மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ்... இனி ஆன்லைனில் வழங்கப்படும்.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழை இனி அனைத்து மாநிலங்களும் கட்டாயம் ஆன்லைனில் மட்டுமே வழங்க வேண்டும் என சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு எனப் பல சிறப்புத் திட்டங்கள் உள்ளன. ஆனால், அந்தத் திட்டங்களின் பலன்களைப் பெற ஒருவருக்க மாற்றுத்திறனாளி சான்றிதழ் அவசியமாகும்,
இத்தனை காலமாக இந்த சான்றிதழை மாற்றுத்திறனாளி ஒருவர் நேரடியாக அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. அலுவலகங்களிலும் காலதாமதங்கள் ஏற்படும் என்பதால் இதனால் மாற்றி திறனாளிகள் பெரும் துன்பத்தை எதிர்கொண்டனர்.
இந்த சான்றிதழை ஆன்லைனில் பெறும் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இதற்கான அறிவிப்பை மாற்றுத்திறனாளிகள் அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
இது குறித்து மாற்றுத்திறனாளிகள் துறை அமைச்சகம் தனது ட்விட்டரில், "ஜூன் 1 முதல் யுடிஐடி UDID தளத்தைப் பயன்படுத்தி மட்டுமே ஆன்லைன் முறையில் மாற்றுத் திறனாளிகளுக்குச் சான்றிதழை வழங்க வேண்டும். அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களும் கட்டாயம் இந்த முறையை மட்டுமே பின்பற்ற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசு இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதன் மூலம் மாற்றுத் திறனாளி ஒருவர் பத்திரமாக வீடுகளில் இருந்தவாறே தனக்குத் தேவையான சான்றிதழைப் பெற முடியும்.
நாடு முழுவதும் இனி மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குத் தேவையான சான்றிதழ்களைப் பெற அலுவலர்களுக்குச் செல்ல தேவையில்லை. இதற்கான அரசாணையை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டது.