுவும் படிக்கவில்லை. ஆனால் படித்ததாக தேர்தல் அபிடவிட்டில் குறிப்பிட்டிருக்கிறார். உண்மையான தகவல்களை வெளியிடவேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்திருந்தார். இதனால் இந்த விவகாரம் சூடுபிடித்தது. நரேந்திர மோடியின் சான்றிதழ் நகல் உள்ளிட்ட ஆவணங்கள் தரும்படி டெல்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதினார். ஆனால், டெல்லி பல்கலைக்கழகம் இதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டது.
அமித்ஷா வெளியிட்ட சான்றிதழ்
இந்த சர்ச்சை ஓயாத நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு மோடியின் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பா.ஜ.க மூத்த தலைவர்கள் வெளியிட்டனர். செய்தியாளர்களை சந்தித்து பாஜக அமித்ஷா, அருண் ஜெட்லி ஆகியோர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் நகலை வெளியிட்டனர். ஆனால், அந்த சான்றிதழில் மோடி படித்த பாடம் அந்த காலகட்டத்தில் இல்லவே இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால், இந்தச் சர்ச்சை தீராத விவாதமாகவே இன்று வரை இருந்து வருகிறது.
அண்ணாமலை
இந்நிலையில்தான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய பேச்சு மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித்தகுதி பற்றிய சர்ச்சைகளை கிளப்பி விட்டுள்ளது. பிரதமர் மோடி படிக்காதவர் தான் என அண்ணாமலை கூறியிருப்பதன் மூலம், அண்ணாமலை உண்மையை ஒப்புக்கொண்டுவிட்டார், இனியும் பாஜகவினர் பொய் சொல்லக் கூடாது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ப.சிதம்பரம் சொன்னார்
சென்னையில் நடைபெற்ற பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை கொண்டு வந்த போது ப.சிதம்பரம் அவர்கள் நாடாளுமன்றத்தில் சொன்னார், படிக்காதவர்கள் தான் இந்தியாவில் அதிகமாக இருக்கிறார்கள். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை கொண்டு வந்தால் அவர்களுக்கு எல்லாம் தெரியாது, படிக்காதவர்களால் பயன்படுத்த முடியாது எனப் பேசினார்.
மோடி படிக்காதவர் தான்
இங்கு கர்மவீரர் காமராஜர் படிக்காதவர் தான், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி படிக்காதவர் தான். ஆனால் இன்று அந்த படிக்காத மேதை நரேந்திர மோடி டெல்லியில் இருந்து செய்து இருக்கக்கூடிய சாதனையை பாருங்கள். போன மே மாதத்தில் மட்டும், இந்தியாவில் பேடிஎம், கூகுள் பே போன்றவற்றைப் பயன்படுத்தி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலமாக 612 கோடி பரிமாற்றங்கள் நடந்துள்ளன. இந்தியாவின் மக்கள் தொகை 135 கோடி, ஒரே மாதத்தில் 612 கோடி பணப் பரிவர்த்தனை செய்து இருக்கிறோம். நாம் பரிவர்த்தனை செய்த பணம் 10,41,521 கோடி. யோசித்துப் பாருங்கள்" எனப் பேசி இருக்கிறார்.
தீயாகப் பரவும் வீடியோ
இந்தப் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "பாரதப் பிரதமர் நரேந்திர மோடி படிக்காதவர் தான். ஆனால் இன்று அந்த படிக்காத மேதை நரேந்திர மோடி டெல்லியில் இருந்து செய்து இருக்கக்கூடிய சாதனையை பாருங்கள்." எனப் பேசிய காட்சியை தனியாக வெட்டி எடுத்து சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.