ஒரே நாடு ஒரே தேர்தல்! பல்ப் வாங்கிய ஓபிஎஸ்! எடப்பாடிக்கு டபுள் ட்ரிட்! திமுகவை மிரட்டுகிறதா பாஜக?
சென்னை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் வெற்றி மேல் வெற்றியாக எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமான சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் என்று அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்கி இருப்பதால் அந்த அணியினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள். மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் திமுகவுக்கும் மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர் அதிமுக மூத்த நிர்வாகிகள்.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தங்கள் தான் தலைமை என எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் கட்சியின் தலைமை பதவியை கைப்பற்ற முட்டி மோதி வருகின்றனர்.
ஏற்கனவே அதிமுக ஒற்றை தலைமை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் முதலில் தொடரப்பட்ட வழக்கில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அதன் பின்னர் இரு நீதிபதிகள் அமர்வு எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.

அதிமுக குழப்பம்
இப்படி மாறி மாறி வந்த தீர்ப்புகளால் நிர்வாகிகள் மட்டுமல்லாது தொண்டர்களை கடும் மனக்குழப்பத்தில் இருக்கின்றனர். யார் பக்கம் செல்வது அடுத்து யார் தலைமையாக வருவார்கள் என்பது குறித்து தீவிரமாக சிந்தித்து வருகின்றனர். அதிமுக தொண்டர்களை விட பாஜக தான் இந்த விவகாரத்தில் மிகவும் கவனத்துடன் எதிர்நோக்கி வருகிறது. காரணம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பலமாக கால் பதிக்க வேண்டும் என்பது அந்தக் கட்சியின் எண்ணமாக இருக்கிறது. தற்போதைய சூழலில் அதிமுக 4 அணிகளாக சிதறுண்டு இருக்கும் நிலையில் அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என அந்த கட்சி விரும்பியது.

எடப்பாடி பழனிச்சாமி
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் மூவரும் கட்சிக்குள் வந்தால் தன்னை ஓரங்கட்டி விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி அதற்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இந்த நிலையில் பாஜகவின் புற அழுத்தம் காரணமாக அக்கட்சியை கூட்டணியில் இருந்து கழட்டி விட தயாரானார் எடப்பாடி. இது தொடர்பாக அவர் தரப்பு முன்னால் அமைச்சர்கள் தீவிரமாக பேசி வந்த நிலையில் தற்போது அது குறைந்துள்ளது. காரணம் தற்போது அதிமுகவும் இரட்டை இலையும் எடப்பாடியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ஓபிஎஸ்ஐ கைவிட்டு எடப்பாடி கூட்டு சேர பாஜக தலைமை தயாராகி வருகிறது.

புத்தாண்டு பரிசாக
இதனால் எடப்பாடியும் பாஜகவை விமர்சிக்க வேண்டாம் என கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தினார். இதனால் பாஜக தரப்பு உற்சாகமடைந்துள்ளது. இந்த நிலையில் புத்தாண்டு பரிசாக எடப்பாடி பழனிச்சாமிக்கு டெல்லியில் இருந்து முக்கிய அறிவிப்பு வந்திருக்கிறது. தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் முழக்கத்தை பாஜக கையில் எடுத்திருக்கும் நிலையில் அது தொடர்பாக இந்தியா முழுவதிலும் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்த மத்திய சட்ட அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு விடுக்கப்பட்டிருக்கும் அழைப்பு தான் தமிழக அரசியலில் பரபரப்பை கூட்டி இருக்கிறது.

அதிமுக பொதுச்செயலாளர்
வழக்கமாக கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரோடு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பது ஓ.பன்னீர்செல்வம் அணியினரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உற்சாகத்தில் மிதந்து வருகிறது. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் விவகாரமே உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் என எடப்பாடி மத்திய பாஜக அரசு அங்கீகரித்துள்ளதாக அவர்கள் தரப்பு கொண்டாடி வருகின்றனர்.

ஓபிஎஸ் அதிருப்தி
ஏற்கனவே ஜி-20 மாநாடு தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என எடப்பாடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவ்வாறு அழைக்கக்கூடாது என ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அதிமுக பொது செயலாளர் இன்று எடப்பாடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பது முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது. இதனால் பாஜக ஓ.பன்னீர்செல்வத்தை கைவிட்டு விட்டதாகவும் எடப்பாடியுடன் கூட்டு சேர தயாராகி வருகிறது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

திமுகவுக்கு மிரட்டல்?
அதே நேரத்தில் முக்கியமாக கவனிக்கத்தக்க விஷயமும் ஒன்று இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரும் என ஏற்கனவே பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கூறி வந்த நிலையில் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பது திமுகவுக்கு பாஜக விடும் மறைமுக மிரட்டல் எனவும், இதனை நிச்சயம் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்க்கும் என்றாலும் தற்போதைக்கு இதனை ஒரு மிரட்டல் ஆயுதமாக பயன்படுத்த பாஜக தலைமை திட்டமிட்டு இருக்கிறது என்கின்றனர் டில்லி அரசியலை உற்று நோக்கும் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications