பிரமாண்ட நிகழ்ச்சியின் ஹீரோ.. நேரமே இல்ல.. புது தொழில்நுட்பங்களை கொண்டுவந்து அசத்திய விக்னேஷ் சிவன்!
சென்னை : செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா மிகச் சிறப்பாக அரங்கேறியதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் இயக்குநரான விக்னேஷ் சிவன், தமிழக அரசின் நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறார்.
Recommended Video
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் இடம்பெற்ற பிரமாண்ட கலை நிகழ்ச்சி உள்ளிட்ட செயல்பாடுகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் தான் தனது அணியினரோடு மேற்கொண்டார்.
குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி என்பதால், சொதப்பல்கள் நிகழக்கூடும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், எல்லோரும் வியக்கும் வண்ணம் திட்டமிட்டு நடத்தி, அனைவரின் பாராட்டுகளையும் பெற்று விட்டார் விக்னேஷ் சிவன்.

செஸ் ஒலிம்பியாட்
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாய்ண்ட் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது. இதில் 186 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி செஸ் கட்ட கரை வேட்டி, துண்டு மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி சட்டையுடன் கலந்துகொண்டனர்.

பிரமாண்ட நிகழ்ச்சிகள்
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் இந்தியாவின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டும் வகையில் தமிழ்நாடு, கேரளா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களின் பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டன. கமல்ஹாசன் குரலில் உருவாக்கப்பட்ட தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், பெருமையை உணர்த்தும் நிகழ்த்துக்கலை அனைவரையும் பிரமிக்க வைத்தது. அதேபோல் லிடியன் நாதஸ்வரத்தின் இசை நிகழ்ச்சி, மணல் ஓவியங்கள் என அனைத்து விஷயங்களும், விழாவைப் பார்த்த அத்தனை பேரையும் வியக்க வைத்தது.

குறுகிய காலத்தில்
இந்த பிரமாண்ட விழா பாராட்டப்படுவதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு. இந்த தொடக்க விழா குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியாகும். 186 நாடுகள் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கே கடந்த நான்கு மாதங்களில் தான் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. நிலைமையை உணர்ந்து வெறும் 10 நாட்களிலேயே தொடக்க விழா, சர்வதேச தரத்தில் பிரமாண்டமாக உருவாக உழைத்தது விக்னேஷ் சிவன் டீம். ஏற்கனவே செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பர வீடியோ பாடலையும் இயக்கி இருந்த அவர், தொடக்க விழாவையும் சிறப்பாக கையாண்டார்.

3டி ஏற்பாடுகள்
தமிழரின் பண்பாட்டையும், வரலாற்றுப் பெருமையையும் உணர்த்தும் நிகழ்த்துகலை, தரைதளத்தில் அமைக்கப்பட்டிருந்த 3டி தொழில்நுட்ப திரை ஆகியவை பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. தரையில் அமைக்கப்பட்டிருந்த 3டி நுட்பம் இந்தியாவில் இதுவரை யாரும் பயன்படுத்தாத தொழில்நுட்பம் எனவும், துபாய் போன்ற வெளிநாடுகளில் பயன்படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பத்தை நன்கு அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி இருப்பதாகவும் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

நிகழ்ச்சியின் ஹீரோ
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் விக்னேஷ் சிவன் தனது அட்டகாசமான நிகழ்ச்சி ஏற்பாடுகளால், 'நிகழ்ச்சியின் ஹீரோ'வாகவே பாராட்டப்பட்டார் என்றால் அது மிகையாகாது. தமிழ் பாரம்பரியத்தை வெளிப்படுத்திய இந்த நிகழ்ச்சி பலரையும் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பான உருவாக்கத்தை அடுத்து திரையுலகினர் உட்பட பல்வேறு தரப்பினரும் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பாராட்டிய ரஜினிகாந்த்
நிகழ்ச்சி முடிந்தவுடன் ரஜினிகாந்த் தன்னை அழைத்து அவரது பணியை பாராட்டியதாக விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்தார். விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்தச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். "நினைவில் கொள்ள வேண்டிய நிகழ்வு. நிகழ்வின் போது நேரில் பாராட்டியதற்காக ரஜினிகாந்த் சாருக்கு நன்றி. நிகழ்வு முடிந்த உடனேயே தொலைபேசியிலும் அழைத்து பாராட்டியது இந்த நாளை இன்னும் அழகாக்கியது." எனக் குறிப்பிட்டிருந்தார்.

கார்த்தி பாராட்டு
இந்த செஸ் தொடக்க விழா நிகழ்ச்சியை சிறந்த கலாச்சார நிகழ்ச்சி என்று பாராட்டிய நடிகர் கார்த்தி, "நமது அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அருமையான தொடக்க விழா. தமிழ் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கலாச்சார நிகழ்ச்சியை விக்னேஷ் சிவன் சிறப்பாக ஒருங்கிணைத்தது சிறப்பம்சமாக இருந்தது. அனைத்து வீரர்களுக்கும் பெரிய வரவேற்பு மற்றும் வாழ்த்துகள் அனைத்து கலைஞர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

திரையுலகினர் உற்சாகம்
செஸ் ஒலிம்பியாட் ப்ரொமோஷன் பாடலுக்கு நடன அமைப்பாளராகப் பணியாற்றிய பிருந்தா மாஸ்டர் உள்ளிட்டோரும் விக்னேஷ் சிவனின் ஒருங்கிணைப்பை வெகுவாகப் பாராட்டினர். நடிகர்கள் கிருஷ்ணா, ஹரிஷ் கல்யாண், கௌதம் கார்த்திக் ஆகியோரும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி பிரமாண்டமாக இருந்ததாகவும், நிகழ்ச்சியை வெகுவாக ரசித்ததாகவும் பாராட்டியுள்ளனர். திரையுலகினர் மட்டுமல்லாது, நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்த பொதுமக்கள் பலரும் விக்னேஷ் சிவனை பாராட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications