கிறிஸ்துமஸ் கொண்டாட ரெடியான பாஜக! ‘பொங்கலோ பொங்கல்’ 1300 இடங்களில் பிளான்! டார்கெட்டை பிடிக்க வேகம்!
சென்னை : தமிழ்நாட்டைக் குறிவைத்து அதிரடி திட்டங்களை தீட்டி வருகிறது பாஜக. தமிழகம் முழுவதும் 1,300 மண்டலங்களில் பொங்கல் விழாவைக் கொண்டாட, தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது.
மேலும், வரும் 18ஆம் தேதி, சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள மைதானத்தில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளிலும் இறங்கியுள்ளது தமிழக பாஜக.
தமிழ்நாட்டில் தாமரையை மலர வைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே, பொங்கல் விழாவை முன்னெப்போதும் இல்லாத வகையில் கொண்டாட திட்டமிட்டுள்ளது பாஜக.

பாஜக தலைமை ஸ்கெட்ச்
தமிழ்நாட்டை குறி வைத்து பாஜக தலைமை தொடர்ச்சியாக பல்வேறு ஸ்கெட்ச்களை போட்டு வருகிறது. வரும் 2024ல் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களைப் பெறுவதோடு, 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், எதிர்க்கட்சியாக பாஜகவை கொண்டு வர வேண்டும் என்ற முடிவில் தான், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் தொடர்ந்து தமிழகத்துக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழ் மக்களை கவர
அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகை தருவதோடு, திருக்குறள், தமிழ் மொழியின் பெருமை எனப் பேசி அதிரடி காட்டி வருகிறார் பிரதமர் மோடி. மேலும், தமிழ் மக்களை ஈர்ப்பதற்காக 'காசி தமிழ் சங்கமம்' போன்ற நிகழ்வுகளையும் பாஜகவினர் நடத்தி வருகின்றனர். அதோடு மத்திய அமைச்சர்களை தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு அனுப்பி வருகிறது பாஜக தலைமை. தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்தெடுப்பதற்கான செயல் திட்டங்களையும் பாஜக தலைமை தீட்டி வருகிறது.

பாஜக ஆலோசனை
இந்நிலையில், பாஜக மாநில மையக் குழுக் கூட்டம் சென்னை கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி, மாநிலத் தலைவர் அண்ணாமலை, மேலிட இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தேர்தல் செயல் திட்டம்
இந்தக் கூட்டத்தில், மக்களவைத் தேர்தல், கிளை அளவில் பாஜகவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பூத் அளவில் இருந்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. டெல்லி தலைமை வகுத்துக் கொடுத்த செயல் திட்டங்களை நிறைவேற்றியது பற்றியும் விவாதித்துள்ளனர். மேலும், அடுத்தகட்டமாக மேற்கொள்ள இருக்கும் பணிகள் பற்றியும் விவாதித்துள்ளனர்.

1300 இடங்களில் பொங்கல் விழா
அந்தவகையில், இந்த ஆண்டு, தைப் பொங்கல் விழாவை சிறப்பான முறையில் கொண்டாட பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தைப்பொங்கல் விழாவை விவசாய அணி, மகளிர் அணியினர் மண்டல வாரியாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். அதன்படி தமிழகம் முழுவதும் 1,300 மண்டலங்களில் பொங்கல் விழா கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

கிறிஸ்துமஸ் விழா
இந்த பொங்கல் விழாக்களில் அந்தந்த பகுதியில் உள்ள சமுதாய பெரியோர்களை அழைத்து கௌரவப்படுத்துதல், இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்துதல், கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துதல் ஆகியவற்றுக்கு திட்டமிட்டுள்ளனர். மேலும், வரும் 18-ஆம் தேதி பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள மைதானத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

டார்கெட்
தமிழ்நாட்டில் தாமரையை மலர வைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே, தமிழ்நாட்டு மக்கள் பெருவாரியாக கொண்டாடும் பொங்கல் விழாவை மாநிலம் முழுவதும் கொண்டாட திட்டமிட்டுள்ளது பாஜக. அதேபோல, பாஜக, சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை அகற்றும் வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையும் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். கடந்த ஆண்டும், பாஜக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications