அருவருப்பா பேசுனா அனுமதி.. ஒழுக்கத்தை போதிக்கும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி இல்லையா? பொங்கிய பாஜக!
சென்னை : அருவருப்பாக பேசுவோர் கூட்டம் நடத்த அனுமதிக்கும் காவல்துறை, ஒழுக்கம், கட்டுப்பாட்டை போதிக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணியை அனுமதிக்க மறுப்பது ஏன்? என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
நிபந்தனைகள் காரணமாக இன்று நடக்க இருந்த அணிவகுப்பு ஊர்வலத்தை ஒத்தி வைப்பதாக ஆர்.எஸ்.எஸ் அறிவித்த நிலையில், நாராயணன் திருப்பதி, தமிழக போலீசாருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் சார்பில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி டி.ஜி.பி உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

உள்ளரங்கத்தில்
ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். நவம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்படும் என்று கூறியிருந்தனர். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில், தற்போதைய சூழல் காரணமாக உள்ளரங்கு கூட்டமாக நடத்திக் கொள்வதாக இருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்க தயாராக உள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூரில் பல்லடம், கன்னியாகுமரியில் அருமனை, நாகர்கோவிலில் நாங்குநேரி ஆகியவற்றை தவிர மற்ற இடங்களில் அனுமதி வழங்கலாம். இந்த 6 இடங்கள் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய 3 இடங்கள் உள்ளிட்ட 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்தலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

6 இடங்களுக்கு அனுமதி மறுப்பு
உள்ளரங்கு கூட்டமாக பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் அரங்குகளாக இல்லாமல் விளையாட்டு திடல்களை தேர்ந்தெடுக்கலாம் என்றும், 6 இடங்களில் மட்டும் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்.எஸ்.எஸ் காத்திருக்க வேண்டும் என்றும், இந்த 6 இடங்களில் 2 மாதங்களுக்கு பிறகு புதிய மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, மைதானம் அல்லது அரங்கத்திற்குள் மட்டுமே பொதுக்கூட்டம் மற்றும் அணிவகுப்பு நடத்த வேண்டும் என்ற நிபந்தனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதால் நாளை நவம்பர் 6ஆம் தேதி நடக்க இருந்த பேரணியை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு.

கை கட்டி வாய் பொத்தி
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கும் காவல்துறையை விமர்சித்து சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், "பொது வெளியில் பெண்களை அருவருப்பாக ஆபாசமாக பேசும் திமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதியளிக்கும் காவல்துறை, பொது வெளியில் ஒரு சமுதாயத்தின் அடையாளத்தை அறுத்தெறிவேன் என்று கேவலமாக பேசும் சுப.வீரபாண்டியனின் அவதூறு பேச்சை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் காவல்துறை, பொது வெளியில் இந்து பெண்களை மானபங்கப்படுத்தும் வகையில் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது கை கட்டி வாய் பொத்தி மௌனம் காக்கும் தமிழக காவல்துறை, தேச பக்தி, தெய்வ பக்தி, ஒழுக்கம், கட்டுப்பாட்டை போதிக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணியை அனுமதிக்க மறுப்பது ஏன்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக கூட்டம் சம்பவம்
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவைச் சேர்ந்த நடிகைகள் குஷ்பூ, காயத்ரி ரகுராம், நமீதா, கௌதமி ஆகியோர் பற்றி பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கடும் கண்டனங்கள் எழுந்தன. சைதை சாதிக் பேச்சின் மீது நடவடிக்கை எடுக்காத அரசைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டமும் நடத்தியது. அதன்பிறகு சைதை சாதிக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்ட்டுள்ள நாராயணன் திருப்பதி, ஒழுக்கம், கட்டுப்பாட்டை போதிக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணியை அனுமதிக்க மறுப்பது ஏன் என்று காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications