ஆரம்பிச்சிட்டாங்கல்ல.. அந்த "4 பேரை" மாற்றியே தீரனும்.. ஜோதிமணி, விஜயதரணியுமா? பரபர காங்கிரஸ்
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர்களை மாற்ற வேண்டும் என்ற கோஷம் போல, செயல் தலைவர் மாற்றமும் காங்கிரசில் உரத்துக் கேட்கிறது.
திருவிளையாடல் திரைப்படத்தில் இடம் பெற்ற, பிரிக்க முடியாதது எதுவோ.. என்ற கேள்வியை இப்போது கேட்டால், "காங்கிரசும் கோஷ்டியும்" என்பதுதான் எல்லோர் பதிலாக இருக்க முடியும்.
தொண்டர்களை விட தலைவர்கள் அதிகம் உள்ள கட்சி என்று அரசியல்வட்டாரத்தில் காங்கிரஸ் பற்றி ஒரு பேச்சு உண்டு. அதை நிரூபிக்கும் விதமாக அடுத்தகட்ட கோதா அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. மேட்டர் இதுதான்.

காங்கிரஸ் செயல் தலைவர்கள்
தமிழக காங்கிரசில் தலைவராக கே.எஸ்.அழகிரி உள்ளார். செயல்தலைவர்களாக வசந்தகுமார், டாக்டர் விஷ்ணுபிரசாத், டாக்டர் ஜெயக்குமார், மயுரா ஜெயகுமார், மோகன் குமாரமங்கலம் ஆகிய 5 பேர் நியமிக்கப்பட்டனர். இதில், வசந்தகுமார், துரதிருஷ்டவசமாக, கொரோனா பாதிப்பால் உயிரிழந்துவிட்டார்.

விஜய் வசந்த் கோரிக்கை
இப்போது அந்த இடம் காலியாக இருக்கிறது. கன்னியாகுமரி எம்.பி.யாக இருந்த வசந்தகுமார் மறைந்ததால், அந்த தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் வசந்தகுமாரின் மகன் விஜய்க்கு வாய்ப்புத் தந்தது காங்கிரஸ் மேலிடம். விஜய்யும் வெற்றிப் பெற்றார். இந்த நிலையில், தனது அப்பா வகித்த செயல் தலைவர் பதவியை தனக்குத் தாருங்கள் என ராகுல்காந்தியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் விஜய்.

தேர்தலில் தோல்வி
அதேபோல, செயல்தலைவர்களாக இருக்கும் மயூரா ஜெயக்குமார் மற்றும் மோகன் குமாரமங்கலம் இருவருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. இருவரும் தோற்றுப் போய்விட்டனர். அதனால் அவர்களை செயல் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் ; இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரசின் தலைவர்களின் வாரிசுகள் டெல்லியில் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இவர்கள் எம்.எல்.ஏ.வாக வெற்றிப்பெற்றிருப்பது கோரிக்கைக்கு வலு சேர்க்கிறதாம்.

ஒருவருக்கு ஒரு பதவிதான்
இதுதவிர, தங்களின் வாரிசுகளுக்காக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.ஆர்.ராமசாமி, ஜே.எம்.ஆரூண் உள்ளிட்ட தலைவர்கள் தங்களின் டெல்லி செல்வாக்கை பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே, செயல் தலைவர்களாக இருக்கும் டாக்டர்கள் விஷ்ணு பிரசாத் மற்றும் ஜெயக்குமார் இருவரும் எம்.பி.யாக இருப்பதால், 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற முழக்கத்தை முன்னிறுத்தி, செயல்தலைவர் பதவியிலிருந்து அவர்களை நீக்கிவிட்டு, புதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கோஷ்டி அரசியலில் சிக்காதவர்களுக்கும், இதுவரை எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளை வகிக்காதவர்களுக்கும் என்ற அளவுகோலின் படி செயல் தலைவர்களை நியமியுங்கள் என்கிற கோரிக்கைகளும் காங்கிரசில் வலுத்து வருகிறது.

ஜோதிமணி, விஜயதரணி
இந்த கோரிக்கைகள், சோனியா மற்றும் ராகுலுக்கு மின்னஞ்சல் வழியாகவும், கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மூலமாகவும் அனுப்பு வைக்கப்பட்டுள்ளன. தலைவர் மற்றும் செயல்தலைவர்கள் மாற்றப்பட வேண்டி நடக்கும் பஞ்சாயத்துகளை அறிந்த ஜோதிமணி எம்.பி. , விஜயதாரணி எம்.எல்.ஏ. உள்ளிட்ட மகளிர்கள் சிலரும் இந்த பதவிகளை கைப்பற்றும் கோதாவில் குதித்துள்ளனர். ஆனால் ஒருவருக்கு ஒரு பதவி லாஜிக்கை இவர்களிடம் பார்த்தால் பதவி கிடைக்கப்போவது கிடையாது. இருப்பினும் துண்டை போட்டு பார்ப்போம் என்று களத்தில் இறங்கியுள்ளார்களாம். இதனால் ஆட்டம் அனல் பறக்கிறது.












Click it and Unblock the Notifications