அந்த "கால்".. அதிகாலை 3 மணி வரை.. விடியவிடிய பேசிய ஓபிஎஸ் - இபிஎஸ்.. பரபரத்த மீட்டிங்..என்ன நடந்தது?
சென்னை: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் - இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ், மூத்த அமைச்சர்கள் இடையே நேற்று இரவு விடிய விடிய ஆலோசனை நடந்துள்ளது.. தூக்காமல் இவர்கள் இரவு முழுக்க பேசியது என்ன என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் எல்லோரும் உடனே சென்னையில் இருக்க வேண்டும்.. என்ன செய்து கொண்டு இருந்தாலும் அதை எல்லாம் விட்டுவிட்டு உடனே இன்று மாலையே சென்னைக்கு வந்துவிடுங்கள் என்று அதிமுக தலைமை சார்பாக நேற்று மதியம் உத்தரவிடப்பட்டு இருந்தது.
வாய் மொழி உத்தரவாக ஒவ்வொருவருக்கும் போன் கால் செய்து இந்த உத்தரவு சென்று இருந்தது. இதை தொடர்ந்து நேற்று இரவு அதிமுக கட்சி கூட்டம் நடைபெற்றது.
கூட்டம்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகிய நிலையில் இந்த அவசர கூட்டம் நடைபெற்றது. மூன்று முக்கியமான விஷயங்களை மையமாக வைத்து இன்று கூட்டம் நடைபெற்று உள்ளது. முதல் விஷயம் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது. பாமகவிற்கு ஒதுக்கப்பட வேண்டிய 23, பாஜகவிற்கு ஒதுக்கப்பட வேண்டிய 20 தொகுதிகளை தேர்வு செய்வது முதல் நோக்கம்.
இரண்டாவது நோக்கம்
இது போக தேமுதிகவுக்கு கொடுப்பதாக வைத்து இருந்த 13 உத்தேச தொகுதிகளை என்ன செய்வது, யாருக்கு கொடுப்பது என்று ஆலோசனை செய்வது இரண்டாவது நோக்கம். இதில் நேற்று 11 மணிக்கு முன்னதாகவே பாமக, பாஜகவிற்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளை அதிமுக உறுதி செய்துவிட்டது. தேமுதிக விலகல் குறித்தும் பேசிவிட்டனர். ஆனால் அதன்பின் நீண்ட நேரம் மீட்டிங் நடந்துள்ளது.
கருத்து வேறுபாடு
இதில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால் சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மட்டும் குழப்பம் இருந்துள்ளது. இபிஎஸ் சிலரின் பெயரை சொல்ல, ஓபிஎஸ் வேறு சிலரின் பெயரை கூறியுள்ளார். ஆனால் நேற்று இரவே வேட்பாளர் தேர்வை முடிக்க வேண்டும் என்பதில் இரண்டு பேருமே உறுதியாக இருந்துள்ளனர்.
முடிவு
இதையடுத்தே அதிகாலை 3 மணி வரை மீட்டிங் நடந்துள்ளது. கால் செய்து வரவைக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களும் மீட்டிங்கில் விடிய விடிய ஆலோசனை செய்தனர். இதன் முடிவில் அதிமுகவின் வேட்பாளர்களை ஒரு வழியாக தேர்வு செய்துள்ளனர். வேட்பாளர் தேர்வில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியது இருந்தாலும் முழுமையான வேட்பாளர் பட்டியல் தயாராகிவிட்டது என்றே கூறுகிறார்கள்.
வேட்பாளர் பட்டியல்
பெரிய அளவில் கருத்து மோதல் , மனஸ்தாபம் இல்லாமல் சுமுகமாக இந்த தொகுதிகளை தேர்வு செய்துள்ளனர். இதனால் அதிமுக இன்று கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அறிவுக்கும். அதை தொடர்ந்து இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் இன்றே அதிமுக வெளியிட வாய்ப்புகள் உள்ளன.