முதல்வர் மு.க ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும்... போனில் மர்ம நபர் மிரட்டல்
சென்னையில் உள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதித்தவர் என தெரியவந்துள்ளது.
சென்னை: முதல்வர் மு.க ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு உள்ளதாகவும் அது சற்று நேரத்தில் வெடிக்கும் என்று கூறி மிரட்டல் விடுத்த இளைஞர் மனநலம் பாதித்தவர் என தெரியவந்துள்ளது. இதே நபர்தான் விஜய், தனுஷ் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக கூறி வதந்தி பரப்பியவர் ஆவர்.
சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு உள்ளது. அந்த வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் அது சற்று நேரத்தில் வெடிக்கும் என்றும் சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு தலைமை அலுவலகத்திற்கு போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் பேசிவிட்டு தொடர்பை துண்டித்தார்.

இதையடுத்து வெடிக்குண்டு நிபுணர்கள், மோப்ப நாய் கொண்டு பரிசோதனை மேற்கொண்டனர். பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரியவந்தது.
தேனாம்பேட்டை காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மிரட்டல் விடுத்த தொடர்பு எண்ணை வைத்து விசாரித்ததில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஸ்வர் என்பது தெரியவந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் விசாரணையில் தெரியவந்தது. அந்த இளைஞரின் பெற்றோரை காவல்துறையினர் அழைத்து காவல்துறையினர் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இதே நபர்தான் இதற்கு முன்பு, முன்னாள் முதல்வர் வீடு, தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வீடு, நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித், தனுஷ் ஆகியோர் வீடுகளுக்கு மிரட்டல் விடுத்தவர் என்பதும் தெரியவந்தது.
கடந்த 2018ஆம் ஆண்டு மு.க ஸ்டாலின் எதிர்கட்சித்தலைவராக இருந்த போது அவர் வீட்டில் வெடிகுண்டு வீசப்போவதாக மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தார். அதுவும் வதந்தி என விசாரணையில் தெரியவந்தது. அதே போல தற்போது முதல்வரான பின்னரும் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications