கருணாநிதி இருந்தவரை நம்பர் ஒன்.. அப்புறம் கால் தூசு.. என்ன பாவம் பண்ணேன்? - வெடித்த வி.பி.துரைசாமி!
சென்னை : கருணாநிதி மறைவுக்குப் பிறகு, திமுக தன்னை கால் தூசிக்கு தள்ளிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார் பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி.
தி.மு.கவில் சமூக நீதி என்பது பேச்சில் மட்டுமே உள்ளது என்றும் பட்டியலின மற்றும் ஆதிதிராவிடர்களுக்கு என திமுகவில் சில துறைகளை மட்டுமே வழங்க வேண்டும் என பட்டியலிட்டு வைத்துள்ளனர் என்றும் விபி துரைசாமி விமர்சித்துள்ளார்.
மேலும், பட்டியலினத்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் அண்ணாமலையை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனப் பேசியுள்ளார் வி.பி.துரைசாமி.
ப.சிதம்பரம் அறிவாளி.. ஆனா கொஞ்ச நாளா ஒரு மாதிரி.. அக்னிபாத் விஷயத்தால் பொங்கிய வி.பி.துரைசாமி!
இரட்டைமலை சீனிவாசன்
இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி, சென்னை கிண்டியில் காந்தி மண்டப வளாகத்தில் உள்ள இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் வி.பி.துரைசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி, பாஜக பட்டியலின அணி சார்பாக கருத்தரங்கு நடைபெற்றது.
அண்ணாமலையை பற்றிக் கொள்ளுங்கள்
இந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, இந்தியாவிற்கு மோடி கிடைத்துள்ளது போல் தமிழகத்திற்கு பொக்கிஷமாக அண்ணாமலை கிடைத்துள்ளார். நமது சமூதாய மக்களை தூக்கிப் பிடிக்கும் அண்ணாமலையை நாம் தூக்கிப் பிடிக்க வேண்டும். தமிழகத்தில் அண்ணாமலைக்கு நிகரான அரசியல் தலைவர் யாரும் இல்லை. அவருக்கு இணையான இளம் வயது அரசியல்வாதிகளே இங்கு இல்லை. பிற்படுத்தப்பட்ட மக்களை முன்னேற்ற பாடுபடும் அண்ணாமலையை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள் எனப் பேசினார்.
பேச்சில் மட்டும் தான்
மேலும் பேசிய வி.பி.துரைசாமி, தி.மு.கவில் சமூக நீதி என்பது பேச்சில் மட்டுமே உள்ளது. பட்டியலின மற்றும் ஆதிதிராவிடர்களுக்கு என திமுகவில் பால்வளத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை என சில துறைகளை மட்டுமே வழங்க வேண்டும் என பட்டியலிட்டு வைத்துள்ளனர். மருத்துவருக்கு சுற்றுலா துறையும், ஓட்டப்பந்தய வீரருக்கு சுகாதாரத்துறையையும் வழங்கியுள்ளனர் என கிண்டல் செய்தார்.
என்ன பாவம் செய்தேன்?
தொடர்ந்து பேசிய அவர், பிற மாநிலங்களை விட தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, பட்டியலின மக்கள் மிகுந்த கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். என் தந்தையும் தாயும் கூடியதால் நான் இந்த சமுதாயத்தில் பிறந்தேன் என்பதை தவிர நான் வேறு என்ன பாவம் செய்தேன்? எனக்கு அறிவு இல்லை, தகுதியில்லை என்று கூறுகிறார்கள். பட்டியலின சமூதாயத்தில் பிறந்து விட்டதால் எனக்கு அறிவில்லை என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? என்ன பாவம் செய்துவிட்டேன் நான்?
கருணாநிதி இருந்த வரை
திமுகவில் நான் நிறைய பார்த்துள்ளேன். கருணாநிதி உயிருடன் இருந்த வரை அங்கு துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி என நம்பர் ஒன் இடத்தில் இருந்தேன். அந்த மகராசன் போன பிறகு மரியாதை போய்விட்டது. அவர் மறைவுக்குப் பின் கால் தூசுக்கு என்னை தள்ளிவிட்டனர். இதற்காக நான் உச்சநீதிமன்றத்திலா வழக்கு தொடர முடியும்?" எனப் பேசினார்.