தமிழகத்தைப் புரட்டி எடுக்கும் கனமழை... பாதிப்பு நிலவரம் என்ன? ஆய்வு செய்ய வரும் மத்திய குழு!
சென்னை: தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையிலான மத்தியக் குழு தமிழ்நாடு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளைப் போல இல்லாமல் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏரி, குளம் நிறைந்து வரும் போதிலும், மாநிலத்தின் பல பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
'இதுதான் இந்தியா'.. முஸ்லிம்கள் தொழுகை செய்வதற்காக 5 குருத்வாராக்களை வழங்கிய சீக்கியர்கள்.. செம!
கனமழை
கடந்த நவ. 7ஆம் தேதி சென்னை உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியது. குறிப்பாகத் தலைநகர் சென்னையில் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அந்த சமயத்தில் பெய்த கனமழையால் சென்னை மட்டுமின்றி மாநிலத்தின் பல பகுதிகளும் வெள்ளத்தால் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டன.
12 மாவட்டங்கள்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 12ம் தேதி முதல் தொடர் கனமழை பெய்தது. குறிப்பாகச் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் கடும் சேதங்களைச் சந்தித்தது. மாநிலத்தில் மொத்தமாக 25 மாவட்டங்கள் கனமழையால் பாதித்ததைக் கணக்கிட்ட தமிழக அரசு அதனை அறிக்கையாகத் தயார் செய்து நேற்றைய தினம் திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர் பாலு மூலமாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஒப்படைத்தது.
மத்தியக் குழு
அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சேதங்களைப் பார்வையிட 6 பேர் கொண்ட குழு தமிழகம் அனுப்பப்படும் எனத் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இதற்கான குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையில் மத்திய வேளாண் அமைச்சகம், நிதி அமைச்சகம், மின்துறை அமைச்சகம், சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், நீர்வளத்துறை அமைச்சகம் மற்றும் ஊராக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
ஒரு வாரத்தில் அறிக்கை
மழையால் ஏற்பட்ட பாதிப்பு, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் என அனைத்தையும் விவரம் அறிந்த அதிகாரிகள் மூலம் கணக்கிட ஒவ்வொரு துறை சார்ந்த அதிகாரிகள் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். மேலும், ஏற்கனவே தமிழக அரசு மத்திய அரசிடம் 2,079 கோடி ரூபாய் நிவாரணம் கேட்டுள்ள நிலையில் அதனையும் கருத்தில் கொள்ளும் வகையில் நிதி அமைச்சகத்தின் அதிகாரிகளும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். மாநிலத்தின் பாதிப்பு நிலை கருதி இக்குழு உடனடியாக ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளத் தமிழகம் செல்வார்கள் என்றும், ஆய்வுப் பணிகள் முடிந்த ஒரு வாரத்திற்குள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.