காறி துப்பினாலும் துடைத்துக் கொண்டு ‘சிறுமதியாளன்’.. நாஞ்சில் சம்பத்தை அட்டாக் செய்த பாஜக நாராயணன்!
சென்னை : நான் இருக்கிற இடத்திற்கு தான் இதுவரை வெற்றி வந்து சேர்ந்திருக்கிறது என நாஞ்சில் சம்பத் பேசியதை பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதிமுகவில் இருந்து அதிமுக சென்று, தற்போது திமுக மேடைகளில் பேசி வரும் நாஞ்சில் சம்பத், பாஜகவை கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார். இந்நிலையில், திரைப்பட விழா ஒன்றில் பேசும்போது நான் இருக்கிற இடத்திற்கு தான் இதுவரை வெற்றி வந்து சேர்ந்திருக்கிறது என நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
அப்படி பேசியதற்காகத்தான் பாய்ந்து தாக்கியிருக்கிறார் பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி. காறி துப்பினாலும் துடைத்துக் கொண்டு இன்னோவா காரை அடைவது தான் வெற்றி என்று அலையும் சிறு மதியாளனின் வெட்டிப் பேச்சு என்று அவர் விமர்சித்துள்ளார்.

நான் இருக்கும் இடத்தில் தான் வெற்றி
சமீபத்தில் நடைபெற்ற 'பரோல்' திரைப்பட விழாவில் பேசிய நாஞ்சில் சம்பத், தமிழ்நாட்டில் அரசியலை கட்சி என்கிற எல்லை கடந்து நீங்கள் ஒரு வெள்ளோட்டம் போட்டு பார்த்தால், ஒரு பருந்து பார்வையில் பார்த்தால் நான் இருக்கிற இடத்திற்குத் தான் இதுவரைக்கும் வெற்றி வந்து சேர்ந்திருக்கிறது. அந்த வகையில் பரோலில் நானும் இருக்கிறேன். ஆகவே இந்த படத்திற்கு வெற்றி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்" எனப் பேசினார்.

சிறுமதியாளனின் வெட்டிப் பேச்சு
இந்நிலையில், நாஞ்சில் சம்பத்தின் பேச்சைக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவு செய்துள்ள பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "காறித் துப்பினாலும் துடைத்துக் கொண்டு இன்னோவா காரை அடைவது தான் வெற்றி என்று அலையும் சிறு மதியாளனின் வெட்டிப் பேச்சு" என்று கடுமையான சொற்களால் விமர்சித்துள்ளார்.

நாஞ்சில் சம்பத்
மதிமுகவில் பொதுச் செயலாளர் வைகோவுக்கு இணையாக மேடைகளில் தீப்பொறி பறக்கப் பேசிய நாஞ்சில் சம்பத், திடீரென்று அதிமுகவுக்கு கட்சி மாறி ஜெயலலிதாவிடம் இன்னோவா காரை பரிசாக பெற்றார். இதனால் அவர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். நாஞ்சில் சம்பத் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் அப்போது பேசிய நாஞ்சில் சம்பத்,

துப்பினால் துடைத்துக் கொள்வேன்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தினகரன் ஆதரவாளராக மாறிய நாஞ்சில் சம்பத், தினகரனை பாராட்டுவதற்காக என்னை மக்கள் காறித் துப்பினாலும் துடைத்துக் கொள்வேன் எனக் கூறினார். ஒருவேளை நீங்கள் ஓபிஎஸ் அணியில் இருக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள் என நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர் "தற்கொலை செய்து கொள்வேன்" எனக் கூறி மிரள வைத்தார்.

அதே வார்த்தை
அப்போது நாஞ்சில் சம்பத் பேசிய "துப்புனா துடைச்சுக்குவேன்" என்ற சொற்றொடர் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது. தற்போது நாஞ்சில் சம்பத் திமுக மேடைகளில் பங்கேற்று, பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் தான் நாஞ்சில் சம்பத் சொன்ன வார்த்தையை வைத்தே அவரை கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜகவின் நாராயணன் திருப்பதி.












Click it and Unblock the Notifications