தமிழகத்தில் பாஜக ஆட்சி வரும்... சிவகார்த்திகேயன் பாஜகவில் இணையலாம் : காயத்ரி ரகுராம்
தமிழகத்தில் பாஜக தான் ஆட்சி அமைக்கும் என நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் பாஜக தான் ஆட்சி அமைக்கும் அது எப்படி என்று உங்களுக்கு விரைவில் தெரியவரும் என நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். மக்கள் ஆதரவு பாஜகவின் பக்கம் திரும்பும் என்று கூறியுள்ள காயத்ரி ரகுராம், நடிகர் சிவகார்த்திக்கேயன் பாஜகவில் இணையலாம் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக,அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகள் கூட்டணி குறித்து பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜகவும் பல சினிமா பிரபலங்களை தங்கள் பக்கம் இழுத்து வருகிறது. பதவிகளையும் கொடுத்து வருகிறது. தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் கட்சியினர் போட்டியிடுவார்கள் என்று பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.
எல்.முருகன் நம்பிக்கை
தமிழகத்தில் பாஜக காலூன்ற வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கையில்தான் எங்கள் கட்சியின் உறுப்பினர்கள் சட்டசபைக்குள் இருப்பார்கள் என்று நம்பிக்கையுடன் பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன் கூறியுள்ளார்.
தாமரை மலரும்
இந்த நிலையில் பாஜக கட்சி ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளார் தமிழக பாஜக கலை கலாசார பிரிவின் மாநில தலைவரும் நடிகையுமான காயத்ரி ரகுராம். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கண்டிப்பாக பாஜக ஆட்சி அமையும் இனி வரும் காலங்களில் தாமரை தான் ஆட்சியில் அமரும் என்றார்.
பாஜகவிற்கு மக்கள் ஆதரவு
தமிழ் கடவுளை பெரிய அளவில் இழிவுப்படுத்தி உள்ளனர், தமிழ் மக்கள் பொறுத்து கொள்ளாமல் அதற்கு பெரிய அளவில் எதிர்ப்பினை தெரிவித்து உள்ளனர் இது கண்டிப்பாக வருகின்ற தேர்தலில் எதிரொலிக்கும். பாஜகவின் பக்கம் மக்கள் நிற்பார்கள் என்று கூறினார். நடிகர் சிவகார்த்திக்கேயன் விருப்பம் இருந்தால் பாஜகவில் இணையலாம் என்றும் தெரிவித்தார்.
இளைஞர்கள் வளர வேண்டும்
இந்தி தெரியாது போடா என்ற வாசகம் டிரண்ட் ஆகி வருகிறதே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த காயத்ரி, இளைஞர்கள் வளரக்கூடாது என்று அப்படி செய்கின்றனர், பாஜகவை பொறுத்த வரை இளைஞர்கள் நன்கு வளர வேண்டும் என்பதே எங்கள் பிரதான நோக்கம். தமிழ் கடவுள் மொழி என்றால், இந்தி நட்பு மொழி,அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.