"கொசுக்கள், குப்பைகள்".. கவனிப்பின்றி கிடக்கும் பாலூட்டும் அறைகள்.. புதுப்பிக்க பொதுமக்கள் கோரிக்கை
சென்னை: தமிழ்நாடு முழுக்க பல்வேறு பேருந்து நிலையங்களில் கவனிப்பின்றி கிடக்கும் பாலூட்டும் அறைகளை புதுப்பிக்க வேண்டும், இதை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மக்களிடையே கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வு அறைகளை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
2015ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மூலம் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை. பேருந்து நிலையங்களில் குழந்தைகளுக்கு பெண்கள் பாலூட்ட வசதியாக தனி அறைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு முழுக்க இந்த திட்டம் பல்வேறு பேருந்து நிலையங்களில் அமலுக்கு வந்தது.
பெண்கள் மத்தியிலும் இந்த திட்டம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பாதுகாப்பாக பால் கொடுக்கலாம், உள்ளேயே சில நிமிடங்கள் ஓய்வு எடுக்கலாம், குழந்தைகளை வைத்துக்கொண்டு வெயிலில் உட்கார்ந்து இருக்க வேண்டியது இல்லை என்ற பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் தாய்மார்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. எப்போதும் சமூக வளர்ச்சி தொடர்பான திட்டங்களில் முன்னோடியான தமிழ்நாடு பாலூட்டும் அறை திட்டம் மூலமும் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது.

தமிழ்நாடு முழுக்க எத்தனை உள்ளது
2015ல் கொண்டு வரப்பட்ட திட்டம் படிப்படியாக தமிழ்நாடு முழுக்க தற்போது 360க்கும் அதிகமான பேருந்து நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. செயல்படும் நிலையிலும், செயல்படாத நிலையிலும் 360+ பாலூட்டும் அறைகள் தமிழ்நாடு முழுக்க பேருந்து நிலையங்களில் உள்ளது. ஆனால் தற்போது பல்வேறு பாலூட்டும் அறைகள் கொஞ்சமும் கவனிப்பாரின்றி, எந்த தூய்மை பணிகளும் மேற்கொள்ளாமல், பாதுகாப்பின்றி காணப்படுகிறது.

ஆரம்பத்தில் நல்ல நிலை
தமிழ்நாடு முழுக்க பெரும்பாலான பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறைகள் பயன்படுத்தப்படாமல், பூட்டிய நிலையில் இருக்கிறது. தொடக்கத்தில் இதை தாய்மார்கள் ஆர்வமாக பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது இதன் மோசமான நிலை காரணமாக பாலூட்டும் அறைக்கு உள்ளே செல்லவே தாய்மார்கள் சங்கோஜப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆம் அந்த அளவிற்கு சுத்தமின்றி புழுதியும், குப்பையாக பல்வேறு பாலூட்டும் அறைகள் காணப்படுகிறது.

மோசமான நிலை
இந்த பாலூட்டும் அறைகள் எல்லாம் 2 முதல் 5 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. ஆனால் இவ்வளவு செலவில் கட்டப்பட்ட இந்த அறைகள் தற்போது பேய் படங்களில் காட்டும் பழைய பங்களா போல மோசமான நிலையில் உள்ளது. இன்னும் சில பாலூட்டும் அறைகளில் நாய்கள், மாடுகள் ஓய்வு எடுப்பதும், நாய்கள் மலம் கழித்துவிட்டு அப்படியே குப்பைகளோடு அறைகள் கிடக்கின்றன.

மது பாட்டில், கொசு உள்ளது
கொரோனா காலத்தில் இந்த அறைகள் பராமரிப்பு இன்றி கிடப்பதால் பெண்கள் உள்ளே செல்ல விருப்பமின்றி வெளியிலேயே பால் கொடுக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதிலும் சில பாலூட்டும் அறைகளில் கொசுக்கள் அதிகம் இருப்பதால் பெண்கள் இதை பயன்படுத்த முடியாமல் உள்ளனர். இன்னும் சில மாவட்டங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் இரவு நேரத்தில் மது அருந்தும் கூடாரமாக கூட இந்த பாலூட்டும் அறைகள் மாறி உள்ளன.

கடந்த ஆட்சியிலேயே குற்றச்சாட்டு
பாலூட்டும் அறைகளின் நிலை இந்த ஆட்சியில் அல்ல கடந்த ஆட்சியிலேயே மோசமான நிலையை அடைந்துவிட்டது. 2017லேயே இந்த பாலூட்டும் அறைகளின் அவல நிலை குறித்து நிறைய புகார்கள் வந்தது. ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் பாலூட்டும் அறைகளில் மதுபாட்டில்கள் கிடந்ததாக 2017ல் புகார்கள் வைக்கப்பட்டு இது தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டது. இந்த பாலூட்டும் அறைகளின் அவலம் தற்போதும் தொடர்ந்து வருகிறது.

ஓய்வு அறை இல்லை
ஒரு பக்கம் பாலூட்டும் அறைகள் அவலநிலையில் இருக்கும் போது இன்னொரு பக்கம் பேருந்து நடத்துனர்கள், ஓட்டுனர்களுக்கு போதிய ஓய்வு அறைகள் இல்லாத நிலை உள்ளது. பல மணி நேரம் வேலை பார்த்துவிட்டு, இரவு நேரம் முழுக்க பஸ் ஓட்டிவிட்டு காலையில் வந்து தூங்குவதற்கு போதிய ஓய்வு அறைகள் இல்லாமல் கிடைக்கிற இடத்திலேயே ஓய்வு எடுக்கும் நிலை பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சில டிரைவர்கள் ஓய்வு நேரத்தில் பேருந்திலேயே தூங்குவது, அங்கேயே கட்டு சோறு சாப்பிடுவது போன்ற நிலையும் உள்ளது.

ராஜகண்ணப்பன் பேட்டி
இன்று செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பேருந்து போக்குவரத்து துறை புதுப்பொலிவு பெற போகிறது. துறையில் முக்கிய, நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று கூறினார். இதனால் அரசும், அமைச்சரும் பாலூட்டும் அறைகள் மற்றும் பணியாளர்களுக்கான ஓய்வு அறைகளில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என்று பொது மக்கள் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர். பல லட்சங்களில் கட்டப்பட்ட பாலூட்டும் அறைகளை கைவிடாமல், புதுப்பித்தால் அது மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்.

செய்தால் நன்றாக இருக்கும்
அம்மா உணவகத்தை அரசு தொடர்ந்து நடத்துவது போல இந்த திட்டத்தையும் அரசு தொடரலாம். ஏற்கனவே பெண்களுக்கான இலவச நகர பஸ் டிக்கெட் திட்டம் ஹிட் அடித்துள்ள நிலையில் இது போன்ற பாலுட்டும் அறை புதுப்பிப்பும் பெண்களிடையே வரவேற்பை பெறும். விரைவில் இதற்கான முன்னெடுப்புகள் செய்யப்பட்டால் மக்களிடையே அது பாராட்டுகளை பெறும் என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications