பெண்கள் மீது பாஜகவினருக்கு எந்த மரியாதையும் இல்லை.. “எல்லாம் அரசியல் தான்”.. டிஆர்பி ராஜா தாக்கு!
சென்னை : பாஜகவினரின் மிகவும் மலிவான செயல்கள் இந்த விஷயத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அரசியல் கண்ணியம் என்பது அவர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒன்று. சங்கிகளுக்கு பெண்கள் மீது எந்த மரியாதையும் இல்லை என திமுக ஐடி விங் செயலாளர் டிஆர்பி ராஜா எம்.எல்.ஏ விமர்சித்துள்ளார்.
பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் காயத்ரி ரகுராமை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தன்னை விமர்சிக்கும் முட்டாள்களுக்கு பதில் அளிக்கவோ, விளக்கம் அளிக்கவோ விரும்பவில்லை என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
15 நாட்களுக்கு முன்பே தெரியுமா? 'டபுள் ஸ்டாண்ட்’ மலை? காயத்ரிக்கு சஸ்பெண்ட்! சூர்யாவுக்கு சப்போர்ட்?
காயத்ரி புகார்
தமிழக பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்துவரும் நடிகை காயத்ரி ரகுராம், காசி தமிழ் சங்கமம் நிகழ்விற்கு தன்னை அழைக்கவில்லை என்றும், தன்னை சிலர் புறக்கணிக்க முயற்சிப்பதாகவும், பாஜகவில் ஒரு குழுவினர் தன்னை தனிப்பட்ட முறையில் குறிவைத்துத் தாக்கி வருவதாகவும் தெரிவித்து இருந்தார். நேற்று பாஜக நிர்வாகிகள் திருச்சி சிவா - டெய்சி சரண் ஆடியோ பற்றி கேள்வி எழுப்பி ட்விட்டரிலும் பதிவிட்டிருந்தார் காயத்ரி ரகுராம்.
அதிரடி ஆக்ஷன்
இதையடுத்து, பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். தன்னிடம் விளக்கம் கேட்காமலேயே பொய்யாக குற்றம்சாட்டி கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாகவும், டெல்லி மேலிடத்திடம் உரிய விளக்கம் அளிப்பேன் என்றும் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை ஆதரவாளர்கள்
இந்த நிலையில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பலரும் காயத்ரி ரகுராமை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜக விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, தனது ட்விட்டர் பதிவில், காய்த்ரி ரகுராம் பெயரை குறிப்பிடாமல், சபரீசனை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனியார் நட்சத்திர விடுதியில் சந்தித்து பேசியதாக குறிப்பிட்டுள்ளார். சுமார் 1 மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது, பாஜகவில் துரோகிகளுக்கு இடமில்லை, சரியான நேரத்தில் சரியான முடிவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எடுத்துள்ளார் எனத் தெரிவித்தார்.
இதே கமெண்ட் வருமா?
அதர்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்ட காயத்ரி ரகுராம், "முட்டாள்.. எனது தோழியின் பிறந்தநாளுக்கு சென்றிருந்தேன். அப்போது என்னை அழைத்தது போல் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். அப்போது அவரையும் அழைத்துள்ளனர். இது ஒரு எதிர்பாராத சந்திப்பு. வணக்கம் சொல்லும்போது திருப்பி வணக்கம் சொல்வது மரியாதை. முகத்தை திருப்பி கொண்டு நடக்க நான் ஒன்றும் சிறு பிள்ளை இல்லை, என்னிடம் வெறுப்புக்கு இடமில்லை, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினை அரசு விழாவில் சந்திப்பது பற்றி இப்படி கமெண்ட் அடிக்க தைரியம் இருக்கிறதா என வெளுத்து வாங்கினார்.
இமேஜை கெடுக்க
பின்னர் தான் பதிவிட்ட ட்வீட்டை காயத்ரி ரகுராம் நீக்கினார். தொடர்ந்து, "முட்டாள்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. குறிப்பாக எந்த 420க்கும் பதில் சொல்ல மாட்டேன். விளக்கம் தரும் அளவுக்கு வொர்த் இல்லை. என் இமேஜை எப்படி வேண்டுமானாலும் கெடுக்கலாம் என அவர்கள் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் ட்வீட் செய்யும் விதத்திலேயே அம்பலப்பட்டு வருகின்றனர்." என ட்வீட் செய்தார் காயத்ரி ரகுராம்.
பெண்கள் மீது மரியாதை இல்லை
இந்நிலையில், காயத்ரி ரகுராமின் ட்வீட்டை இணைத்து கருத்து தெரிவித்துள்ளார் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் டிஆர்பி ராஜா எம்.எல்.ஏ. அவர் தனது ட்வீட்டில், "பாஜகவினரின் மிகவும் மலிவான செயல்கள் இந்த விஷயத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அரசியல் கண்ணியம் என்பது அவர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒன்று. சங்கிகளுக்கு பெண்கள் மீது எந்த மரியாதையும் இல்லை அவர்களை அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள்" என விமர்சித்துள்ளார்.