இனி எக்ஸிட் கேட் தான்.. கொடுத்த சான்ஸை கெடுத்துக்கிட்டாரு.. அதிரடி திட்டத்தில் எடப்பாடி.. போச்சா?
சென்னை : ஓ.பன்னீர்செல்வத்தோடு இனி சமரச பேச்சு என்பதற்கே வேலையில்லை, பதவி நீக்கம் உறுதி என விடாப்பிடியாக இருக்கிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு.
கடந்த ஜூன் 14ஆம் தேதி முதல் அதிமுக உட்கட்சிப் பூசலால் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் தங்கள் ஆதரவாளர்களோடு பரபரவென ஆலோசனைகளில் ஈடுபட்டு வந்தனர். இருவரின் ஆதரவாளர்களும் எதிர் தரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால், தனது பதவியை விட்டுக்கொடுக்க முடியாது என முஷ்டியை முறுக்கிய ஓபிஎஸ், தொடர்ச்சியாக சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருவதால், இனி அவருக்கு எக்சிட் கேட் தான் வழி என்கிறார்கள் ஈபிஎஸ் ஆதரவாளர்கள்.

பொதுச் செயலாளர்
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி மீண்டும் வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. ஒற்றைத் தலைமை என்பதில் உறுதியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அணியினர் இந்தப் பொதுக்குழுவில் ஈபிஎஸ்ஸுக்கு பொதுச் செயலாளராக பட்டம் சூட்டுவது என்பதில் தீர்மானமாக இருந்து வருகின்றனர். கடந்த பொதுக்குழு கூட்டத்திலேயே அதை முடிவு செய்ய தீர்மானித்தும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றத்தின் வாயிலாக முட்டுக்கட்டை போட்டதால் அது நிறைவேறாமல் போனது.

கூடுதல் பலம்
ஆனால், இந்த முறை அந்த திட்டத்தில் மாற்றமே இருக்காது எனச் சூளுரைக்கிறார்கள் எடப்பாடி தரப்பினர். கடந்த முறையை விட ஆதரவு தங்களுக்கு அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். அப்போதாவது, மொத்தமுள்ள 2665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2190 பேரிடம் தான் ஒற்றைத் தலைமைக்கு ஆதரவாக கையெழுத்திட்டு கடிதம் வாங்கியிருந்தது எடப்பாடி தரப்பு. ஆனால், இப்போது சுமார் 2,500 பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்துடன் கூடிய கடிதங்களைப் பெற்று தயாராக வைத்திருக்கிறார்களாம்.

சமரச பேச்சுவார்த்தைகள்
ஜூன் 14ஆம் தேதி ஒற்றைத் தலைமை பிரச்சனை வெடித்தது முதலே எடப்பாடி பழனிசாமி சார்பாக அடுத்தடுத்து தம்பிதுரை, செங்கோட்டையன், முனுசாமி உள்ளிட்ட பலர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், யாருடைய சமாதானத்தையும் ஏற்றுக்கொள்ளாத ஓபிஎஸ், ஒற்றைத் தலைமையை ஆதரிக்கவே முடியாது என்று பிடிவாதமாக இருந்துவிட்டார். தலைமைப் பதவியை எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுக்கொடுத்தால் பொருளாளர் உள்ளிட்ட 4 முக்கிய பதவிகளை நீங்கள் வைத்துக்கொள்ளலாம் என்றும் பேரம் பேசப்பட்டது.

பிடிகொடுக்காத ஓபிஎஸ்
ஆனால், ஈபிஎஸ் தரப்பினரின் எந்த பேச்சுவார்த்தைக்கும் ஓபிஎஸ் பிடிகொடுக்கவில்லை. இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என ஒற்றைக் காலில் நின்றார். ஆனால், அடுத்த சில நாட்களில் காட்சிகள் மாறின. ஆதரவாளர்களாக இருந்த பலரும் எதிர் தரப்பான எடப்பாடி பழனிசாமி கேம்ப்புக்கு டைவ் அடித்தனர். இது அவரது தரப்புக்கு கடுமையான பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோரே ஓபிஎஸ்ஸிடம் இருக்கும் முக்கியமான கைகள்.

தொடர்ந்து நீதிமன்றத்தில்
ஜூன் 23 பொதுக்குழுவிற்குப் பிறகாவது தன் நிலை உணர்ந்து, எடப்பாடி பழனிசாமியோடு ஓபிஎஸ் இணக்கமாவார் என ஈபிஎஸ் தரப்பு எதிர்பார்த்த நிலையில், டெல்லிக்கு முருங்கை மரம் ஏறிய ஓபிஎஸ், தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தாக்குதல்களைத் தொடங்கிவிட்டார். இதனால், இனி பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என ஈபிஎஸ் தனது ஆதரவாளர்களிடம் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

பொருளாளர் பதவியையும்
ஓபிஎஸ் டெல்லிக்குச் சென்றதால் கடுப்பான எடப்பாடி தரப்பினர், ஓபிஎஸ் வகிக்கும் ஒருங்கிணைப்பாளர் பதவியே செல்லாது என்றும் கட்சி சட்ட விதிகளைக் குறிப்பிட்டு அறிவித்தனர். மேலும், ஓ.பன்னீர்செல்வம் வகிக்கும் பொருளாளர் பதவியையும் பறிப்பதற்கு திட்டமிட்டு வருகின்றனர். அந்தப் பதவியைப் பெறுவதற்கும் எடப்பாடி அணியில் பெரும் போட்டியே நடந்து வருகிறது.

கட்சியை விட்டு
மேலும், அ.தி.மு.கவில் கட்சிக்கு விரோதமாக யாரேனும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கலாம் என்பது கட்சி விதி என்பதால், அ.தி.மு.க.வில் இருந்தே ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி வெளியேற்றி விடலாம் என்றும் ஓபிஎஸ் மீது கடுமையான கோபத்தில் உள்ள சில சீனியர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்துள்ளனராம்.

அதிரடி முடிவுகள்
எப்படியும் பொதுக்குழு நடத்த சாதகமான முடிவு வரும் என்பதால், பொதுக்குழுவில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. கட்சி விதிகளில் கொண்டு வரப்பட இருக்கும் திருத்தங்கள் குறித்தும் சட்ட வல்லுநர்களோடு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கட்சி முழுக்க முழுக்க தனது அதிகாரத்தின் கீழ் இருக்கும்படி சட்டத் திருத்தங்கள் அமையும் வகையில் ஈபிஎஸ் பார்த்துக் கொள்ளவிருக்கிறாராம்.
Recommended Video

பொதுக்குழுவில்
ஓ.பன்னீர்செல்வம் தற்போது பொருளாளர் பதவியில் இருப்பதால் அவருக்கும் பொதுக்குழு அழைப்புக் கடிதம் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவியை பறிக்கும் தீர்மானமும் இந்த பொதுக்குழுவில் கொண்டு வரப்படலாம் எனக் கூறப்படும் நிலையில், கடந்த முறை போல ஓபிஎஸ் பொதுக்குழுவிற்குச் செல்வாரா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.












Click it and Unblock the Notifications