ரூ.5800 கோடி..மதுரவாயல் - துறைமுகம் டபுள் டக்கர் சாலை..மத்திய சுற்றுசூழல் நிபுணர் குழு அனுமதி
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மதுரவாயல் முதல் துறைமுகம் வரையில் 20.5 கி.மீட்டர் தூரத்திற்கு ஈரடுக்கு உயர்மட்ட பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட பாலம் அமைக்க நிபந்தனைகளுடன் ஒன்றிய அரசின் சுற்றுசூழல் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.5800 கோடியில் மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் வரையிலான பறக்கும் சாலை திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் குழு அனுமதி வழங்கியது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திட்டம் மீண்டும் புத்துயிர் பெறுகிறது.
சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை 19 கிலோமீட்டர் தூரத்தில் உயர்மட்ட பறக்கும் சாலை அமைக்க வேண்டும் என்பது பல ஆண்டு கனவாக இருந்து வருகிறது. கனரக வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி விரைவாக துறைமுகத்திற்கு சென்று வர முடியும். இதன்மூலம் சென்னை நகரின் போக்குவரத்து நெரிசல் குறையும். இதற்கான திட்டம் கடந்த 2009ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.
15 சதவீதப் பணிகள் முடிவடைந்த நிலையில் 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி வந்தது. இந்த காலகட்டத்தில் துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் முடங்கியது. பல்வேறு காரணங்களால் பணிகள் நடைபெறவில்லை.
கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து, புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். இந்த பறக்கும் சாலை திட்டத்தை சில மாற்றங்களுடன் செயல்படுத்த குழு அமைத்து பரிசீலனை செய்வதாக தெரிவித்தார். இருப்பினும் பெரிதான முன்னேற்றங்கள் ஏதும் இல்லை.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்துள்ளது. எனவே கருணாநிதி காலத்தில் கொண்டு வரப்பட்டு முடங்கி கிடக்கும் திட்டங்களுக்கு உயிர் கொடுக்க முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் பதில் அளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் சில மாறுதல்களுடன் செயல்படுத்த பரிந்துரைக்கப்பட்டது உண்மை தான். இரண்டு அடுக்குகளாக மொத்தம் 20.565 கிலோமீட்டர் தூரத்திற்கு பறக்கும் சாலை அமையவுள்ளது. இது நான்கு பகுதிகளாக பிரித்து செயல்படுத்தப்படுகிறது. இதற்கான மொத்த செலவு 5,611.70 கோடி ரூபாய்.
இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. வரும் மார்ச் 2023க்குள் டெண்டர் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு வேலைகள் விறுவிறுவென தொடங்கிவிடும். சென்னை துறைமுகம் - மதுரவாயல் திட்டம் பிரதம மந்திரியின் காதி - சக்தி நேஷனல் மாஸ்டர் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை திட்டத்திற்கான பணிகள் தொடங்கியதில் இருந்து அடுத்த 30 மாதங்களில் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட பாலம் அமைக்க நிபந்தனைகளுடன் ஒன்றிய அரசின் சுற்றுசூழல் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.5800 கோடியில் மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் வரையிலான பறக்கும் சாலை திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் குழு அனுமதி வழங்கியுள்ளது.
உயர்மட்ட பாலத்திற்காக எழுப்பப்படும் பில்லர்களால் மழை மற்றும் சாதாரண காலங்களில் நீரோட்டத்திற்கு தடை ஏற்பட கூடாது. பாலம் அமைக்க தற்காலிகமாக அமைக்கப்படும் கட்டமைப்புகள் பணிகள் முடிந்த ஒரு மாதத்திற்குள் அகற்றப்பட வேண்டும். கட்டுமானத்தின் போது அகற்றப்படும் கழிவுகளை நீர் நிலையிலோ அல்லது அதற்கு அருகிலோ கொட்டக் கூடாது. என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் திட்டத்திற்கு அனுமதி வழங்கி மத்திய அரசுக்கு சுற்றுசூழல் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
மதுரவாயல், கோயம்பேடு, அரும்பாக்கம், நுங்கம்பாக்கம், அமஞ்சிகரை, எழும்பூர், சிந்தாதிரிபேட்டை வழியாக துறைமுகத்தை சென்றடைய உள்ளது. சென்னை துறைமுகம் மதுரவாயல் இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் மதுரவாயல் முதல் துறைமுகம் வரையில் 20.5 கி.மீட்டர் தூரத்திற்கு ஈரடுக்கு உயர்மட்ட பாலம் அமைக்க முடிவு செய்த தமிழக அரசு அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, 1,815 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்த பாலம் 15 ஆண்டுகளுக்குப்பிறகு கூடுதல் நிதி மற்றும் செயல் திட்டங்களின் மூலம் மறுபடியும் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மீண்டும் திட்டம் செயல்பாட்டிற்கு வருகிறது. சுற்றுசூழல் நிபுணர் குழுவின் நிபந்தனைகளுடன் விரைவில் பணியை தொடங்கி அடுத்த 30 மாதங்களுக்குள் பணியை முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பறக்கும் சாலை திட்டம் முடிவுக்கு வரும் போது சென்னை துறைமுகம் மதுரவாயல் இடையே போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.